• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 220,449 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும் அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.    அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள் அச்சுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.  அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன்  சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள்.  குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தடையை நீக்கு ! தடையை நீக்கு !
அணு உலையை எதிர்த்து போராடும்
கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது
விதிக்கப்பட்ட தடை உத்தரவை
உடனே நீக்கு ! உடனே நீக்கு !

முள்ளிவாய்க்கால் முற்றுகை போல
   இடிந்தகரை மக்கள் மீது
உள் நாட்டுப் போரை
தொடங்கி இருக்குது ஜெயா அரசு !
பாசிச ஜெயா அரசு !

இடிந்த கரை மக்களுக்கு
பால் தண்ணீர் மின்சாரம் வெட்டு !
போராடும் மக்களை
பட்டினிப் போட்டு கொல்லத்துடிக்குது
ஜெயா அரசின் போலீசு !

முறியடிப்போம் !   முறியடிப்போம் !
வாழ்வாதார பிரச்சினைக்காக
போராடும் மக்கள் மீதான
கொலைகார ஜெ அரசின்
போலீசு அடக்கு முறையை
முறியடிப்போம் !   முறியடிப்போம் !

மின்சாரத் தேவைக்கு
அணு உலை வரவில்லை
ரசிய –  அமெரிக்க நிர்பந்தத்தால்
வந்த வினைதான் வேறில்லை !

மின் தேவைக்கு வந்ததல்ல
கூடங்குளத்தில் அணு உலை
அது அணு குண்டு மூலப்பொருளை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலை !

நீங்கிடுமா ! நீங்கிடுமா !
கூடங்குளத்தை திறந்தாலும்
மின்வெட்டு நீங்கிடுமா !
பல லட்சம் உயிரை பணயம் வைத்து
பல்லாயிரம் கோடி செலவழித்து
அணு உலை தருகின்ற மின்சாரம்
வெறும் மூன்றே மூன்று சதவிகிதமே !
நீங்கிடுமா ! நீங்கிடுமா !
மின்வெட்டு நீங்கிடுமா !

நாட்டு மக்களின் உயிருக்கும்
நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்
உலை வைக்கும் அணு உலையை
இயக்கத்துடிக்கும் பன்னாட்டு முதலாளிகள்
காங்கிரசு பிஜேபி அதிமுக திமுக
துரோகிகள் அனைவரும் ஓரணி !
உறுதியாக போராடும்
உழைக்கும் மக்களே எதிர் அணி !

இது இடிந்த கரை மக்களின்
பிரச்சினை அல்ல
இந்த நாடு மக்களின் பிரச்சினையே !
போராடும் மக்களுக்கு துணை நிற்போம் !
போராட்டத்தை வளர்த்தெடுப்போம் !

அணையவிடோம் ! அணையவிடோம் !
கூடங்குளம் இடிந்த கரையில்
அணு உலைக்கு எதிராக
பற்றி எரியும் போராட்டத் தீயை
அணையவிடோம் ! அணையவிடோம் !

சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர் தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”

பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும்,  அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இடிந்தகரை கிராமத்தை இன்னொரு முள்ளி வாய்க்காலாக மாற்றி பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்காக போராடுகின்ற மக்களை பலியெடுக்க சதி செய்து வரும் அரசு எதிர்பார்க்கத்து தான் திருச்சி, கடலூர், தருமபுரி , சென்னை என புரட்சிகர அமைப்புக்கள் அம்மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டு வரும் போராட்டங்கள்.  நூற்றுக்கணக்கான  போராளிகளை கைது செய்தபின்னும் தமிழகம் அமைதியாகத் தான் இருக்கிறது, ஊடகங்களோ கூடங்குளம் அழிக்கப்பட்டால் கூட வாய்திறக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கின்றன.

ஆனால் கூடங்குளம் மக்களின் உண்மையான அந்தப்போராட்டத்தை நக்சல்பாரி புரட்சியாளர்கள் வளர்த்தெடுப்பார்கள். போராடுகின்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அரசையும் பன்னாட்டு முதலாளிகளையும் முறியடிப்பதே தீர்வாகும் .அப்படி ஒரு மாற்றத்திற்கு வழி கோலுவதாய் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எமது தோழர்கள் மாலையில் விடுதலையாகலாம் அல்லது பல நாட்கள் சிறையில் கூட இருக்க நேரலாம். இது எங்களது கடமை, அனைத்தையும் தனியார்மயமாக்கிய மறுகாலனிய கொடூரத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம் வென்றே தீரும் என்பது மட்டும் உறுதி.

இதோ இன்று வாழ்வாதாரப் பிரச்சினைக்காக போராடிய கூடங்குளம் மக்கள் சிறையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது அரசு தொடங்கிய உள்நாட்டுப்போர் அடுத்து உழைக்கும் மக்கள் மீது திரும்புவதற்கு அதிக நேரம் ஆகப்போவதில்லை.

கூடங்குளம் மக்களை , அவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேருந்துகளில் தொடர்வண்டிகளில், கல்லூரிகளில், திரும்பிய பக்கமெல்லாம் எமது தோழர்கள் அழைக்கிறார்கள் .  ”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற
குரல் உங்களுக்கு கேட்கிறதா?” நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

Leave a comment