• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,353 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

முதல் பதிவு: வினவு

 

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!


கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் அணு உலையினால் மின்சாரம் கிடைத்து அதனால் மின்வெட்டு போய் விடும் என்ற அரசு மற்றும் தினமலர்(ம்) போன்ற ஊடகங்களின் நச்சுப் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்ட பாடல்.

*******************************

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கூடங்குளம் இயங்கினாக்க மறைந்திடுமா பவரு கட்டு…!

இதுக்குமுன்னே ஏண்டா இல்ல இத்தன நேரம் பவரு கட்டு…!

அந்த அணு உலையை இயக்குறதுக்கு அரசு போடும் சாட்டுக்கட்டு!

அந்த ஆய்வு குழு நாலுபேரும் அம்மாவோட நாடக செட்டு!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

சிறுதொழில் விவசாயம் பாதி நாலு மின்வெட்டு

பென்சருக்கும் ஹுண்டாய்க்கும் பல்லாயிரம் மெகாவாட்டு

அந்த அணு உலையை இயைக்கி புட்டா நிக்காதாம் பம்புசெட்டு

சொல்லுற ஆர்-எஸ்-எஸ்ஸும் காங்கிரசும் பன்னாட்டுக்கு மைக்கு செட்டு….

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…!

சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

அட மாப்பிள்ளைகு எய்ட்ஸ்ன்னு மனவரையில தெரிஞ்சுட்டு

நீ மாலபோட சொல்லுவியா… நீ பெத்த மகளுக்கு….!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

****************

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

தோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்!

மக்கள் மொழியில்

மார்க்சியம் சொன்னவர் – சீனப்

பழங்கதை சொல்லி

பாமரர் மனதில் நின்றவர்!

முரண்பாட்டுத் தத்துவத்தை

செழுமைப்பெற செய்தவர்!

செஞ்சீனம் படைத்திட

செம்படை அமைத்தவர்!

பாட்டாளி வர்க்க விடுதலைக்கு

பண்பாட்டுப் புரட்சியைத்

தொடங்கியவர் – எம்

விடுதலைப்பாதையில்

உன் சிந்தனை ஒளிவெள்ளம்!

தோழர் மாவோ நினைவு தினத்தை(செப்டம்பர் 9 -1976)

முன்னிட்டு 

*******************

மாவோ புகைப்படம்:  தோழர் விடுதலை

தொடர்புடைய பதிவுகள்:

மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!

பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை

தினமணி மட்டுமல்லாது சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகளும், திருமாவளவன் போன்ற  ‘போராளி’களும் பாரதி பஜனையில் மக்களை மயக்க எத்தணிக்கின்றனர். இதிலிருந்து தெளிவு பெறும் விதமாக அசுரன் வலைத்தளத்தில் வந்த கட்டுரையினை இன்றைய சூழலில் அவசியம் கருதி வெளியிடுகிறோம்.

*************************************

பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்

1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.
தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் “டயர் மடையன்” போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.
அதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.
“மாட்சிமை தாங்கிய” கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட “தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு” சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.
பாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.
கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.
மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.
அப்பாட்டு
“அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே….இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ….உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்பதாகும்.
இந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம ‘சத்திய ஆவேசம்’ கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.
8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், ‘நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை’ என்று எழுதினார்.
1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.
பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், ‘ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்’ என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.
2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே “தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி” என்று எழுதியதில்தான் ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான’ விதை இருக்கிறது.
3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?
4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து ‘நாலு குலங்கள் அமைத்தான் – அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்’ எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா?
5) “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்றும் “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது?
6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது “சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்”, “என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!” எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. ‘ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்’ என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை “வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்” எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா?
இல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.
1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை “பெருந்தன்மை” எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்” என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.
தன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே “மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார்? பாரதிக்கு ‘அக்கிரகாரம் மட்டுமே தேசம்’ என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.
வெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் “ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது” எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி? ‘நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே’ எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது?
7) “சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்” என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே!. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார்? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்!
எவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.
8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய “ஈனப் பிறவி”, “கொழுப்பு” எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.
பார்ப்பனர் மனைவியிடம் நாராயணப்பிள்ளை உறவு வைத்திருந்ததை மலர்மன்னன் “கொழுப்பு” என்கிறார். பார்ப்பனரின் மனைவியிடம் தகாத செயல் செய்வது ‘கொழுப்பு’ என்றால், இன்றைக்கு வேலை பார்ர்க்கும் இடங்களில் நடப்பவற்றுக்கு, சிறு பட்டறைத் தொழிலாளிகளிடம், அச்சுக் கோர்க்கும் தொழிலாளிகளிடம் முயற்சி நடந்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? – இது மலர்மன்னனுக்கு புரியும்.
“பாரதிதாசன், பாரதியை ‘அய்யர்’ என்று மரியாதையுடன் (!) அழைத்தார்” என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, ‘அய்யர்’ என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. உடனே மலர்மன்னன், பெங்களூரில் தான் தோசை சாப்பிடுவதே தலித் காலனியில்தான் என்றும், காலனியில் முந்தா நாள் வைத்த மீன் குழம்பை அகப்பையோடு சாப்பிடுவேன் என்றும் பாவண்ணனை சாட்சிக்கு அழைப்பார். இதெல்லாம் ஒருவித முன்னேற்பாடுதான். பெங்களூரில் நடந்த சுந்தரராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், ‘எங்கள் வீட்டில் சு.ரா. தோசை சாப்பிட்டார்’ எனச் சொல்லி எழுத்தாளர்கள் தேம்பித் தேம்பி அழுதது, பின்னாளில் என்ன நடக்கக்கூடும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.
10) ‘ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்’ எனத் தலித் மக்களை ‘ஈனர்’களாய்ப் பார்த்தவர்தானே பாரதி? வேறொரு இடத்திலே ‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்’ எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?
11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் “அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்” என்று கோரஸ் பாடுவது வழக்கம்.
இதற்கு மதிமாறன் “பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால்? பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்” எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.
12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் “இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்?
முஸ்லிம்களை “வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்” என்றும், அவர்களின் செயல்களாக “ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்” என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.
சிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட “வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே” என்று பாடி வைத்து, குரானை ‘பேதை’ நூல் என்று சொல்லியவர்தான்.
13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். “அச்சிறுமிகள் ‘ஆண்டவன்’ என்றும் ‘ஏசுநாதன்’ என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம்!” என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் “மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்” என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.
முன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது “சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது..” என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.
துவேஷத்துக்கு ஓர் எல்லையில்லையா? மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.
பாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.
கேள்வி:- “இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது?”
பதில்:- “பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது”
மேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.
14) மலர்மன்னனின் பார்வையில் ‘பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்’. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது “அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது” என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.
ஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.
இதே பெரியார்(?)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட ‘பெட்டைப் புலம்பல்’ என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் “ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து” என்றும், “பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்” என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.
பெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை? எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா?
‘சிறந்த பெண்மணி’ எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா?”(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்” என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.
15) ‘வாழ்க நீ எம்மான்’ எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த ‘ஒத்துழையாமை’ தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் ‘அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்’ வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா? அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா?
16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாரா?சாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா?
17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா?
சாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா?
தமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.
வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.
பாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த ‘இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்’ சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.
‘நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்?’ என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.
“திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.
ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்.”
18) பின்னிணைப்பு:
கடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-
om sakthi
———-
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency’s Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency’s
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் – மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் – வாலாசா வல்லவன்
3) ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் – விளக்கமும்
**************************************
 =====xxx==== =====xxx==== =====xxx====
  நன்றி, கற்பக விநாயகம்!
முதல் பதிவு: அசுரன் 
*****
தொடர்புடைய பதிவுகள்:

உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக!

சுதந்திரமான  நீதித்துறை? ஊழலற்றநீதிபதிகள்?

நீதிமறுக்கப்பட்டமக்கள்

உயர்நீதிமன்ற150வதுஆண்டுவிழாயாருக்காக!

 அன்பார்ந்த வழக்குரைஞர்களே, பொதுமக்களே!

 சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு கொண்டாட்டமானது, செப்.8, 2012 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் விழாவாக நடத்தப்படவுள்ளது. குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளார்கள். கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் இரயில்வே துறை, பொதுப்பணித்துறை, அஞ்சல் துறை, காவல் துறை என பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட துறைகளின் 150வது ஆண்டு நிறைவை  விழாவாக அரசு  கொண்டாடி வருகின்றது.  இது போன்றே 1862ல் பிரிட்டிஷ் ராணியின் உத்திரவின் பேரில் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்றங்களின் 150வது ஆண்டு நிறைவு விழா மூன்று உயர்நிதிமன்றங்களிலும் “மிகப் பெரிய அளவில்“ கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு அடிமைப் பட்டுக்கிடக்கும்பொழுது விடுதலைக்காகக் போராடியவர்களை கழுவில் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தின் பெருமையை  பிரம்மாண்டமான இந்தோ-சர்சானிக் முறையிலான கட்டிடத்தால் மட்டும் அளவிடுவது இழிவானது.

மாறாக எவ்வாறு சுதந்திரமாக, எவ்வித மனச் சாய்வுமின்றி, அனைவரையும் சமமாக பாவித்து நீதிப்பரிபாலனை செய்வதில்தான்  நீதித்துறையின் பெருமையை அளவிட முடியும். துவக்கத்தில் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ஆங்கிலேயனுக்கு பயன்பட்ட சென்னை உயர்நீதிமன்றம் காலபோக்கிலும் அரசு நிர்வாக ஆட்சியாளர்கள் சார்புடைய ஒன்றாகவே உள்ளது.

 அதனால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டாலும், நிலக்கரி, கிரானைட் என இயற்கை வளங்கள் கொள்ளை- யடிக்கப்பட்டாலும், ஆட்கொல்லி  அனுஉலைகளை நிறுவி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவைசெய்து, அதை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தாலும் மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லிக்கொள்ளும் நீதிமன்றம் பல நேரங்களில் வேடிக்கைப் பார்ப்பதும், சில நேரங்களில் அந்த உரிமைப் பறிப்பில் தனது பங்களிப்பைச் செலுத்துவதும்தான் தொடர்கிறது. பணம் படைத்தவர்கள் நீதிமன்றத்தையும், நீதிமன்றத்  தீர்ப்புக்களையும் தங்களுக்கு சாதகமாக வளைத்து,  இழுத்தடித்து அதன் மூலம் தான் கொள்ளையடிதத்தைப் பாதுகாத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும், நீதி மன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தாலும் அதை அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

 கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு அலுங்காமல் குலுங்காமல் அமைச்சரை அழைத்துச் செல்வதைப்போல அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் இருக்கை போட்டு உட்கார வைக்கப்படுகிறான். ஜேபிஆர் போன்ற கல்விக் கொள்ளையர்களுக்கு இடைக்கால பிணையை பதறித்துடித்து வழங்குகிறது நீதிமன்றம். ஆனால் சாதாரண மக்களை அடித்து இழுத்து விலங்கிட்டு வருவதும், அவர்களுக்கு எளிதில் பினை கிடைக்காமல் அல்லல்படும் நிலைமையே தொடர்கிறது. சங்கராச்சாரியார் போன்ற பார்ப்பன கிரிமினல் சாமியார்களுக்கு கொல்லைக்குப் போவதற்குக்கூட  வாழை இலை விரிக்கிறது சட்டத்தின் ஆட்சி. மேலும் இந்த போக்கிரி சாமியார் நீதிபதிக்கு பணம் கொடுத்து நீதியை வாங்க முயன்றதும் சந்தி சிரித்தது. நீதிமன்றத்தை மயிரளவுகூட மதிக்காத வாய்தா ராணி ஜெயலலிதா தனது ஊழல் வழக்கைப் பதினைந்து ஆண்டுகளாக இழுத்தடித்து தற்போது சட்டப்படியான “டார்ச்சர்” மூலமாகவே அரசு வழக்குரைஞர் ஆச்சாரியாவை பதறி ஓட வைத்திருக்கிறார்.

 ஆயிரம் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் வழக்கில் பத்து ஆண்டுகள் நீண்ட நெடிய ஊடகம் மற்றும்  சர்வதேச அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் உதவியோடு போராடிய பின்தான் வெறும் மூன்று வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தண்டனைகூட தெகல்காவின் நிருபர் கொலையாளிகளிடம் ரகசியமாக அவர்களுக்கே தெரியாமல் பெற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தால்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் இதுபோல் டெல்லியில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸ் ரவுடிகளுக்கோ, மும்பையில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம்களைப் படுகொலை செய்ய இந்துமத வெறியர்களுக்கோ நீதிமன்றத்தால் தன்டனை வழங்கமுடியவில்லை. வருவாய் மற்றும் காவல்துறை வெறியர்களால் வன்முறை வெறியாட்டம் மற்றும் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆட்பட்ட வாச்சாத்தி பழங்குடி மக்கள் குற்வாளிகளை கூண்டில் நிறுத்தவே நெடிய  நீதிமன்ற போரட்டங்களை நடத்தவேண்டியிருந்தது. இதில் பல வருடங்கள் கழித்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் பலருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பளித்திருக்கிறது இந்த மாண்புமிகு உயர்நீதிமன்றம்.

மேற்கூறிய கொடுங்குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை தண்டிக்கத் தவறுவதன் மூலம் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு தன் மேலான நம்பிக்கையை இழந்து வருகின்றது நீதித்துறை. இதுபோல அரசாங்கம், ஆட்சியாளர்களை  எதிர்த்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுவதுமில்லை. அதனால்தான் பிப்.19 2009   அன்று  நீதிமன்றத்தின் மீதே காவல்துறை தாக்குதலை நடத்தியபோதும், நீதிபதிகளே தாக்கப்பட்டபோதும் அதற்கு எதிராக  நீதியை வழங்க இயலாமல் அரசாங்கத்திற்கு அடங்கிப் போய் நீதித்துறைச் சுதந்திரத்தை காவுகொடுத்ததை உலகுக்கு அறிவித்திருக்கின்றது. ஆங்கிலேயன் நாட்டை விட்டு சென்றபின்பும் அவனது மொழியை கடைபிடிக்கும் அடிமைத் தன்மையில் ஊன்றி நிற்கின்றது. இப்படிப்பட்ட உயர்நீதிமன்றத்திற்கு தான் இம்மாபெரும் விழாவாம்!

 பிப்.19, 2009 – இது 150 ஆண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் ஓர் கருப்பு நாள். நீதித்துறையின் சுதந்திரத்தை காவல்துறை கேள்விக்குள்ளாக்கிய நாள். நீதி வழங்கும் செங்கோலை போலீசின் லத்தி அடித்து முறித்த நாள். நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என அனைவரும் ஓட ஓட விரட்டப்பட்டு, அடித்து காயப்படுத்தப்பட்டு அதற்கான நீதி கிடைக்கப் பெறாமல் உள்ள நிலையில் இம்மாபெரும் விழா நடைபெறுகின்றது. கேவலம் இரண்டு போலீசு அதிகாரிகளை கூட தண்டிக்க இயலாமல் போய் உள்ள நீதித்துறையின் மாண்பினை நாம் எவ்வாறு போற்ற இயலும்!

 ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எதிர்த்து நாம் அன்று தொடர்ந்து போராடினோம். அதனுடைய எதிர்விளைவே கருணாநிதி – காங்கிரசின் பிப்.19 தாக்குதல். ஈழப் போரின் இந்திய வழிநடத்துனர் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி. இன்று அவர் தான் இவ்விழாவின் முதன்மை விருந்தினர். இதை விட  நமக்கு ஓர் அவமானம் உண்டா!

 பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வா.உ..சிதம்பரம் போன்ற தலைவர்களை தேசத் துரோக குற்றச்சாட்டில் சிறையில் தள்ளிய அன்றைய சென்னை நீதிமன்றத்திற்கும் போராடும் கூடங்குளம் மக்களின் உரிமையை ஒடுக்க அரசின் 144 தடை உத்தரவை நியாயப்படுத்தும் இன்றைய நீதிமன்றத்திற்கும் பெரிய வேறுபாடில்லை என்ற காரணத்தினால் வேண்டுமானால் அவர்கள் 150வது ஆண்டு விழாவை அவர்கள் கொண்டாடட்டும்.  அந்த கொண்டாட்டத்தில் பிப்.19 வழக்குரைஞர்கள் மீதான போலீஸ் தாக்குதல்  வழக்கில் வழக்குரைஞர்களுக்கு எதிராக ஆஜராண கே.கே.வேணுகோபால், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பதவிக்கு இரண்டரை-இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு, அந்த மானங்கெட்ட ஒப்பந்த்த்தை நிறைவேற்ற நீதிமன்றத்தை அனுகிய டி.செல்வம்  போன்ற எட்டப்பர்கள் மேடையை அங்கரிக்கட்டும்.

 பெரும்பாண்மையான மக்களுக்கோ, வழக்குரைஞர்களுக்கோ தேவை மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், அவர்களை பாதுகாக்கும் அரசாங்கம், அவர்களின் பங்காளிகான அரசியல் கட்சிகள், அவர்களுக்கு காவடி தூக்கும் காவல் துறை  மற்றும் ஊழல் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம்தான். இன்று நடைமுறையில் இருக்கும் கிரிமினல் சட்டங்கள் நீதி நடைமுறையை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்திருக்கின்றன. அவைகளை புணரமைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற உச்சநீதிகள் வி.ஆர்.கே மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 50 ஆண்டுகள் 100 ஆண்டுகள் 150 ஆண்டுகள் என்ற கால அளவின் பெருமையையோ, கட்டிடங்களின் பெருமையையோ கொண்டாடுவதைப் புறக்கணித்து, மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது தான் நீதியைப் பெறுபதற்கான ஒரே வழி. நீதிக்காகப் போராட, மக்கள் உரிமைக்காக போராட ஓர் அணியில் திரள்வோம்.

மனிதஉரிமைப்பாதுகாப்புமையம்தமிழ்நாடு

சென்னைக்கிளை

தொடர்புக்குமில்ட்டன், தொலைபேசி– 98428 12062

தொடர்புடைய பதிவுகள்:

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

highcourt-01

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 100-வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இஸ்ரோ-வின் இந்த  ‘சாதனை’ நிகழ்த்தப்பட உள்ளது. இஸ்ரோவின் நூறாவது திட்டமான இந்த ராக்கெட்  உள்பட அனைத்து திட்டங்களுக்கும்  இந்திய மக்ககளின்னின்  வரிப்பணம்  பல்லாயிரக்கணக்கான கோடி கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் இத்திட்டங்களால் இந்திய மக்ககளின் கிடைத்த பலன் என்று பார்த்தால் ஏதும் இல்லை.  மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை என ஏதும் கிடைக்காத நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்களை  வக்கிரம் என்று தான் சொல்ல வேண்டும்.இதனுடன் தொடர்புடைய புதிய கலாச்சார கட்டுரையினை அவசியம் கருதி மறுபிரசுரம் செய்கிறோம்.

***********************

நிலவில் இந்தியன் : வல்லரசு கனவுக்கு வெட்டிச் செலவு!

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள். அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.

இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.

அமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி – மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் – சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்?

விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.

மூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை ‘பகீரதப் பிரயத்தனங்கள்’ செய்தாக வேண்டும்.

பூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை.

போதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்” என்று சாமியாடி வருகிறார்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.

இப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா!

சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன்? உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.

70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

அதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி! இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.

ரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.

ஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்!

உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன?

_______________________________
புதிய கலாச்சாரம், மே’07

கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி!

ஜினி காந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சியை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்?

முதலில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிக்கு வருவோம். இவர்கள் வெளியிடும் தொலைக்காட்சி விளம்பரத்தை பலரும் பார்த்திருக்கலாம். அமிதாப் பச்சன், ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருவார். கட்டடம் பாழடைந்திருக்கும். எனவே மழைக் காலத்தில் கூரை ஒழுகும். மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகத்தின் மீது விழும் மழைச் சாரலை கைகளால் துடைப்பார்கள். அமிதாப்பின் மனம் வேதனைப்படும்.

உடனே புதிதாக ஒரு கட்டடத்தை கட்ட முடிவு செய்வார். இதற்காக தனது பழைய மாணவனான பிரபுவை தேடிச் செல்வார் (இந்தக் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் திலிப்பும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் நடித்திருப்பார்கள். ஆனால், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆசான், அமிதாப்தான்). வசதியாக வாழும் பிரபு, தனது ஆசிரியரை வரவேற்பார். மனைவி, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவார். ஒன்றாக அமர்ந்து பழைய ஆல்பத்தை புரட்டி மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள். ஒன்றாக உணவருந்துவார்கள். கை கழுவும்போது எப்படி பிரபுவிடம் உதவி கேட்பது என தயக்கம் எழும். மவுனமாக அமிதாப் விடைபெறுவார். சோர்வுடன் தனது பள்ளிக்கு திரும்புவார். அங்கு பார்த்தால், பிரபு, வல்லுனர்களின் உதவியுடன் புதிதாக ஒரு கட்டடத்தை கட்டிக் கொண்டிருப்பார். நெகிழும் அமிதாப், கண் கலங்குவார். பிரபு அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்.

இந்த விளம்பரம் அப்படியே கிருஷ்ணன் – குசேலன் புராணக் கதையின் நவீன வடிவம். இதற்கும் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். அட்சய திருதி என்று ஒரு நாளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் அனைத்து நகைக்கடை உரிமையாளர்களும், ’இந்த நாளில் குண்டுமணி தங்கம் வாங்கினாலும் அது பெருமளவு பெருகும்’ என கதை விடுகிறார்களே… அந்த கதையின் மூல விதை இந்த கிருஷ்ணன் – குசேலன் கதைதான். ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை அன்று சொல்லப்பட்டு வரும் இந்தக் கட்டுக்கதையை நாள்தோறும் விளம்பரமாக ஒளி(லி)பரப்பித்தான் செய்கூலி சேதாரம் இல்லாமல் கல்யாண் ஜுவல்லர்ஸ் தன் சுரண்டலை நியாயப்படுத்தி வருகிறது. இதையேதான் புரட்சி என்றும் மார்தட்டுகிறது.

இது நிழல். இப்போது நிஜத்துக்கு வருவோம்.

தர்மத்தின்-தலைவன்2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கர்நாடக மாநிலத்தில் கல்வி கற்காதவர்களின் எண்ணிக்கை 33 சதவிகிதம். இதில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் படிக்காதவர்கள். அதேபோல், 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி, கர்நாடக மாநிலத்தில் 54 ஆயிரத்து 529 ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன.

பெங்களூரு அருகில் இருக்கும் கேவிபுரம் (Gavipuram) பள்ளியும் இதில் ஒன்று. 5ம் வகுப்பு வரை இருக்கும் இந்தப் பள்ளியில்தான் ரஜினி காந்த், 1954 முதல் 1959 வரை படித்தார். பள்ளியின் இன்றைய நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாதி கட்டடம் இடிந்து விட்டது. மீதி, இடியும் தருவாயில் இருக்கிறது.

எனவே புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என பகுதி மக்கள், அரசுக்கு மனு கொடுத்தார்கள். ரஜினியின் வீட்டை நோக்கி படையெடுத்தார்கள். ரஜினிக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களில் உயிருடன் இருப்பவர்கள் சென்னை போயஸ் கார்டனுக்கு ‘பேரகன்’ செருப்பே தேயும் அளவுக்கு (இதுவும் ஒரு விளம்பரம்தான்!) நடையாய் நடந்தார்கள். ரஜினியின் தரிசனம் மட்டுமல்ல, சிங்கிள் டம்ளரில் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இத்தனைக்கும் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட தேவைப்பட்ட தொகை, ரூபாய் ஒன்னரை கோடிதான். இது, இவர் வாங்கும் சம்பளத்தில் வெறும் 5 சதவிகிதம்தான். ஆனால், பெங்களூருவில் சொத்துக்களாக வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் செலுத்துபவர், தான், படித்தப் பள்ளிக்கு ஒரு கட்டடத்தை கட்ட வேண்டும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பின்னே தன் மனைவி நடத்தும் ‘த ஆஷ்ரம்’ பள்ளி வழியாக மாதந்தோறும் கணிசமான அளவில் லாபம் வருகிறது. இது கல்விச் சேவை. இதன் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றலாம். வருமான வரித்துறையை ஏய்க்க, தனது பள்ளிக்கே நிதியும் வழங்கலாம். அதே போல் பெரிய தொகையாக சம்பளம் கிடைத்ததால், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் கல்வியின் அருமை குறித்து உணர்ச்சிகரமாக வசனம் பேசி நடித்தது போல் நடிக்கவும் செய்யலாம். சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்து ஆரம்பப் பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்தால் என்ன லாபம் கிடைக்கும் சொல்லுங்கள்?

கடைசியில் மாநில அரசே, இந்தப் பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டித் தர முன்வந்திருக்கிறது. மாநில கல்வித் துறை ரூபாய் 81.5 லட்சமும், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளு மன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முறையே ரூ.20 லட்சம் மற்றும் ரூ.25 லட்சமுமாக தருவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. மீதி தொகைக்கு கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றம் பொறுப்பு ஏற்றிருக்கிறது.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 2) அன்று பூமி பூஜை போடப்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்திலேயே பல அரசுப் பள்ளிகள் இதே நிலையில்தான் இருக்கின்றன. சில இதை விட மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, இந்த ஒரு பள்ளிக்கு மட்டும் மாநில அரசு புதிதாக கட்டடம் கட்ட முன்வந்ததற்கு ஒரே காரணம், இது ரஜினி படித்த பள்ளி என்பதுதான். ரஜினியின் பெயர் ‘கெட்டு’ விடக் கூடாது என்பதும்தான். மாநில அரசை ஆள்வது பாரதீய ஜனதா கட்சி. ரஜினியோ அத்வானியின் விசுவாசி. ஒருவேளை நாளைக்கே ரஜினி தேர்தல் பரப்புரையில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக வந்து விட்டால் இந்த செய் நன்றி உதவுமே என்பது பா.ஜ.க கணக்கு.

இப்போது சொல்லுங்கள். விளம்பரங்களில் ‘சவுண்ட் விடும்’ கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்துவது வெறும் காமெடிதான் என்பதை நிரூபித்த ரஜினிக்கு நாம் நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்? ரஜினியின் செல்வாக்கு ஒரு அரசையே ஒரு இடிந்த பள்ளிக் கூடத்தை கட்டவைக்கிறது என்றால் சும்மாவா?

இதையும் பாருங்க

 

____

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

நீ தான் ஆசிரியன் – கவிதை

நீ தான் ஆசிரியன்

பருவத்தேர்வுகள்
நெருங்கிவிட்டது போலிருக்கிறது
படித்துக்கொண்டிருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
தொலைபேசியில் கேட்கும் போதெல்லாம்……

தலையில் தட்டி குட்டி
இரவு முழுக்க விழுந்து விழுந்து
எதைப்படித்துக்கொண்டிருக்கிறாய்

?
புரியாததை புரிய வைக்க உன்னுள்
எத்தனைப் போராட்டம்
தெரியாததை தெரியவைக்க
எத்தனை விழிப்புக்கள்……எதைப்புரிந்து கொண்டாய்?
எதைத் தெரிந்து கொண்டாய்?
ஆனாலும் கண்டிப்பாய்
நீ தேர்வாகிவிடுவாய்
மக்களைப் புரியாமலும்
தெரியாமலும்
இருக்கத்தானே தேர்வுகள்……

I=V/R
இது ஓம்ஸ் விதி
இன்னும் எத்தனை விதிகள்
எதை மாற்ற? எதை உருவாக்க?
மின்சாரத்தின் அலகினை
அளக்க முற்படும் நீ
என்றாவது நம் பொருளாதார அலகினை
பற்றி நினைத்திருக்கிறாயா?

அரிசி விலையும்
பருப்பு விலையும் எதனால்
ஏறுகிறதென்று தெரியாமல்
எதைப் படிக்கிறாய்?

மருத்துவம்,பொறியியல்
அறிவியல்……..
காய்ந்து போன நிலங்கள்
மூடிக்கிடக்கும் ஆலைகள்
சுருண்டு போன நெசவாளிகள்
எந்தப்படிப்பு வந்து இதை
மாற்றப்போகிறது?

பார்ப்பனீயத்தின் தேர்வுகள்
குத்திக்கிழிக்கின்றன
பறையனென்றும் சூத்திரனென்றும்
முதலாளித்துவம்
கடைசி பென்ச்-ல் உட்காரவைத்து விட்டது
உழைக்கும் மக்களை……

நீ டாக்டர் ஆனாலும் என்ஜினியர் ஆனாலும்
ஏன் அந்த கலக்டரே ஆனாலும்
இதை மாற்ற முடியுமா என்ன ?
உன் வாழ்வுக்கு
இம்மியளவும் பயன்படாத படிப்புதான்
உனக்கு மதிப்பு கொடுக்கப்போகிறதா?

படி நன்றாகப்படி
முதலில் உன்னைப்படி
இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை……

போராட்டத்தில்
ஓய்வுக்கு இடமில்லை
உன் விளங்காத படிப்பையும்
விளங்க வைக்க “புதிய ஜனநாயகத்தையும்”
சேர்த்துப்படி
இனி நீ விளக்கு
மற்றவர்களுக்கு நீ தான் ஆசிரியன்.

-கலகம்

முதல் பதிவு: கலகம்

தொடர்புடைய பதிவுகள்:

வினவு – தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

விளங்காத படிப்பும்-விளங்கவைக்கும் அரசியலும்