• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

தோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்!

மக்கள் மொழியில்

மார்க்சியம் சொன்னவர் – சீனப்

பழங்கதை சொல்லி

பாமரர் மனதில் நின்றவர்!

முரண்பாட்டுத் தத்துவத்தை

செழுமைப்பெற செய்தவர்!

செஞ்சீனம் படைத்திட

செம்படை அமைத்தவர்!

பாட்டாளி வர்க்க விடுதலைக்கு

பண்பாட்டுப் புரட்சியைத்

தொடங்கியவர் – எம்

விடுதலைப்பாதையில்

உன் சிந்தனை ஒளிவெள்ளம்!

தோழர் மாவோ நினைவு தினத்தை(செப்டம்பர் 9 -1976)

முன்னிட்டு 

*******************

மாவோ புகைப்படம்:  தோழர் விடுதலை

தொடர்புடைய பதிவுகள்:

மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட  விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”

“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”

1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

000

சிந்தடிகா செல்

சிந்தடிகா – Synthetica  . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.

ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக்  குறியீடுகளுக்குரிய  (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல;  ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.

வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது.  அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.

மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து  உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.

செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்;  அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.

உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.

தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.

குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.

இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள  ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.

கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

000

விஞ்ஞானி கிரெய்க் வென்டர்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட  உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.

25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும்  படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.

எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும்,  விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.

“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய  சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.

மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.

“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.

தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.

அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது.  இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.

000

புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts)  பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம்.  சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.

தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.

அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.

எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations)  உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள்,  பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.

விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும்.  இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.

இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.

கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.

மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”

சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.

உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.

இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி.  இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.

____________________________________________

– மருதையன்,

நன்றி: புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

____________________________________________

தொடர்புடைய பதிவுகள்

இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ!

சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.

கதை:

மிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.

யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.

அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.

ஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.

மார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக்  கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.

லுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.

டாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.

சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.

அங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.

அங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.

அவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.

அவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.

மீண்டும்  பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.

டாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

இளமையின் கீதம் – நூல் விமரிசனம்

 எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ்.

_

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே,  மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.

அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.  லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.

இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன.  யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து  ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.

அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி  வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?

ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதற்கெல்லாம்  டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.

போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.

போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!

______________________________________________________

–    ஜான்சி

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

தொடர்புடைய பதிவுகள்

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ் அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!

தூக்கம் போதாமல் கொதிக்கும் விழிச்சூட்டில்இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
வியர்க்கும் முகம் துடைத்து,
அவசரமாய்… குளித்த தலைதுவட்ட நேரமின்றி
மின்சார ரயிலின் வாசல்படியோரம்
தலைசாய்த்து முடியுலர்த்திப் போகும்
உழைக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா?
இன்று லெனின் பிறந்தநாள்!

ன் தலையில் பட்டு வியர்க்கும் சூரியன்
உன் விரல்கள் பட்டு இறுகும் செங்கல்
உன் மூச்சு பட்டு வளையும் கம்பிகள்
உன் உடலில் பட்டு ஆவியாகும் காற்று
உச்சி வெயிலை உழைப்பாய் மாற்றும்
கட்டிடத் தொழிலாளியே உனக்குத் தெரியுமா?
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரம் என்பதை
நடைமுறைப்படுத்திய தோழர் லெனின் பிறந்தநாள் இன்று!

கிணற்றுத் தவளைக்கும்
நிலவோடு உறவுண்டு!
மழைக்காலத் தவளைக்கும்
வெளிக்காட்டக் குரலுண்டு!
கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி
சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி
கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா…
உனக்குத் தெரியுமா?
பிடித்தமான அடிமைத்தனத்தில்
மக்களை வாழவிடாத புரட்சியாளர் லெனினின் பிறநதநாள் இன்று!

ழைத்து மகிழும் வெறும் பெயரல்ல,
உழைக்கும் வர்க்கம் தெரிந்து பின்பற்ற வேண்டிய கருத்து லெனின்.
உலகம் நன்றாய் இருக்க வேண்டும்
என்று ஒவ்வொருவரும் உபதேசித்துக் கொண்டிருந்தபோது,
இந்த உலகை உருவாக்கிய உழைப்பவர் நன்றாயிருக்க வேண்டும் என்று
நடைமுறைப்படுத்தினார் லெனின்.

ண்ணையே பெயர்க்கும் மழை
வேலி முட்களை முறிக்கும் சூறைக்காற்று
கண்களைக் குழப்பும் மின்னல்…
கண்களே திறந்தாலும் எங்கெனும் இருட்டு…
அழுத்தும் பாறை… ஆளுக்கொரு புலம்பல்
இத்தனைக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் தலைதூக்கும் ஒரு பசுந்தளிர்…
அதுதான் லெனின்…. அதுதான் லெனின்!

சுரண்டப்பட்ட தொழிலாளர் இதயமெங்கும்
ரத்தமாய் கலந்தார்…
எத்தனை முறை கைது செய்தாலும்
உழைக்கும் வர்க்க புரட்சி அலையில்
சித்தமாய் எழுந்தார்…
சிறைப்படுத்த முடியாத சிந்தனையாய்
லெனின் மக்களிடம் கலந்தார்…
வெற்றிடங்களை லெனின் விட்டு வைப்பதில்லை…
பாட்டாளி வர்க்கமாவது.. புரட்சியாவது… என
எள்ளி நகையாடிய எதிரிகளின் மூளையில்
‘பயங்கரமாய்’ நுழைந்தார்…

ன்ன செய்ய முடியும் உங்களால்?
கேட்டது முதலாளித்துவ வர்க்கம்..
என்ன செய்ய வேண்டும்?
விடையறுத்தார் லெனின்…
ரசிய பாட்டாளி வர்க்கமோ புரிந்து கொண்டது… புரட்சி வென்றது.

புரிந்து கொண்டோமா நாம்?
சைபீரியக் கடுங்குளிருக்கு நாடு கடத்திய போதும்
லெனின், தோழர்களின் புரட்சிக் கனல் குறையவில்லை,
சாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே
சடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.

க்கள் மீது நம்பிக்கை வைத்து புரட்சியிலேயே இறங்கினார் லெனின்.
தன் மீது நம்பிக்கை வைத்து
ஒரு தெருமுனைக்கூட்டத்தில்  இறங்கவே நமக்குத் திகில்…
ஆசை மட்டும் போதாது…
ஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…
அவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.

புரட்சிக்கு லீவு போட்டுவிட்டு
பொழுதுக்கும் கூலி அடிமைத்தனத்துக்கு வேலை செய்வதா?
இல்லை.. கூலி அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்ட
கொஞ்சம்.. புரட்சிகர அமைப்பில் இறங்கிப் பார்ப்பதா?

சலாடும் மனங்கள் ஒரு முடிவுக்கு வர
லெனின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்…

_____________________________________________________

– துரை. சண்முகம்
_____________________________________________________

ன்று, ஒளி வருமெனக் காத்திருந்தோம்.

இருண்ட கண்டத்தின்
கடைக் கோடியில்
கேட்பாரற்றுக் கிடந்த
சோகை படிந்த சிற்றூர்.

இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்!

பனிச் சாரல் சடசடக்க
கண்ணாடிச் சன்னல் தடதடக்க
கருப்படர்ந்த இரவின் ஊடாக
வெளியில் பார்வையை
உலவ விட்டுக் காத்திருந்தோம்;
இருளில் வழி சொல்லும்
ஒளிக்காக.

இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும்
என்றார்கள்.
அந்த ஒளியோடு
ஒரு சேதியும் வருமென்றார்கள்!

எங்கள்
பசிக்கான உணவு
குறைக்கப்பட்டிருந்தது.
எங்கள்
உழைப்பின் கூலி
சுறண்டப்பட்டிருந்தது.
ஜமுக்காளத்துக் கிழிசலில்
ஊதைக் காற்றுப் புகுந்து
உயிர்க் குலையும் சில்லிட்டது.

ஏமாற்றம் தந்த
பாலற்ற முலைக்காம்பால்
நிறுத்தாமல் விசும்பின
பச்சிளங் குழந்தைகள்.
வயது முகவரி எழுதிய
வரிகளின் சுருக்கத்தோடு
ஏதாவது உண்ணக்கேட்டு
ஏக்கத்தோடே கை நீட்டி
எங்களையே பார்த்திருந்தது
எங்கள் மூதாதைக் கூட்டம்.
யாவரும்தான் காத்திருந்தோம்.
தினவெடுத்த தோளோடும்
விலிசுமந்த இதயத்தோடும்
இளைஞர்களும் பெண்களும்
கால் கடுக்கக் காத்திருந்தோம்!

எங்கள் யாவரையும்
ஒன்று சேர்ந்திருக்கச் சொல்லி
சேதி வருமென்றார்கள்.
வருகின்ற ஒளியின் ஊடாய்
வானுயரக் கரமுயர்த்தி
விண்ணதிரக் கோஷமிட்டு
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்துவிடச் சொன்னார்கள்.
காத்திருந்தோம்.

செக்கர் சூரியன்;
உடலின் உழைப்பு;
கரங்களில் கருவி;
இவைகளின் வேதி மாற்றத்தால்
சுரக்கும் வியர்வை.

வியர்வை விழுந்தால்
விளையும் கதிர்.
வளையும் இரும்பு.
உழைப்பு எமது.
எனில்;
அதன் வினையும் எமதன்றோ?

வியர்வையின் வினை
மறுக்கப்பட்டுவிட்டதால்
இந்த இருளில்தான்
நாங்கள்
இருந்து கொண்டேயிருந்தோம்.
பழக்கப் பட்டுப்போன
இருளுக்கு மாற்றுத் தேடித்தான்
இங்கே காத்திருந்தோம்.

இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்.

அதோ
வந்துவிட்டது.
வந்தேவிட்டது.
இல்யீச் விளக்கு!
அதன் ஒளிக்கதிரில்
அனைவரும் துள்ளினோம்.
வந்தேவிட்டது
இல்யீச் விளக்கு!

அப்போது எங்களுள்
கூடவே குந்திக்கோண்டிருந்த
பேதமை, மடமை,
ஐயம், மதம்,
கூச்சம், அச்சம்,
அத்தனையும் துணுக்குற்று
இருளில் சிதறியோடியதை
நாங்கள் காணுற்றோம்.

ஒளி சொன்ன சேதியில்,
வந்துதித்த ஒளியினூடாய்,
வானுயரக் கரமுயர்த்தி,
விண்ணதிரக் கோஷமிட்டு,
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்து செயல்பட்டோம்;
குவியல் குவியலாய்.
எங்கள் பின்னால்
எங்களுக்காக,
ஒரு தாயும்கூட நடந்து வந்தாள்.
அப்பக்கூடை தலை சுமக்க!

வினையின் வினையறுக்க
வீர நடையிட்டோம்.
கரத்தில் கரங் கோர்த்து,
நெஞ்சில் உறமிருத்தி,
மண்ணில் குருதி பாய்ச்சி,
நிலம் அதிர நடையிட்டோம்.
அடித்து விரட்டப்பட்டதால்
அரண்மனைக் குகையிலிருந்து
புறமுதுகிட்டோடின
நரித்தோல் உடல்கள்.

பின்,
நாங்கள் வென்றோம்.
வென்ற பின்,
எம் வியர்வை எமதானது;
விளைக் கதிரும் எமதானது;
வளையும் இரும்பு எமதானது;
உழைப்பு எமதானது;
எனில் –
அதன் வினையும் எமதேயானது!
வினை தூண்டியது
இல்யீச் விளக்கு!

நன்றி
விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்!
உனது பிறப்புக்கும்;
உனது போதனைகளுக்கும்;
உனது வழிகாட்டுதலுக்கும்;
உனது இல்யீச் விளக்குக்கும்!

உனது விரல் நீட்டிய திசையில்
கணக்கிலடங்கா இல்யீச் விளக்குகள்
உதித்துக்கொண்டேயிருக்கும்;
ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.
எமை நம்பு
எமதருமை இல்யீச்…!

_____________________________________________________

– புதிய பாமரன்

முதல் பதிவு: வினவு

பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்

ரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்து தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்து கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்ககப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.

விரைவில் தலைநகரை கைப்பற்றி லெனினைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் ரசியாவை பங்கு போட்டுத் கொள்வதைப் பற்றி பகிரங்கமாக பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.

இந்த அபாயகரமான சூழலில் லெனினுடைய முழக்கம் கணீரென எழுந்தது. சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்க படையில் சேருங்கள்.

எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று ரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.

உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள் போர்க்கப்பல்கள் முதலியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் தோழர் லெனின்.

எதிரிகளை வீழ்த்திய செம்படை

லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.

அவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால்? மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டன.

தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளை பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டியப் பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.
எதிரிப் படைகளை முறியடிக்க செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி துவக்கியது.

பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.

அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.

மக்களின் மகத்தான தலைவர் லெனின்

லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்க தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர்.ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தது. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைக்களுக்கு அவற்றை விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புசப்பற்ற கஞ்சி குடித்தார்.

லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தது. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதை பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார்.

கடும் பஞ்சத்திலும், போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கின.

ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை

போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய வசயங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத்தொடங்கினார்.

ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.

ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.

சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சமீபத்தில் தான் அகற்றப்பட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்கிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! நவம்பர் -7 புரட்சி தினத்தில் உறுதியேற்போம்.

தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.

சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

 லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.
ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.

சதியை முறியடித்த லெனின்

 ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.
லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.

மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.

புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக, என்ஜின் டிரைவராக மாறுவேடம் பூண்டு வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்தநகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகாரியின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம் காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.

மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.

ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தி துரோகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு ரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.

சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.

மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.

தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் நொடியில் மறைந்தது.

நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.

தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.

மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

 சைபீரியச் சிறைவாசம்

 1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும். எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும். ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.
ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை. அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.

மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.

அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

 1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்கள் கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படி கூறினர்.
இந்தக் கோழைக்களுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார்.

இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோரிக்கை மறுக்கப்பட்டது உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.

லெனின் தேர்வு செய்த பாதை போராட்டமே வாழ்க்கையாக…!

துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன் 

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.

அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால் குடும்பம் நிலைகுலைந்து போனது.

அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.

வக்கீல் உருவில் ஒரு போராளி!

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடி ஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள் குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர். ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும் வெளியேறினார்.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூரியில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில் இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.

அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.

லெனின் தேர்வு செய்த பாதை

 லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.

இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்க்கம் அவருடைய நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.

போராட்டமே வாழ்க்கையாக…!

லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.

லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.