• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

NCBH வைரவிழா : நிலப்பண்ணையின் கைகளினால் “தோழர்.கார்ல் மார்க்சின்” நூலை வெளியிட்ட போலி கம்யூனிஸ்டுகளை புறக்கணிப்போம்!

NCBH என்றால் நமது நினைவுக்கு வருவது மாஸ்கோ நூல்கள் தான். அரசியல் மட்டுமல்லாது அறிவியல்,இலக்கியம், மருத்துவம் என இரு நூற்றுக்கும் மேலான தலைப்புகளில் அச்சிடப்பட்ட சோவியத் நூல்கள் கப்பல்கள் மூலம் சி.பி.அய் கட்சியின் NCBH க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மாஸ்கோ நூல்களை ஆரம்ப காலங்களில் மக்களிடம் எடுத்துச் சென்ற NCBH, இன்று முழுக்க முழுக்க இலாப நோக்கத்துடன் கூடிய ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டதை அக்கடைகளுக்கு செல்லும்போது உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சோவியத் நூல்களை பாதுகாத்து வைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அமபத்தூர் எஸ்டேட் NCBH கிளையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர், வாயிலின் முன்வரிசையில் இருக்கும் பெரிய அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மாஸ்கோ நூல்கள் இன்று அந்த வளாகத்தில் கடைசி அறையில் கேட்பாறற்று போடப்பட்டு விட்டது.

அங்கு மட்டுமல்ல NCBH யின் அனைத்து கிளைகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் வேலூர் சென்று இருந்தபோது வேலூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் NCBH-க்கு சென்றேன். அப்போது மாஸ்கோ நூல்களை கடைக்கு வெளியே போட்டு வைத்து விட்டார்கள். கடைக்கு உள்ளே அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் இந்தியா 2020, சமையல் குறிப்புகள், சிரிப்புக் கதைகள் என்று இவற்றை எல்லாம் வரலாற்று சிறப்பு மிக்க நூல்களைப் போல் கண்ணாடி பீரோவில் அடக்கி வைத்து உள்ள இவர்கள் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.மார்க்சின் “வரலாற்று பொருள் முதல் வாதம் ”போன்ற புத்தகங்களை  முக்கியத்துவமில்லாத நூல்களாக முடிவு செய்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

நான் ஏன் தந்தையை போல் இருக்கிறேன்”  “தான்யா ஆகிய நூல்களில்  தலா 10 பிரதிகள் என சில நூல்களை வாங்கினேன். எப்பொழுதும் “விலை”எழுதப்படாத அந்த மாஸ்கோ புத்தகங்களில்,இந்த NCBH   நிறுவனத்தினர் ரூ.5 என எழுதி அதனை அடித்து ரூ.10, ரூ.20 என மாற்றி மாற்றி விலையை உயர்த்தி எழுதியும், ஸ்டிக்கர் ஒட்டியும் வித்ததை பார்த்த எனக்கு இன்று இந்நூல்களில் விலை எழுதப்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்ததோடு, பல கேள்விளையும் எழுப்பியது.

அந்த மின்னல்வேக கேள்விகளுக்கு சில நிமிடங்களிலேயே பதிலும் கிடைத்தது. கடை ஊழியர் ஒருவரிடம் இந்த புத்தகங்களின் விலை 5ரூபாயா? என்று கேட்டபோது, அவர் சற்றே யோசிக்க, மற்றொருவர் சட்டென்று குறுக்கிட்டு சரிங்க எடுத்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறிவிட்டு, யோசித்த ஊழியரை பார்த்து ’விரைவாக இந்த புத்தகங்களையெல்லாம் காலி செய்து இடத்தை ஃப்ரி பண்ண   நம்ம   நிர்வாகம் சொன்னது உனக்கு தெரியாதா?’ என்று அவரை கடிந்து கொண்டார்.

 எனக்கோ கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற உழைப்பால் உருவான இந்த மாஸ்கோ நூல்களால் இனி தங்களுக்கு பயன் ஏதுமில்லை என்ற முடிவுக்கு NCBH வந்துவிட்டது என்பது அந்த ஊழியரின் வார்த்தையில் இருந்து தெளிவாக உணர முடிந்தது.

இந்த நிலையில் தான் 3.12.11 அன்று NCBH  தனது 60-வது ஆண்டின் நிறைவையொட்டி வைரவிழா ஏற்பாட்டை செய்து அன்றைய தினம் ”கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு” நூலை ஜி.கே.வாசன் அவர்கள் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த எனக்கு தூக்கிவாரி போட்டது. ஒரு நிலப்பண்ணையாரின் கைகளினால் பாட்டாளி வர்க்க ஆசானின் நூலை வெளியிட முடியுமா? உலகில் எந்தவொரு உண்மையான கம்யூனிஸ்டாலும் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.  ஆனால்,எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் இந்த விழாவிற்கு தலைமைதாங்கி நடத்திக் கொண்டு இருந்தவர்கள் யார் தெரியுமா? வேறு யாருமல்ல தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் போலிகளான சி.பி.ஐ யினர் தான் அவர்கள்.

தோழர்.கார்ல் மார்க்ஸின் நூலை வெளியிட்டுப் பேசிய நிலப் பண்ணையார் ஜி.கே.வாசன், ‘மார்க்ஸ் இரக்கமுடையவர், எதற்கும் அஞ்சாதவர், சிறந்த சிந்தனையாளர்’ என யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்தார். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத இந்த நிலப் பண்ணையார் கஷ்டஜீவிகளான கம்யூனிஸ்டுகளின் ஈடு இணையற்ற தலைவரைப் பற்றி பேசியதைத்தான் என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை.

அன்று வெண்மணியில் விவசாயக்கூலிகளான உழைக்கும் மக்கள் தஙகளுக்கான கூலியில் அரைபடி நெல் அதிகமாக கேட்ட ஒரே காரணத்திற்காக 42 விவசாயிகளை உயிருடன் வைத்து எரித்து கொன்றான் கோபால் கிருஷ்ண நாயுடு என்ற நிலப்பண்ணை. அந்த கோபால் கிருஷ்ணநாயுடுக்கு ஆதராவாக இருந்த மற்றொரு நிலப்பண்ணையார் தான் மூப்பனார்.அந்த நிலப்பண்ணையின் மகனான ஜி.கே.வாசனுக்கு உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட என்ன யோக்கியதை இருக்கிறது.

 இந்த நிலப்பண்ணைகளுக்கு எதிராகத் தான் அன்று கீழ் வெண்மணியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள்.ஆனால் அதன் பின்னர், அந்த மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வைத்த நம்பிக்கையை இழக்கும் விதமாக போலிகளான வலது,இடதுகள் தங்கள் அரசியல் ஓட்டாண்டித்தனத்தால் உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்தனர். எந்த நிலப் பண்ணைகள் விவசாயிகளை கசக்கிப் பிழிந்து  கொன்று குவித்தார்களோ அந்த வர்க்கத்தின் வாரிசை வைத்து உழைக்கும் வர்க்கத்தின் தலைவரான தோழர்.கார்ல் மார்க்ஸ்-ன் நூலை வெளியிட்டதன் மூலம் சி.பி.ஐ யினர் இன்று துரோகத்தின் சிகரத்தையே தொட்டு விட்டனர்.

 முதலாளித்துவம் உலகம் முழுவதும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் கம்யூனிசம்தான் இதற்கு ஒரே மாற்று என்று விண்ணதிர முழங்குவதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாக இருக்க முடியும். நிலபண்ணையார்களோடு கரம் கோர்க்கும் இந்த போலி கம்யூனிஸ்டுகளிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும். மீண்டும் மீண்டும் தங்களைத் தாங்களே இப்படி அம்பலப்படுத்திக்கொள்ளும் இந்த போலிகளை நாம் புறக்கணித்து தனிமைப்படுத்துவோம்.

கம்யூனிசத்தை உயர்த்திப் பிடிக்கும் உண்மையான கம்யூனிஸ்டுகளான நக்சல்பாரிகளின் தலைமையை ஏற்போம்.இதை உணர்ந்த நான்  நக்சல்பாரிகளின் பக்கம்! உழைக்கும் மக்களையும் , இந்த நாட்டையும் நேசிக்கும் நீங்கள் யார் பக்கம்?

சிருகண்டன்