• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

“வெள்ளையனே வெளியேறு’ நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்!

“வெள்ளையனே வெளியேறு!’ என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு “செய் அல்லது செத்துமடி’ என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர், காங்கிரசுக்காரர்கள். காந்தி விடுத்த அறைகூவலின்படி போராட்டத்தில் ஈடுபட்ட “ஆகஸ்டு தியாகிகள்’ என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர். அதற்கு இப்போது பொன்விழா கொண்டாடுகிறார்களாம் தமிழக காங்கிரசுக்காரர்கள்.

வரலாற்றைப் புரட்டுவதும் தேசத்துரோகத்தையே தேசபக்தி என்று சித்தரிப்பதும்தான் காங்கிரசின் கலாச்சாரம். இந்தியத் திருநாட்டின் விடுதலை தான் நோக்கம் என்பது திட்டமிட்ட பொய்யே. “வெள்ளையனே வெளியேறு!” என்ற தீர்மானத்தை காந்தியும் காங்கிரசும் போட்ட பின்னணியே வேறு.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று இட்லர் போலந்தையும் இங்கிலாந்தையும் தாக்கினான். உடனே பிரான்சு ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலக யுத்தம் மூ ண்டது.

போர் தொடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ஆங்கிலேய வைசிராய், இந்தியா “போரிலுள்ள ஒரு நாடு” என அறிவித்தார். யுத்த செலவிற்காகப் புதிய வரிகளைப் போட்டு இந்திய மக்களைக் கசக்கிப் பிழிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தயாரானது. தனது இராணுவ பீரங்கிக்குத் தீனி போட இந்தியர்களைத் தீவிரமாகப் பட்டாளத்தில் சேர்க்க ஆரம்பித்தது. எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க அவசரச் சட்டங்களைப் போட்டு, அடக்குமுறையை ஏவிவிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டது; ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைக்கே மாற்றிவிடுவது என்ற மாயையை ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் மூலம் அரசியல் மோசடி மூ¬ட்டைகளை அவிழ்த்துவிட்டது.

ஜெர்மனி ஜப்பான் ஒரு பக்கமும், இங்கிலாந்து பிரான்சு மற்றொரு பக்கமுமாக நின்று நாசகார யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் ஒன்றின் காலனிகளை இன்னொன்று அபகரிக்க நடத்திய யுத்தம்தான் அது. எனவே, அது உலக மக்களுக்கு எதிரான அநீதியான யுத்தமாகும். இந்த யுத்தத்தில், இரண்டு முகாம்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியதே ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நம்மை அடிமைப்படுத்தியிருந்த இங்கிலாந்து அநியாய யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்த நேரம், அதனால் இந்தியா மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதில் பலவீனப்பட்டிருந்த நேரம். எனவே, இந்தியா தனது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் வாய்ப்பான நேரம். இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து பறித்தெடுக்க விரும்பும் எந்த தேசபக்த இந்தியனும் இவ்வாறுதான் எண்ணுவான். யுத்தத்திற்கும் காலனிய ஆட்சிக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரமாக்குவான்.

ஆனால் காந்தியும் காங்கிரசும் மக்களைத் திரட்டி சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோர் தனித்தனியாக விடுத்த அறிக்கைகளில் உறுதி கூறினர். 1939 செப்டம்பர் 5ல் வைசிராயைச் சந்தித்த காந்தி தனது முழு அனுதாபமும் ஆங்கிலேய ஆட்சிக்கு உண்டு எனச் சொன்னார். அந்தச் சந்திப்பின்போது, “நான் அவருக்கு (வைசிராய்க்கு) இங்கிலாந்து பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் யுத்தத்தால் அழியக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கியபோது கண்கலங்கிப் போனேன்” என்று காந்தி எழுதினார். “இங்கிலாந்து ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும்” என்று 1940, மே 20ல் நேரு அறிவித்தார். இதே நேரத்தில் காந்தி, “பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தை தேடவில்லை” என்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல, இங்கிலாந்து ஒரு நியாயமான இலட்சியத்திற்குப் போராடுவதாகவும் அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார். “ஆகையினால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆவது?”1 என்று காலனியாதிக்கவாதிக்காகக் கண்ணீர் வடித்தார்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதிகூட காந்தி பின்வருமாறு சொன்னார்: “இங்கிலாந்தின் நெருக்கடியான நேரம்தான் நமக்குச் சரியான சந்தர்ப்பம் என அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பம்பாய் தீர்மானம் அத்தகைய கொள்கை எதையும் நிராகரிக்கிறது. நாம் எவ்வாறு இங்கிலாந்தை அதன் நெருக்கடியான வேளையில் சங்கடப்படுத்திக் கொண்டே, அகிம்சாவாதிகள் என நம்மை அழைத்துக் கொள்ள முடியும்?2

இவ்வாறு காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டு அமைதியாக இருந்தனர். மக்களுடைய மனோநிலை எப்படி இருக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம், இந்தியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் யுத்தத்திற்கு எதிராகவும் இந்தியாவை இங்கிலாந்தின் போர் இரதத்தில் மாட்ட வைத்ததற்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏகாதிபத்தியக் காலனி அரசு கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளை அமுலுக்குக் கொண்டு வந்து ஏராளமான பேரைக் கைது செய்தது.

இந்த நிலையில் 1942ஆம் ஆண்டு வந்த உலக யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாமான அச்சு நாடுகளின் கை மேலோங்கியது. அனேகமாக ஐரோப்பா கண்டம் முழுவதையும் நாஜி ஜெர்மனி படைகள் படுவேகத்தில் தமது காலடியில் கொண்டு வந்தன. ஜப்பானியப் படையெடுப்பிற்கு முன் மலேசியாவிலும் பர்மாவிலும் இருந்த இங்கிலாந்தின் காலனிய அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. ஜப்பானியப் படைகள் படுவேகத்துடன் இந்திய எல்லைவரை முன்னேறியது. இவையெல்லாம் சேர்ந்து அச்சு நாடுகள்தான் உலக யுத்தத்தில் இறுதி வெற்றியடையும் என்று ஒரு பிரிவு இந்திய தரகு முதலாளிகளையும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளையும் நம்ப வைத்தன. ஜப்பானின் அடுத்த ஒரு தாக்குதலில் இந்தியா அதன் வசம் வந்துவிடும் என்று இவர்கள் உறுதியாக நம்பினர். உண்மை நிலையும் அதுவாகத்தானிருந்தது.

எனவே, இனிமேலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. வெற்றி பெறப்போகும் புதிய எஜமானனான ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்குச் சேவகம் செய்ய விரும்பினர். ஜப்பானிய ¬மூலதனத்துடன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணினர். இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆங்கிலேயருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க விரும்பினர். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் மூ ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை விட்டுத் தப்பத் துடிக்கும் எலிகளைப் போல இருந்தனர். காந்தியின் தளபதியான பட்டாபி சீதாராமையாவின் வார்த்தைகளில் இந்தச் சிந்தனை பின்வருமாறு பிரதிபலித்தது: “இந்தியா ஒரு மூ ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுடனோ, உதிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்துடனோ தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமா?”3

ஜப்பானின் தாக்குதல் வேகத்தைக் கண்டு காலனிய ஆங்கிலேய அரசாங்கமும் பீதியுற்று, அசாமையும் வங்காளத்தையும் கை கழுவியது. அதற்கு முன் அந்தப் பகுதிகளில் எதிரிப்படைகளுக்குப் பயன்படலாம் எனக் கருதப்படுகின்ற கட்டிடங்களை இடித்துத் தள்ளுதல், பயிர்களை எரித்தல் ஆகியவற்றை — நிலத் தீய்ப்புக் கொள்கையை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கையாண்டது. பீகாரில் புதிய தற்காப்பு அரண்களைக் கட்டியது. இவையெல்லாம் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடையே பீதியை உருவாக்கிற்று.

நிலைமையைக் கணிப்பதிலும் செயல்படுவதிலும் காங்கிரசிற்குள் மூ ன்று பிரிவினர் தோன்றினர். ஜப்பானிய முகாம் வெற்றி பெற்று இந்தியாவைக் கைப்பற்றும் என உறுதியாக காந்தி நம்பினார். எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி ஜப்பானியரோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று விரும்பினார். நேரு, ராஜாஜி, ஆசாத் ஆகியோர் ஆங்கிலேய ஏகாதிபத்திய முகாமே உலக யுத்தத்தில் இறுதி வெற்றி பெறும் என நம்பினார்கள். எனவே, தொடர்ந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று வாதாடினர். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு பிரிவினர் பாசிச ஜெர்மனி ஜப்பான் முகாமை நேரடியாக ஆதரித்துப் படைதிரட்டிக் கொண்டு களத்திலேயே இறங்கினர்.

1940இல் இட்லரிடம் ஹாலந்து சரணடைந்ததிலிருந்து காந்தியின் பார்வையில் இட்லரின் நிலை “சீராக உயர்ந்து கொண்டிருப்பதாகவும்” யுத்தத்தில் இங்கிலாந்து தோற்றுவிடும் என்று காந்தி நம்புவதாகவும்4 ஜி.டி. பிர்லாவிடம் காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய் தெரிவித்தார். 1940ஆம் ஆண்டு மே 26இல் வைசிராய் லின்லித் கௌவுக்கு காந்தி எழுதிய கடிதத்தில், “சமாதானத்தை நாடுமாறு” ஆங்கிலேய அமைச்சரவைக்கு ஆலோசனை கூறினார். மேலும் அக்கடிதத்தில், “சித்தரிக்கப்படுவதைப் போல இட்லர் அவ்வளவு மோசமான மனிதராக இருப்பார் என்று நான் நம்பவில்லை” என்றும் குறிப்பிட்டார். மேலும் இங்கிலாந்து மக்களை, “நீங்கள் எல்லோரும் உங்களையோ, மானுடத்தையோ காப்பாற்ற முடியாத உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட வேண்டும். போராடுவதற்குப் பதில் திருவாளர் இட்லரையும் சீமான் முசோலினியையும் வரவேற்று உங்களுடைய நாடுகள் என்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அவர்களுக்கு எது வேண்டுமா அதை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்”5 என்று வற்புறுத்தி காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

ஆங்கிலேயர்களிடம் காந்திக்கு இருந்த முந்தைய அனுதாபம் நாஜிப் படைகளுக்கு அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைவதே சிறந்தது என அறிவுறுத்துவதாகவும் உருமாற்றம் அடைந்தது. 1942 ஏப்ரலில் காந்தி, “தாம் முன்பு இங்கிலாந்திற்கு முற்றிலும் கொடுத்து வந்த தார்மீக ஆதரவை இப்போது கொடுக்க மனம் மறுக்கிறது.”6 என்று கூறினார். ஆம், “மகாத்மா’வின் “அந்தரங்கக் குரல்’ இப்போது முற்றிலும் வேறுபட்ட பாதையை மேற்கொள்ளக் கட்டளையிட்டது. எனவே, ஆங்கிலேய அரசுப் பிரதிநிதி கிரிப்ஸ் திரும்பிச் சென்ற பிறகு காந்தி, காங்கிரசின் காரியக் கமிட்டிக்கும் அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கும் நகல் தீர்மானம் ஒன்றை, ஏப்ரல் 27 தொடங்கி நிகழவிருந்த அலகாபாத் மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ள அனுப்பினார். அத்தீர்மானத்தில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்:

“அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி, இந்தியாவை இனியும் இங்கிலாந்தால் பாதுகாக்க முடியாது எனக் கருதுகிறது… ஜப்பானின் சண்டை இந்தியாவுடனானது அல்ல… இந்தியா விடுதலை அடையுமானால் அதன் முதல் நடவடிக்கை ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருக்கும். இக்கமிட்டி ஜப்பானிய அரசு மற்றும் மக்களுக்கு இந்தியா அவர்களுடனோ வேறெந்த நாட்டுடனோ எவ்விதப் பகைமையும் கொண்டிருக்கவில்லை என உறுதியளிக்கிறது.”7

வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், கிருபளானி போன்றோரால் ஆதரிக்கப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தை நேரு பின்வருமாறு விமரிசித்தார்: “நாம் பாபுவின் (காந்தியின் மொர்) அணுகுமுறையை ஏற்போமாகில், அச்சு நாடுகளின் மறைமுகக் கூட்டாளிகளாகி விடுவோம். இத்தீர்மானத்தின் முழுச் சிந்தனையோட்டமும் பின்னணியும் ஜப்பானுக்குச் சாதகமாக இருக்கிறது. ஜப்பானும் ஜெர்மனியும் போரில் வெல்லும் என்று காந்தி நம்புகிறார். இந்த நம்பிக்கை அவரது முடிவை அவரையும் அறியாமலேயே ஆளுமை செய்கிறது.”

ராஜேந்திர பிரசாத்தால் திருத்தப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தைப் பற்றி கருத்து கூறும்போது ராஜகோபாலாச்சாரி, “ஜப்பான் ஆங்கிலேயரின் வெளியேற்றத்தால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிரப்பும்… இத்தீர்மானம் சொல்வது போல் ஜப்பானின் கரங்களில் ஓடி விழுந்து விடக் கூடாது.”8

காந்தியோ மிகவும் அவசரப்பட்டார். மே 1942ல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காந்தி கூறினார்: “இந்த ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்பாடான அராஜகம் (அதாவது ஆங்கிலேய ஆட்சி) ஒழிய வேண்டும். இதன் விளைவாக முற்றிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையுமானாலும் அதை நான் எதிர்கொள்வேன்”. மேலும் 1942 ஜூன் 7ஆம் தேதியிட்ட “அரிஜன்’ ஏட்டில் “அடிமை ஓட்டுனர்களை எதிருங்கள்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். 1942 மே 28இல் ராஷ்ட்ரிய யுவக் சங் எனும் அமைப்பினுடைய உறுப்பினர்களிடம், “இந்த அடிமைத்தனத்தின் பேரழிவிலிருந்து விடுவித்துக் கொள்ள நாம் வன்முறையைக் கூட ஏற்கலாம்”9 என்றார் காந்தி.

இவ்வாறு காந்தி, படேல், பிரசாத் ஆகியோர் ஜப்பானியப் படைகளின் வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி அதன் மூலம் தாங்கள் ஜப்பானுடன் ஒப்பந்தத்திற்கு வர இங்கிலாந்தை நெருக்கியபோது, நேருவும் ஆசாத்தும் நேசப்படைகள் (அமெரிக்கா இங்கிலாந்து பிரான்சு முகாம்) இறுதி வெற்றியடையும் என உறுதியாக நம்பினர். நேரு சியாங்கே ஷேக்குடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கிலேய ஆதிக்கமே தொடர வேண்டும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென்பதல்ல என்ற நேருவின் கருத்தை ஆதரித்தார் ராஜாஜி. முசுலீம் லீகுடன் அவர்களின் தனிநாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக் குடையின் கீழ் ஒரு “தேசிய அரசாங்கத்தை” நிறுவி ஜப்பானை எதிர்க்க வேண்டுமென்று வாதாடினார்.

காங்கிரசின் மேல்மட்டத் தலைமையில் ஏற்பட்ட இந்தப் பிளவு இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் முரண்பட்ட விருப்பங்களையே பிரதிபலித்தது. லால் சந்த், ஹீராசந்த் போன்றபல குஜராத்தி, மார்வாரி மில் முதலாளிகள் ஜப்பானிய எஜமானர்களை வரவேற்கக் காத்திருந்தபோது மற்றொரு பிரிவு, ஆங்கிலேய ஆதரவுக் குழுவாகவே நீடித்தது. மூன்றாவதாக ஒரு பிரிவு உயர்ந்து கொண்டிருந்த அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள முன்வந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையான காங்கிரசுக் கட்சி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு என்றுமே பாடுபட்டதில்லை. மாறாக, தரகுப் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதியான காங்கிரசு, சுதந்திர வேட்கையால் தன்னெழுச்சியாகப் போராடிய இந்திய மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தது; துரோகமிழைத்தது. மக்களுடைய போராட்டங்களைத் திசை திருப்பி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கேடயமாக விளங்கியது. காலனிய ஆட்சியைப் புதிய அடித்தளங்களில் தக்க வைக்கும் கருவியாகச் செயல்பட்டது. இதுவரை ஒரே முகாமாக இருந்த காங்கிரசில்தான், ஜப்பானின் படுவேகமான முன்னேற்றம் மேற்சொன்ன பிரிவுகளைக் கொண்டு வந்தது.

இந்தப் பிரிவினர் கொண்டிருந்த கருத்து வேறுபாடெல்லாம் எந்த ஏகாதிபத்திய முகாம் வெற்றி பெறும் என்ற கணிப்பில்தான். ஆனால் வெற்றி பெறும் முகாமிற்கு இந்தியா அடிமையாக இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமையிருந்தது.
“வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தியும் காங்கிரசும் அறைகூவல் விடுத்ததன் பின்னணி இதுவே. எதிர்ப்பு தெரிவித்த நேரு, ஆசாத் ஆகியோரை காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டியும் பிறவாறு உருட்டியும் காந்தி தனது தீர்மானத்தை ஏற்குமாறு செய்தார். ஓர் எதேச்சதிகாரியாகவே நடந்து கொண்டார். இப்படித்தான் ஏகமனதாக, “வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் பம்பாயில் நடந்த காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி நிறைவேறியது.

ஒரு பக்கம் ஜப்பானிய புது எஜமானர்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறோம் என்று நிரூபிக்க “செய் அல்லது செய்துமடி’ என்று தீவிரமாக காந்தி அறைகூவல் விட்டாலும் இன்னொரு பக்கம் மக்களின் போராட்டங்கள் தனது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்தார். எனவேதான் போராட்டத்திற்கு எவ்விதத் தயாரிப்போ, திட்டமோ தீட்டப்படவில்லை. பேச்சு வார்த்தை நடத்துவதே நோக்கம் என்று சொல்லப்பட்டது.

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் “நான் பெரும் நடவடிக்கைகளைத் தொடங்கும் வரையாவது இந்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டும். உருப்படியான ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் முன் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப பூரணமாகச் சிந்திப்பதாய் நான் வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். போராட்டம் தொடங்கும் முன், பிரச்சினை எழுவதற்கு முன், முதல் நடவடிக்கையாக வைசிராய்க்குப் பேச்சுவார்த்தை வேண்டி எழுதப்படும் என்று காங்கிரசால் விளக்கம் தரப்பட்டது. காங்கிரசுக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வைசிராய்க்குக் கடிதம் எழுதத் தொடங்கினார்கள். முடிக்கும் முன்பே ஆகஸ்ட் 9ம் தேதி காந்தி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு சட்ட விரோதமான ஸ்தாபனம் என அறிவிக்கப்பட்டது. “ஒரு வாரத்தில் வெற்றி’ என்று படேல் சவடால் அடித்தார்.

காங்கிரசுத் தலைவர்களின் கைது மக்களது போராட்டங்களைத் தூண்டிவிடும் என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குத் தெரியும். எனினும், காங்கிரசுத் தலைவர்கள் எவ்வித முன் தயாரிப்பும் செய்யாததால் தன்னெழுச்சியான திட்டமிடாத போராட்டங்களைச் சுலபமாக அடக்கி விடலாம் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கருதியது.

ஆனால் இந்திய மக்களோ, காந்தியின் நயவஞ்சக விருப்பத்தை மீறி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தியின் உபதேசங்களை மீறியும் அவருடைய கண்டனங்களைப் புறக்கணித்தும் மக்கள் நாடெங்கும் வன்முறைக் கிளர்ச்சிகளைத் தொடங்கினர். இந்தியாவெங்கும் கொந்தளிப்பு; குழப்பம்; தனிப்பட்ட பிரிவுகளும், குழுக்களுமே இப்போராட்டங்களை நடத்தின.

இதுதான் “புகழ்பெற்ற’ ஆகஸ்ட் போராட்டம்; இந்தப் போராட்டத்தை காங்கிரசு ஆரம்பிக்கவில்லை; மாறாக, இந்தியாவின் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தினை நடத்தினர்; காந்தியும் காங்கிரசும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவே செயல்பட்டனர். ஆனால் இன்றோ, ஆகஸ்ட் தியாகிகள் என வெட்கமின்றி காங்கிரசுக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்கள். இந்தியாவை புதிய எஜமானனுக்கு (ஜப்பானுக்கு) அடகு வைக்க “வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் போட்ட காந்தியும் காங்கிரசுக்காரர்களும் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் காட்டிக் கொள்வது கயமைத்தனத்தின் உச்சமாகும்!

194344ம் ஆண்டுகளில் யுத்தத்தின் போக்கு மாறியது; உலக அளவில் ஜெர்மனி ஜப்பான் பாசிச முகாம் வீழ்ச்சியடையத் தொடங்கியது; இங்கிலாந்து பிரான்சு முகாம் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது; ஜெர்மனி ஜப்பான் முகாமினுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பார்த்தார் காந்தி! அடித்தார் ஒரு “அந்தர்’ பல்டி! அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாகிவிடப் போகிறதே என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத் திற்கு மீண்டும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்ட வாலை ஆட்டினார். நடந்த போராட்டங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்று வலியச் சொல்ல ஆரம்பித்தார். 1943ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உள்துறைக்கு காந்தி எழுதிய கடிதத்தில், “மொத்தமாகப் பெருமளவில் காங்கிரசுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்களை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை இழக்கும் அளவிற்கு மக்கள் சினத்தால் வெறிகொண்டு விட்டதாய்த் தோன்றுகிறது. நடந்துள்ள நாசத்திற்கு காங்கிரசு பொறுப்பல்ல; அரசாங்கமே பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.”

“இந்தியா முழுவதும் கைதுகள் செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிக வன்முறையாக இருந்ததால், காங்கிரசிடம் பரிவு உள்ள மக்கள் தன்னடக்கத்தை இழந்து விட்டார்கள். இந்தத் தன்னடக்க இழப்பிற்கு காங்கிரசு உடந்தை என்று பொருளாகி விடாது” என்று தெரிவித்தார்.

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடந்த அகில இந்திய காங்கிரசுக் கமிட்டி கூட்டில் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அது முழுமையாக வரையப்படாது நின்றுவிட்டது. 1943 ஜூலை 15ல் காந்தியார் இந்த வரையப்படாத சுற்றறிக்கையைத் தயக்கத்துடன் மேற்கோள் காட்டினார்; அதில் பின்வருமாறு இருந்தது.

“மகாத்மா முடிவு செய்யும் வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது; எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். ஆயத்தமாக இருங்கள்; ஏற்பாடு செய்யுங்கள்; விழிப்போடு இருங்கள்; ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்”.

காங்கிரசின் சார்பில் நேரு, வல்லபாய் படேல், ந.பி.பந்த் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அறிக்கை 1945, செப்டம்பர் 21ல் வெளியாயிற்று. அதில், “அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு, ஆகஸ்டில் நடந்த போராட்டங்களுக்கும் காங்கிரசிற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை எனக் காலனியாதிக்கவாதிகளிடம் தன்னை நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்ட காங்கிரசு, ஆகஸ்டு மாதத்திலும் அதை அடுத்த மாதங்களிலும் நடைபெற்ற தலைமையற்ற தன்னெழுச்சியான நிகழ்ச்சிகளைப் பின்னாளில் “ஆகஸ்டு போராட்டம்’ என ஏற்பதென்று முடிவு செய்தது. அதாவது, காந்தியின் கண்டனங்களைப் புறக்கணித்து விட்டு மக்கள் நடத்திய போராட்டங்களையே காந்தியும் காங்கிரசும் நடத்திய “ஆகஸ்டு போராட்டம்’ என சுவீகரித்துக் கொண்டனர்.

உண்மையான விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு, இந்திய உழைக்கும் மக்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கண்டனம் செய்த காந்தியும் காங்கிரசும், பின்னர் அந்தப் போராட்டங்களையே காங்கிரசின் தியாகமாக, விடுதலைப் போராட்டமாகச் சித்தரித்துச் சுவீகரித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வக்கிரம்! வரலாற்றுப் புரட்டு!

உண்மையில் வெள்ளையனை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதுதான் காந்தியின் நோக்கமென்றால், சிறையிலிருந்து 1944ஆம் ஆண்டு காந்தியார் வெளிவந்தபின் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காந்தியாரோ “ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது” என்று சொன்னார். ஏனென்றால், “1944ஆம் ஆண்டில் 1942ஆம் ஆண்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது” என்று விளக்கெண்ணெய் விளக்கமளித்தார்.

எனவே, போர் முடியும் தறுவாயில் (ஆகஸ்ட் 1945) உலகெங்கும் மக்கள் விடுதலையை நோக்கி முன்னேறிய போது காந்தியாரின் துரோகத்தனத்தால் இந்தியா போரின் தொடக்கத்தில் இருந்தது போல் ஓர் அடிமை நாடாகவே போரிலிருந்து வெளிப்பட்டது.

தனது புதிய எஜமானர்களான ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத்தியங்களை வரவேற்கவே “வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தி சொன்னார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ எவ்வித நிபந்தனையும் இன்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குப் பக்கபலமாக நின்று போருக்கான உதவிகளைச் செய்தது; யுத்த நிதி திரட்டிக் கொடுத்தது; படைக்கு ஆட்களைச் சேர்த்தது; வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் உற்பத்தியைப் பெருக்கச் சொல்லியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இவ்வாறு காந்தியைப் போலவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் மக்களுக்குத் துரோகமிழைத்தது. ஆனால் காங்கிரசுக்காரர்களோ தாங்கள் “24 காரட்’ சுத்த தேச பக்தர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள்தான் துரோகிகள் என்றும் நேற்றுவரை பிரச்சாரம் செய்து வந்தனர். இன்று காங்கிரசும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பொன் விழா கொண்டாடுகிறார்கள். ஆக, தங்களைத் தேசத்துரோகிகள் என்று காங்கிரசு சொல்லி வந்ததை இரு போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நேற்றுவரை துரோகிகளாய் இருந்த கம்யூனிஸ்டுகள் இன்று திடீரெனத் தேச பக்தர்களாக மாறிவிட்டார்கள் என்று காங்கிரசு சொல்கிறது.

இதுதான் காங்கிரசின் “தேசிய’ கலாச்சாரம்!
இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் “புரட்சி’க் கலாச்சாரம்!
புரிந்து கொள்வோம் இவர்களை!
புறந்தள்ளுவோம் இவர்களை!

நூல்: காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

வெளியீடு
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15

 

 

 

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ்.

_

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே,  மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.

அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.  லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.

இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன.  யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து  ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.

அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி  வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?

ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதற்கெல்லாம்  டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.

போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.

போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!

______________________________________________________

–    ஜான்சி

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

தொடர்புடைய பதிவுகள்

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ் அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்

இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த “”நம்ம ஊரு” த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. “”உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு” என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், “”உணவுக்கு எண்ணெய்” என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்’ என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது “மனிதாபிமான’ அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த “”உணவுக்கு எண்ணெய்” திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் “”பாத் கட்சி” ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் “”ஹம்தான் ஏற்றுமதி” என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் “”பாத்” கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் “”கலகம்” செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், “”நீ மட்டும் யோக்கியமா?” என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் “”வீடியோ” காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் “”வீடியோ” காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான “”வீடியோ” காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், “”தெகல்கா” செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் “”கோப்ரா போஸ்ட்” என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் “”ஆஜ் தக்” என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

“”கோப்ரா போஸ்ட்” இணையத்தளம் மற்றும் “”ஆஜ் தக்” அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக “”வீடியோ” காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

இதைப் பார்த்து “”நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்” என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

“”1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை” என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

“”இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை “படி’ போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

“”தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன” (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் “”வீடியோ” காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை “”ஸ்டார்” அலைவரிசை “”வீடியோ” காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலத்தில் “”நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “”சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்” என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

“”கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்” என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

“””நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து’ என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

– ஆர்.கே.

நன்றி: புதிய ஜனநாயகம் 2006

தொடர்புடைய பதிவுகள்:

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

மவுனம்

மவுனம்pesu copy

நான் இப்போதேதும்
பேசப்போவதில்லை பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகள் இருக்கின்றன
ஆனாலும் நான் இப்போது
பேசப்போவதில்லை மவுனமாயிருக்கிறேன்…….

நான் பேசாமலிருப்பது
பலருக்கும் மகிழ்ச்சியைத்
தரலாம்
பேசாமலிருப்பது கோழைத்தனமாம்
பேசவிடாமல் செய்வது வீரமாம்
நான் கோழையாகவே
இருந்து விட்டுப் போகிறேன்
ஆனால் அது நிரந்தரமல்ல…….

படிப்பிற்காக வேலைக்காக
நான்  செல்லும் இடங்களிலெல்லாம்
பதவியும் பணமும்
என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

நான் மறுத்தாலும்
ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
தேனீர்க்கடைகள் என்னை
பிளாஸ்டிக் டம்ளர்களோடு
வரவேற்கின்றன

என் துயரங்கள் வேதனைகள்
எல்லாம் நினைவலைகளாய்
என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
எல்லாம் உள்ளே வெடித்துக்
குமுறிக்கொண்டிருக்கின்றன
பயமாய் இருக்கின்றது
எங்காவது தப்பித்தவறி
பேசிவிடுவோமோ என்று…….

என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
கனவுகளில்

எல்லாம் பணத்தால்
மதிப்பிடப்படும் போது
நானும் மதிப்பிடப்பட்டிருக்கிறேன்
செல்லாக்காசாக

செல்லாக்காசுகளின் மீதேறி
சிலர் கலசங்களாய்
அமர்ந்திருக்கின்றார்கள்
கலசங்களுக்கு தங்க முலாம்
பூசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது
அவை புனிதமானவையாம்…….

நான் எப்போதும் பேசாமல்
இருக்கப்போவதில்லை
நான்
மட்டுமல்ல நான் நாமாக
நாங்களாக பேசுவோம்
பேசுவோம்

இப்போது பேசுபவர்களெல்லாம்
அப்போது வாய் திறந்துகிடப்பார்கள்
உளுத்துப்போன சன நாயகத்தின்
எச்சில்கள் ஆறாய் ஓட
மொய்க்க வந்த ஈக்களோ
நிலையறிந்து பின்னங்கால்
பிடறியிலடிக்க ஓடும்

பேசுவோம் பேசுவோம்
பேசிக்கொண்டே இருப்போம்
அதிகாரத்தின் விம்மல்கள்
அடங்கும் வரை
உங்களின் மவுனங்கள்
நிரந்தரமாகும் வரை பேசிக்கொண்டே இருப்போம்.

– தோழர் கலகம்

அழுகி நாறும் ஜனநாயகத்துக்கு ’சென்ட்’ அடிக்கும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி!

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குரேஷி கூறியது: நமது நாட்டின் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதனால், வெற்றி பெற்ற பிரதிநிதிகளை “பதவியிலிருந்து நீக்கும் உரிமையை’ மக்களுக்கு வழங்குவது சாத்தியமில்லை. இந்த உரிமை வழங்கப்பட்டால் எல்லோரும் தங்களது பிரதிநிதிகளை அடுத்தடுத்துப் பதவி நீக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

திரும்ப பெறும் உரிமையை அளித்தால் அனைவரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்றால் உனது ஜனநாயகத்தோட யோக்கியதை என்ன? திருடர்கள் மட்டுமே நிற்க முடியும் என்ற ஜனநாயகத்தை மக்கள் ஏற்க வேண்டுமா?

”வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்குவதும் ஆபத்தானது. அப்படிப்பட்ட உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதுவும் நாட்டுக்கு எதிரான மனநிலை அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தவறான செய்தியைப் பரப்புவதற்கு வழி ஏற்பட்டுவிடும். ”

ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த உழைக்கும் மக்க்ள் நாங்கள் இந்திய நாட்டினரே அல்ல, எங்கள் மீது தொடுக்கப்பட்டு இருப்பது ஆக்கிரமிப்பு போர், எங்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று நாள் தோறும் போராடுகிறார்கள். இந்த மக்களின் கோரிக்கையை பரிசீலனைக்கே எடுத்து  கொள்ள முடியாது என்றால் இது என்ன பரிசுத்த ஜனநாயகம்.

”உழைக்கும் மக்களின் உயிர் வாழும் உரிமையே நிராகரிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது.”

’நல்லவனாக பார்த்து தேர்தெடுங்கள்’ என பத்திரிக்கைகள் ஜாக்கி வைத்து தூக்குகின்றனர்(எந்த கிரகத்தில் என்று மட்டும் சொல்வதில்லை). இந்த நல்லவனை தேர்தெடுக்கும் பிரச்சாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியிடமே முதலில் செய்யலாமே.