• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

இந்திய நாடாளுமன்றம் – பன்றி தொழுவத்தின் 60 ஆண்டு கால சாதனை!

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்

01_2006.jpgஇந்தியாவில் உள்ள பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம்தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு என்று முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பிற போலி கம்யூனிச நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அங்கிருந்தெல்லாம் அரசியல் நிபுணர்கள் வந்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படுவதை நேரில் கண்டு வியந்து போனார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்புதான் கம்யூனிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்த “”நம்ம ஊரு” த.தே.பொ.க. மணியரசன் கும்பல் உட்பட எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் கூட பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பே தமது திட்டமென்று மாற்றிக் கொண்டார்கள்.

இந்த அரசியலமைப்பு இவ்வளவு காலம் நீடித்திருப்பது, பல தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதே இதன் வெற்றியைப் பறைசாற்றுவதாக அவர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய வெற்றியின் இரகசியம் என்னவென்று அவர்கள் பேசுவதில்லை. அது இதுதான்:

இந்தியாவின் பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போன பிணமாகக் குப்பைமேட்டில் திறந்தவெளியில் கிடக்கிறது. அதன் முடைநாற்றம் மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், செத்து அழுகிப் போன பிணத்தைக் கொத்தித் தின்னும் கழுகு காக்கைகளுக்கு அது ருசியான விருந்தாகவே தெரிகிறது. அந்த விருந்தில் கலந்து கொள்ளும் காக்கைகள் போல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கும், பதவி வகிக்கும் கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பொறுக்கித் தின்பதற்கு வசதிகளும் வழிவகைகளும் உள்ளன.

ஆளுங்கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, எல்லாக் கட்சிகளுக்கும் பொறுக்கித் தின்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்கிற ஒரு காரணமே போதும். இதனாலேயே பல கட்சி நாடாளுமன்றம், மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றத்தோடு நீடித்திருக்க முடிகிறது. இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.

இது இப்படித்தான் செயல்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. சமீபத்தில் வெளியாகி நாடே நாறும் வோல்கர் கமிசன் அறிக்கை விவகாரம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு அதன் உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிய விவகாரம், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இலஞ்சம் வாங்கிய விவகாரம் இவை அனைத்திலும் ஏதோ சில நபர்கள், ஏதோ ஒரு கட்சி மட்டும் சிக்கவில்லை. ஏறக்குறைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சிக்கியுள்ளனர்.

வோல்கர் கமிசன் அறிக்கை பின்னணி

1990களின் ஆரம்பத்தில் குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் சதாம் உசேன் படைகள், அந்நாட்டு எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன. குவைத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பது என்ற பெயரில் அதிநவீன ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் வந்திறங்கிய அமெரிக்கப் படைகள் வெறித்தனமான தாக்குதல் போர் நடத்தி ஈராக் இராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், அமெரிக்கா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வளமிக்க எண்ணெய் வயல்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தனது மேலாதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. “”உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பெருந்திரள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வைத்திருப்பதோடு, அணுஆயுத உற்பத்திக்கான தயாரிப்பிலும் இறங்கியுள்ள சதாமின் ஈராக்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பேராபத்து விளைந்துள்ளது; பல ஆயிரம் ஷியா மற்றும் குர்து மக்களைப் படுகொலை செய்து மனித உரிமைகளை மீறும் குற்றங்கள் செய்துள்ளது, சதாம் உசைன் அரசு” என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஈராக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதிக்கச் செய்தது, அமெரிக்கா. அதோடு இராணுவ முற்றுகையும் செய்தது.

ஈராக்குக்கு எதிரான இந்த இராணுவ முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் அந்நாடு பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டது. இவற்றால், எண்ணெய் வளமிக்கதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தி உலகச் சந்தையில் இருந்து மருந்து மற்றும் உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளைக் கூட வாங்க முடியாமல் ஈராக் திணறியது. இலட்சக்கணக்கான குழந்தைகள் போதிய மருந்துப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் மாண்டு போயின.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்று, ஈராக்கிலுள்ள இராணுவஆயுத நிலைகளை ஐ.நா. பிரதிநிதிகள் சோதனையிட ஈராக்கின் சதாம் அரசு சம்மதித்தது. அதை ஏற்ற ஐ.நா. சபை, ஈராக்கில் மக்கள்திரள் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா, அவை ஏற்கெனவே குவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை சோதனை செய்வதற்கு தனது குழுவை அனுப்பும் அதேசமயம், “”உணவுக்கு எண்ணெய்” என்ற இடைக்காலத் திட்டத்தை வகுத்து, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பெட்ரோலிய எண்ணெய் விற்கவும் இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் ஈராக்கை அனுமதித்தது.

ஆனால் அமெரிக்காவோ, தொடர்ந்து சதாம் அரசு மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தது. இறுதியில் மக்கள் திரள் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாகவும், அவை தயாரிப்பதற்கான இரகசிய ஆலைகள் வைத்திருப்பதாகவும், ஐ.நா. சோதனைக் குழு சுதந்திரமாக ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும், அணுஆயுதங்களைக் கூட உற்பத்தி செய்வதற்கு முயல்வதாகவும், அமெரிக்கா மீதான 2002 செப்டம்பர் 11 விமானத் தாக்குதல் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா அமைப்புடன் அச்சதியில் ஈராக்கு பங்கு இருப்பதாகவும் பல பொய்யான பழிகள் சுமத்தி 2004இல் ஈராக்கைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசைன் மற்றும் அவரது சகபாடிகள் கைது செய்யப்பட்டு தண்டிப்பதற்கான விசாரணை நாடகமும் நடத்தி வருகிறது.

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்து, ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதற்கு சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கடந்த ஓராண்டில் மேலும் அம்பலமாகிப் போனது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளின் மக்கள் அனைவரும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈராக்கில் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் நிறைந்த சதாம் உசைனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே போர் தொடுத்தோம்’ என்று கூறும் அமெரிக்கா, இந்தக் கோணத்தில் விசாரணை தண்டனைக்கு ஆதாரங்களைத் தேடுகிறது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தவும், சதாம் ஆட்சியைக் கவிழ்த்து, நிறுவப்பட்ட பொம்மை அரசுக்கு நியாயவுரிமையைக் கோரவும் சதாமுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்தும் வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. பேரழிவு ஆயுதக் குவிப்பு, அல்கொய்தா பயங்கரவாதிகளின் கூட்டாளி போன்ற குற்றச்சாட்டுக்கள் பொய்த்துப் போனபிறகு, சதாமுக்கு எதிரான உள்விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தது. அதாவது “மனிதாபிமான’ அடிப்படையில் ஐ.நா. சபை அளித்த “”உணவுக்கு எண்ணெய்” திட்டத்தைக் கூட சதாம் உசைன் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடித்திருக்கிறது என்று நிரூபிக்கும் வேலையில் ஈடுபட்டது, அமெரிக்கா.

உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் நடந்த இலஞ்சஊழல் முறைகேடுகளை விசாரிப்பது என்று ஐ.நா. சபை மூலம் தீர்மானித்து வோல்கர் உட்பட ஏகாதிபத்தியக் கைக்கூலிகளைக் கொண்ட விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், சதாம் மீதான இலஞ்ச ஊழல் முறைகேடுகளைத் திரட்டித் தருவதுதான். இதற்காக ஐ.நா. சபையைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சதாம் மீதான சகநாட்டவர் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஆதாரப்படுத்த, ஷியா, குர்து பிரிவின் பிரதிநிதிகள் என்ற பெயரில் வேறு சிலரைக் கொண்ட முகாம்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஈராக்கை ஆண்ட சதாம் உசைன் கும்பல் இலஞ்ச ஊழல், சகநாட்டவர் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றங்கள் புரியாத சுத்தமான ஜனநாயகத் தன்மை உடையது அல்ல என்பது உண்மைதான். இராணுவ பாசிச ஆட்சி நடத்தியதோடு, குவைத், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போர் நடத்திய கும்பல்தான். இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக இசுலாமிய மதவாதம், தேசியம், சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளைத் தரித்துக் கொண்டதுதான்.

ஆனால், இந்தக் குற்றங்களுக்காக சதாம் கும்பலை விசாரிக்கவோ, தண்டிக்கவோ சிறிதும் அருகதையற்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஏனென்றால், ஒருபுறம் பேரழிவு ஆயுதங்களை மலைமலையாக அமெரிக்காவே குவித்து வைத்திருப்பதோடு, இலஞ்ச ஊழல், மனித உரிமை மீறல்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஊற்றுமூலமாக அது விளங்குகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரில் சதாமின் ஈராக்குக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கியதோடு, ஷியா, குர்து மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்திருக்கிறது.

எரிகிற வீட்டிலும்கொள்ளையடிக்கும் எமகாதகர்கள்

கடந்த நவம்பரில் அந்த வோல்கர் கமிசன் அறிக்கை வெளியானது. உணவுக்கு எண்ணெய் திட்டத்தின் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 270 பேருக்கு சதாமின் ஆட்சி எண்ணெய் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலித்து சதாமின் “”பாத் கட்சி” ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுகிறது வோல்கர் கமிசன். அப்படி ஒப்பந்ததாரர் அல்லாத ஈராக் எண்ணெய் ஒதுக்கீடு செய்து ஆதாயம் அடைந்தவர்களின் வரிசையில் இந்தியாவின் மிகப் பெரிய தரகு முதலாளியும் இன்றைய ஆளும் காங்கிரசுக்கு நெருக்கமானதுமான அம்பானி குடும்பத்தின் ரிலையன்சு, காசுமீரின் பாந்தர் கட்சித் தலைவர் பீம்சிங், காங்கிரசு கட்சியின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் மற்றும் காங்கிரசுக் கட்சியும் இடம் பெற்றுள்ளனர்.

2001ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காங்கிரசுக் கட்சியின் தூதுக் குழுவுக்குத் தலைமையேற்று ஈராக்குக்குப் போன நட்வர்சிங் கூடவே தனது மகன் ஜகத்சிங் மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான அந்துலீப் சேகலை அழைத்துக் கொண்டு போய், அவர்கள் மூலம் 40 இலட்சம் பீப்பாய் பெட்ரோலிய எண்ணெய் ஒதுக்கீடு பெற்று, சேகலின் “”ஹம்தான் ஏற்றுமதி” என்ற கம்பெனி பெயரில் சதாம் உசைனின் “”பாத்” கட்சிக்கு ஜோர்டான் நாட்டு வங்கி மூலம் சேவைக் கட்டணம் செலுத்தியுள்ளனர். காங்கிரசுப் பிரமுகராக இருந்து, அக்கட்சித் தூதுக் குழுவில் சென்ற அனில் மதராணி இதை உறுதி செய்துள்ளார்.

இச்செய்தி வெளியானவுடன், தனக்கு எதிரான அரசியல் சதி, ஆதாரமற்றது என்று மறுத்த நட்வர் சிங்கும் அவரது மகனும் ஈராக் பயணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறினர். நட்வர் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரசு, ஒருபுறம் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் விசாரணை நடத்திக் கொண்டே, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பதக் தலைமையில் விசாரணைக் கமிசன் போட்டு பிரச்சினையை மழுப்புவதில் இறங்கியது.

நட்வர்சிங்கைப் பதவி நீக்கம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் “”கலகம்” செய்தன எதிர்க்கட்சிகள். முதலில் நட்வர்சிங் மீது நடவடிக்கையை வலியுறுத்திய போலி கம்யூனிஸ்டுகள் பிறகு, எல்லாம் சி.ஐ.ஏ. சதி என்றும், நட்வர் சிங் இடதுசாரி முற்போக்காளர், அமெரிக்க எதிர்ப்பாளர், வோல்கர் கமிட்டியே அமெரிக்க சி.ஐ.ஏ. புனைவு என்ற நிலையெடுத்துள்ளது. நட்வர் சிங்கை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசியான மன்மோகன் சிங்கிடம் அயலுறவுத் துறையை ஒப்படைக்கவே அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள்தாம் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசையும் ஆதரிகின்றனர். மறுபுறம் நட்வர் சிங்கும் சி.பி.எம். கூறுவதுபோல, அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. பதவியேற்ற மறுவாரமே அமெரிக்காவிற்குப் போய் புஷ்ஷிடம் மண்டியிட்டு, ஈராக்கிற்கு இந்தியப் படை அனுப்புவதை உறுதி கூறியவர்; இங்கே ஏற்பட்ட கடும் எதிர்ப்பே, அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விட்டது.

ஈராக் விவகாரத்தில் தன்னை ஆதரிக்காத, சதாம் ஆதரவு நட்வர் சிங்கையும், காங்கிரசையும் பழிவாங்கவே வோல்கர் கமிட்டி அறிக்கையை அமெரிக்கா தயாரித்துள்ளது என்றும் போலி கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால் நட்வர் மன்மோகன் சோனியா கும்பல்தான் அமெரிக்காவுடன் அணுஆயுத இராணுவ ஒப்பந்தம் போட்டது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதியை ஆதரித்து, அணுஆயுத தடை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள் வெளிவந்தது காரணமாக, காங்கிரசு ஊழலை மறைப்பதற்காக நட்வர் சிங்கிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், “”நீ மட்டும் யோக்கியமா?” என்ற வழக்கமான பாணியில், ஈராக் உணவு எண்ணெய் திட்டத்தால் காங்கிரசு மட்டும் ஆதாயமடையவில்லை, பா.ஜ.க.வும்தான் ஊழல் செய்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை காங்கிரசு வெளியே கொண்டு வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்திருக்கிறது. ஈராக்கில் உள்ள இந்தியத் தூதர் அப்போதே இது குறித்த செய்தியை, பா.ஜ.க. அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் பா,ஜ.க. அரசுக்கு இந்த உண்மை தெரிய வந்தும் தனக்குச் சாதகமாக, காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக அது பயன்படுத்தாதற்கு காரணம் இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு கிடைத்திருப்பதுதான் என்று எதிர் குற்றச்சாட்டு வீசப்படுகிறது. குறிப்பாக, வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, சதாமின் மகனுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார்; அவருக்கு எண்ணெய் விவகாரத்தில் தொடர்பு இருந்தது என்று ராஜீவுக்கும் காங்கிரசுக்கும் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரசு அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், உ.பி. மாநில முன்னாள் ஆளுநருமான ரமேஷ் பண்டாரி கூறுகிறார்.

எப்படியோ அமெரிக்கா, தனது எதிரிக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டின் சிதறல்கள் தனது விசுவாசிகளான இந்திய முன்னாள்இன்னாள் ஆட்சியா ளர்களையும் பதம்பார்த்து விட்டது. இந்தநாட்டில் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது என்று சொன்னால், ஊழல் பரவலாக்கப்படுகிறது; ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் கூட இலஞ்ச ஊழல் களுக்கான வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சந்தேகமின்றி இந்த வகையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகச் சிறந்து விளங்குகின்றது.

கேள்வி கேட்க இலஞ்சம்! சர்வகட்சி ஜனநாயகம்!

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்துக் கட்சி இலஞ்ச ஊழல் மாண்பை நிரூபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தொழில் குழுமங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கும் “”வீடியோ” காட்சிகள்; உள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் பெறும் எம்.பி.க்கள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இலஞ்சம் கேட்கும் “”வீடியோ” காட்சிகள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன.

முந்தைய பா.ஜ.க. ஜனதா தள கூட்டணி ஆட்சியின் போது ஆயுத பேர நாடகமாடி அக்கட்சிகளின் தலைவர்கள் இலஞ்சம் வாங்கக் கூடியவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான “”வீடியோ” காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பினார், “”தெகல்கா” செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் அனிருத் பெகல். இப்போது அவர் “”கோப்ரா போஸ்ட்” என்ற செய்தி இணையத்தளத்தின் சொந்தக்காரரும் ஆசிரியருமாக உள்ளார். இவர் “”ஆஜ் தக்” என்ற செய்தி அலைவரிசையுடன் இணைந்து, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

“”கோப்ரா போஸ்ட்” இணையத்தளம் மற்றும் “”ஆஜ் தக்” அலைவரிசையைச் சேர்ந்த செய்தியாளர்களைக் கொண்ட குழு ஒன்று, சிறுதொழில் முனைவோர் சங்கம் என்ற பெயரில் எம்.பி.க்கள் சிலரை அணுகி, சங்கத்துக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான பேரங்கள் நடத்தி பதினைந்தாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுத்து, அதை இரகசியமாக “”வீடியோ” காட்சியாகப் பதிவும் செய்து ஒளி பரப்பிவிட்டது.

இதைப் பார்த்து “”நாங்கள் ஆழமான வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துவிட்டோம்” என்று தற்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பம்மாத்து பண்ணியிருக்கிறார். ஆனால், இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது பல ஆண்டுகளாக நடப்பது எம்.பி.க்கள் உட்பட அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்த விசயம்தான்!

“”1980கள் நெடுகவும் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் மருந்துக் கம்பெனிகள் எம்.பி.க்களைப் பயன்படுத்தி கேள்விகளும் எதிர்க் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இந்தியாவில் ஒன்றும் விதிவிலக்கானதில்லை” என்கிறார் ராஜீவ்சோனியா இருவருக்குமே நெருங்கிய காங்கிரசு மூத்த தலைவரும் மேலவை எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்.

“”இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள்தான்; மாபெரும் சுறாக்களையெல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை “படி’ போலப் பெற்றுக் கொண்டு, தொழில் குழுமங்கள் சார்பில் நிரந்தரப் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்கள் பலரும், சில குறிப்பிட்ட ஆதரவுக் குழுக்களில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது அரசியல் வட்டாரத்திலோ, நாடாளுமன்ற வட்டாரத்திலோ தெரியாத விசயமுமல்ல.

“”தொழில் குழுமங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எம்.பி.க்களுக்கு ரொக்கம் மட்டுமல்லாமல், இதர சலுகைகள், போனஸ், நிறுவனப் பங்குகள் (ஷேர்கள்) உள்பட பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள தொழில் குழுமங்கள் அல்லது அமைப்புக்கு லாபத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளையே அந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேட்கின்றனர். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் தொழில் நிறுவனக் குழுமங்கள், தம் எதிரி நிறுவனங்களை முடக்குவதற்கான கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு அரசியல்வாதிகளைக் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்தன” (தினமணி 19.12.05) என்று எழுதுகிறார், மூத்த செய்திக் கட்டுரையாளர் நீரஜா சௌத்ரி.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுவது பழைய, ஒப்பீட்டு ரீதியில் சிறிய விசயம்தான். நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்துக்குக் கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவே தங்கள் பிரதிநிதிகளை தொழில் நிறுவனங்கள் நியமிக்கச் செய்கின்றன. இதற்கும் மேலேபோய், தரகு அதிகார முதலாளிகளே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளையே அரசியல் கட்சிகளிடம் பேரம்பேசி வாங்கி விடுகின்றனர். பா.ஜ.க. மற்றும் காங்கிரசைப் போலவே, மாயாவதி, முலயம் சிங் கட்சிகள் முக்கியமாக இதைச் செய்கின்றன.

ஒழுக்க சீலர்களின் கட்சி என்று நாடகமாடும் பா.ஜ.க.வினர் ஆறுபேரும், பிழைப்புவாத மாயாவதி கட்சியினர் மூவரும், லல்லு, முலயம், காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவருமாக 11 எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்குபவர்களின் “”வீடியோ” காட்சியில் சிக்கியுள்ளனர். பா.ஜ.க. தமது கட்சிக்காரர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்களை நீக்குவதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாதி அரசியல் நடத்தும் மாயாவதி, லல்லு, முலயம் கட்சிகளுக்கு லஞ்ச ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை. இதெல்லாம் தனது கட்சிக்கு எதிரான சதி என்று கூறும் மாயாவதி தனது ஊழல் எம்.பி.க்களுக்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்தியிருக்கிறார்.

இந்த இலஞ்ச நடவடிக்கை அம்பலமாக்கப்பட்ட அதேபாணியில் அடுத்ததாக, ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சிக்கு என்று தரப்படும் நிதியை ஒதுக்கீடு ஒப்புதல் கொடுப்பதற்காக, மூன்று பா.ஜ.க., இரண்டு முலயம் கட்சி, மாயாவதி, காங்கிரசு கட்சிகளில் தலா ஒருவர் என ஏழு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்குவதை “”ஸ்டார்” அலைவரிசை “”வீடியோ” காட்சி எடுத்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பரபரப்பாகவும், உடனேயும் நடவடிக்கை எடுத்த கட்சிகளும், நாடாளுமன்றமும் இரண்டாவது விவகாரத்தில் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி சம்பந்தப்பட்ட அமைச்சக விசாரணை என்பதாக திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச காலத்தில் “”நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான்” என்று எல்லாக் கட்சிகளும் வெளிப்படையாகவே மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. “”சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்ததற்காக எம்.பி. பதவியைப் பறிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை என்று அவர்கள் கூறுவார்கள்” என்கிறார், நீரஜா சௌத்ரி. இப்படியே போனால், ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து யாருமே தப்ப முடியாது; ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மாற்றி விடுவார்கள்.

“”கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும்தான் இதிலெல்லாம் சிக்காது ஒழுக்க சீலர்கள்” என்று அறிவுஜீவிகளால் பாராட்டப்படுகிற இவர்கள், சிக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதுதான் உண்மை. 20,30 சினிமா படங்களை அருவெறுப்பாக எடுத்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு அற்பத்தனமான, பத்தாம்பசலிக் குடும்பப் படத்தையும் எடுத்து காசு பார்ப்பது போன்றது போலி கம்யூனிச கட்சிகளின் செயல். ஏற்கெனவே பன்றித் தொழுமாகி விட்டது நாடாளுமன்ற ஜனநாயகம். அந்தப் பன்றிகள் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்புவதுதான் இவர்கள் வேலை.

“””நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேலிக் கூத்து’ என்று காலம் காலமாக தீவிர கம்யூனிஸ்டுகள் சொல்லி வருவது உண்மைதானோ என்று பொதுமக்கள் வீதிக்கு வீதி பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறது, பிரபல பார்ப்பன கிசுகிசு ஏடான ஜூனியர் விகடன். இதே அச்சம்தான் போலி கம்யூனிஸ்டுகளுக்கும்! ஆனாலும் இந்த உண்மையை என்ன செய்தும் மூடி மறைத்துவிட முடியாது!

– ஆர்.கே.

நன்றி: புதிய ஜனநாயகம் 2006

தொடர்புடைய பதிவுகள்:

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை

புதுமைப்பித்தன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால், ‘என்னமோ மத்திய அரசு பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, மத்திய அரசு பல்கலைக்கழகம்’ என்று என்னை சுட்டிக் காட்டி, மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் இலட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருப்பார். இதன் மூலம் பலரது மயக்கத்தை தெளிய வைத்திருப்பார்.

பின்னே… ஏதோ, தனியார் கல்லூரிகள் மட்டுமே உள் கட்டமைப்பு இன்றி இருப்பதாகவும், மாணவர்களிடம் இலட்சம் இலட்சமாக கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதாகவும், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும், பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதி இருப்பதாகவும், குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து இயங்குவதாகவும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே…

எங்கே சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த எண்ணமே கடைந்தெடுத்த பொய். அதற்கு நானே சாட்சி. இத்தனைக்கும் நான் அரசு கல்லூரி அல்ல; மத்திய அரசின் கீழ் இயங்கும் அரசு பல்கலைக்கழகம்!!!

சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். என் பெயர், ‘கடல்சார் பல்கலைக்கழகம்‘. இந்திய அரசுதான் என் அப்பா, அம்மா. இந்திய ஜனாதிபதிதான் எனது பாதுகாவலர். அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.

நான் பிறந்தது 2006ம் ஆண்டில். அதற்கு முன்புவரை கடல்சார் பல்கலைக்கழகம் என்று எதுவும் தோன்றவில்லை. பதிலாக, கொச்சி, கொல்கத்தா, மும்பை உட்பட நாட்டின் பல இடங்களில், பல கல்லூரிகளில், கடல்சார் பட்டப் படிப்புகள் என்னும் மெரைன் கோர்ஸ் அல்லது டிப்ளமோ வகுப்புகள் என்ற பெயரில் உயிரணுக்களாக சிதறிக் கிடந்தேன். என்னை சிசுவாக மாற்றியதில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நாட்டை சூறையாடும் மறுகாலனியாதிக்கச் சூழலுக்கு பெரும் பங்குண்டு.

காரணம், கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது அதன்பிறகுதான். கப்பல்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்ட – வழங்கப்படும் – மாதச் சம்பளத்தின் தொகை, உயர் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை வாய் பிளக்கச் செய்தது. எனவே புற்றீசல் போல் தோன்ற ஆரம்பித்த ‘கீத்துக் கொட்டாய்’ தனியார் கல்லூரிகளில், கடல்சார் படிப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டால் போதும்… உடனே தங்கள் வாழ்நாள் சேமிப்பை தாரை வார்த்து அந்தப் படிப்பில் தங்கள் வாரிசுகளை சேர்க்க முண்டியடித்தார்கள்.

உண்மையிலேயே கப்பல்களில் பயிற்சி அளிக்கிறார்களா… லேப் வசதி இருக்கிறதா… கற்றுத் தரும் பேராசிரியர்களின் தகுதி என்ன… என்று எதைக் குறித்தும் ஆராய நடுத்தர வர்க்கம் தயாராக இல்லை. சான்றிதழ் கிடைத்தால் போதும் என திருப்தி அடைந்தார்கள்.

ஆனால், அந்தச் சான்றிதழ்களை ஏற்க கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனங்கள் குறைவு. எனவே தனியாருக்கு சொந்தமான – குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான – கப்பல்களில்தான் பணிக்கு சேர வேண்டும். அந்த நிறுவனங்கள்,  இந்தச் சான்றிதழ்களை தங்கள் மலத்தை துடைக்கக் கூட பயன்படுத்த மறுத்தன. இதனால் கடல்சார் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. புதிதாக இப்படிப்புக்கு சேர வந்தவர்களும் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

இப்படியே போனால், பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் கடல்சார் படிப்புத் துறையை தங்கள் கல்லூரிகளில் இருந்தே நீக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்பதை உணர்ந்த தனியார் கல்லூரிகள், இந்தப் படிப்புக்கு என்று ஒர் அரசு பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். அப்படியொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழை ஏற்பதாக தனியார் கப்பல் நிறுவனங்களும் அறிவித்தன.

இதனை தொடர்ந்துதான் 2006ம் ஆண்டு நான் குறை பிரசவத்தில் பிறந்தேன். நியாயமாகப் பார்த்தால் என்னை இன்குபேட்டரில் வைத்து பராமரித்திருக்க வேண்டும். உரிய மாதங்கள் முடியும் வரை என்னை கண்ணும் கருத்துமாக பாதுகாத்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறை செய்யவேயில்லை. பதிலாக, குறை மாதங்களில் அறுத்து எடுத்த என்னை, சென்னை கடலோரம் வீசி எறிந்துவிட்டார்கள். இதற்கு காரணம், அப்போது மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. வட மாநிலங்களில் என் பிறப்பு நிகழாமல், தென் மாநிலத்தில் – குறிப்பாக தமிழகத்தில் – நான் பிறந்தது அவரது சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திமுகவும் தேர்தல் அறிக்கைகளில் இதனை மாபெரும் வரலாற்று நிகழ்வாக குறிப்பிடுகிறது.

உண்மையிலேயே என் பிறப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா? என் பிறப்பு மூலம் தமிழகம் ஜொலிக்கிறதா? சத்தியமாக இல்லை. கேழ்வரகில் எப்படி ஒருபோதும் நெய் வடிவதில்லையோ அப்படி கடல்சார் பல்கலைக்கழகமாகிய என்னை தமிழக மக்களின் நலன் கருதி டி.ஆர்.பாலு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிறக்கச் செய்யவில்லை.

டி.ஆர். பாலு – துணை வேந்தர் விஜயன்

டி.ஆர்.பாலுவின் சம்பந்தி நடத்தும் ‘சாய்ராம் பொறியியல் கல்லூரி’யில் என் தொடர்பான கோர்ஸ் இருக்கிறது. அதுமட்டுமா… ரவுடித்தனம் செய்யும் ஐசரி கணேஷுக்கு சொந்தமான ‘வேல்ஸ்’ கல்லூரியில், நடிகர் விவேக் உரிமையாளராக இருக்கும் காலேஜில்… என திமுகவுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வேண்டப்பட்டவர்கள் நடத்தும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஏதோவொரு வகையில் என் சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ‘அங்கீகாரம்’ வழங்கத்தான் என்னை வலுக்கட்டாயமாக சென்னையில் பிறக்க வைத்திருக்கிறார்களே தவிர வேறு எந்த பொடலங்காய் சாதனைகளும் காரணமில்லை. அதாவது, ஜெயலலிதாவின் ஆட்சியில் பால்வாடி எல்லாம் எப்படி அரசு சுகாதார நிலையங்களாக ஒரே இரவில் உருமாறியதோ அப்படித்தான் சூல் கொண்ட மறு விநாடியே என் பிறப்பு நிகழ்ந்தது.

”இது நல்ல கதையாக இருக்கிறதே… வேண்டுமென்றே டி.ஆர்.பாலுவின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறாய். திமுகவின் மீது இப்படி அவதூறு கிளப்ப ஜெயலலிதாவிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினாய்…” என சில சில்லுண்டிகள் கேட்கக் கூடும். அவர்களுக்காகவே விஜயனை அறிமுகப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது.

இந்த விஜயன் வேறுயாருமல்ல, எனது உப பாதுகாவலர்தான். வைஸ் சான்சிலர் என்று அழைக்கப்படும் இவர், உண்மையில் விசி ஆக இருக்கவே தகுதி இல்லாதவர். பொதுவாக மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு வைஸ் சான்சிலராக நியமிக்கப்படுபவர், சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்திருக்க வேண்டும். அதிலும் என்னைப் போன்று குறிப்பிட்ட படிப்பை சார்ந்த பல்கலைக்கழகமாக இருந்தால், அது குறித்த கல்வியறிவும் அனுபவமும் அவசியம்.

ஆனால், விஜயனிடம் இந்தத் தகுதிகள் எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் இவர், ஏதோ மெரைன் கோர்ஸில், தான் பழம் தின்று கொட்டை போட்டதாக தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் இவர் ஆசிரியராக பணிபுரிந்து கற்றுத் தந்த நிறுவனம் எது தெரியுமா? ‘மன்னார் அண்ட் மன்னார்’ கம்பெனி! ஐடிஐ என்று கூட சொல்ல முடியாத ஒரு நிறுவனத்தில், அதுவும் அங்கீகரிக்கப்படாத இன்ஸ்டிடியூட்டில், பேராசிரியராக இருந்தாராம்.

உடனே, ‘மத்திய அரசின் கடல்சார் பல்கலைக்கழகமே இப்போதுதானே வந்திருக்கிறது? எனவே அனுபவம் வாய்ந்த விசி கிடைப்பது கடினம்… இருப்பவரை வைத்து தொடங்கியதை தவறு என்று சொல்ல முடியாது…’ என சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இராமச்சந்திரன் என்னும் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர், வைஸ் சான்சிலருக்கு என்று யூஜிசி குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதிகளும் பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், விசி ஆக நியமிக்கப்படுபவரை 3 பேர் கொண்ட குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். விஜயன் விஷயத்தில் இதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆமாம், ஒருவர் கூட இவரை பரிந்துரை செய்யவில்லை. அப்படியிருந்தும் சட்டத்துக்கு புறம்பாக, கொல்லைப்புறம் வழியாக, விஜயனை விசி ஆக அமர வைத்து அழகு பார்த்தவர் – பார்க்கிறவர் – யார் தெரியுமா?

சாட்சாத் டி.ஆர்.பாலுவேதான். காரணம், விஜயன், நம்பர் ஒன் அல்லக்கை. டி.ஆர்.பாலுவின் பினாமி. தவறாமல் கப்பம் கட்டும் நேர்மையாளர். இந்தத் தகுதிகள் இராமச்சந்திரனிடம் இல்லை. அதனால் அவருக்கு எனது உப பாதுகாவலர் பதவி வழங்கப்படவில்லை.

சொந்தமாக வீடு இருக்கும் வைஸ் சான்சிலர், வீட்டு வாடகை என அரசிடமிருந்து எந்தத் தொகையையும் வாங்கக் கூடாது என்பது விதி. ஆனால், விஜயன், சொந்த வீட்டில் வசித்தபடி அதற்காக மாதா மாதம் அரசிடமிருந்து வாடகை வசூலித்து வருகிறார். ஒரு கார் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பது இன்னொரு விதி. இதையும் 3 கார்கள் வைத்தபடி மீறுகிறார் விஜயன். இந்த 3 கார்களுக்கும் 3 ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் வழங்க எனது உப பாதுகாவலர் என்ன பைத்தியக்காரரா? அதுதான் வருடந்தோறும் தவறாமல் வரி கட்டும் மக்கள் இருக்கிறார்களே… எனவே அரசு அந்த 3 ஓட்டுநர்களுக்கும் மாத ஊதியம் வழங்குகிறது. ஜேப்பியாருக்கு சொந்தமான செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்கும் எனது உப பாதுகாவலரின் பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் அழைத்து வருவதும் இந்த ஓட்டுநர்களில் ஒருவரது பணி.

எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கக் கூடியவர்கள் யாரும் பணியிலும் இல்லை. ஊழியர்கள் அனைவருமே ஒன்று விஜயனின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்லது ஊர்க்காரர்கள்.

எனவே விஜயன் கொட்டமடிக்கிறார். அது எந்த அளவுக்கு என்றால், மாணவர்களின் எதிர்காலத்தையே கால்பந்தாக விளையாடும் அளவுக்கு…

குறை பிரசவமாக இருந்தாலும் நானும் அரசு பல்கலைக்கழகம் தானே? எனவே என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம் என எனது பெற்றோரான இந்திய அரசாங்கம், நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 350! ஆமாம், கிட்டத்தட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மாணவர்களை விஜயன் சேர்த்திருக்கிறார்.

அப்படியானால் அதிகப்படியான மாணவர்களுக்கு எப்படி சான்றிதழ் வழங்க முடியும்..? என சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்காதீர்கள். 1991 – 96ல் பாசிச ஜெயலலிதாவின் காட்டாட்சியில் காளான் போல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் முளைத்ததே நினைவிருக்கிறதா? அவை எப்படி செயல்பட்டனவோ, அப்படித்தான் நான் இப்போது இயங்குகிறேன்.

அதாவது முதலில் 180 மாணவர்களுக்குத்தான் அவர்களது படிப்பு முடிந்ததும் சான்றிதழ் கிடைக்கும். மீதமுள்ள மாணவர்களுக்கு அடுத்த பேட்ச்சில் வழங்கப்படும். இப்படி ரிலே ரேஸில்தான் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறன. எனவே படிப்பு முடிந்தாலும் சான்றிதழ் கிடைக்கும் வரை மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும், வாய் திறக்கக் கூடாது. தங்கள் பெற்றோர்களிடம் கூட இது குறித்து பகிர்ந்துக் கொள்ளக் கூடாது…

இந்த இடத்தில், ”அஸ்கு புஸ்கு… பட்டப்படிப்பு என்றால், குறைந்தது 3 ஆண்டுகளாவது இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா? அப்படியிருக்க, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை எப்படி சேர்க்க முடியும்? விட்டால் எங்கள் காதைச் சுற்றி ஒரு பூந்தோட்டத்தையே அமைத்து விடுவாய் போலிருக்கிறதே…”

என்ற கேள்வி எழுந்தால் –

கேட்பவரை கட்டிப் பிடித்து முத்தம் தர தயாராக இருக்கிறேன். சரியான வினாவை எழுப்பியவரை வேறு எப்படி பாராட்ட?

ஆனால் –

எப்படிச் சொல்வது… என்னவென்று புரிய வைப்பது? பட்டப் படிப்பு என்று எதுவும் என்னிடம் இல்லையே… 2 ஆண்டுகள் அல்லது ஒரு வருட சான்றிதழ் கோர்ஸ்தானே நடத்தப்படுகின்றன..?

ஆமாம் ஐயா ஆமாம்… மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகமாகிய நான், ஒரு ஏசி மெக்கானிக், டிவி மெக்கானிக் இன்ஸ்டிடியூட் போலத்தான் இயங்குகிறேன். அப்படி நடக்கும்படிதான் அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் பட்டப்படிப்பு? அதற்குத்தான் சாய்ராம், வேல்ஸ்… முதலிய கல்லூரிகள் இருக்கின்றதே… அவர்களுக்கு போட்டியாக பட்டப்படிப்பை நானும் நடத்தினால், அந்தக் கல்லூரிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்? அந்தக் கல்லூரி தாளாளர்களால் எப்படி பிழைக்க முடியும்?

இந்த விஷயம் பெற்றோர்களுக்கும் தெரியும். படிக்கும் மாணவர்களும் அறிவார்கள். ஆனாலும் மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் நேரடியாக படிப்பதென்றால் – அது 2 ஆண்டுகளோ அல்லது ஓராண்டோ – ஒரு ‘இது’தானே? அதுவும் மற்ற மாணவர்களுடன் தொடர்பற்ற, சமூகத்துடன் துண்டித்த அபூர்வமான படிப்பு என்னும்போது இதுமாதிரியான ‘சில்லரை’ விஷயங்களை கவனத்தில் கொள்ள முடியுமா?

இந்த மனநிலையைத்தான் எனது உப பாதுகாவலரான விஜயன் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் வழங்கும் கோர்சுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 3 இலட்சம். இதில், ஒரு இலட்சம் விடுதிக் கட்டணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், உடனடியாக கப்பலில் வேலை, கைநிறைய சம்பளம்… என நடுத்தர வர்க்கத்தினர் கனவில் மிதப்பதால், சாதாரண டிப்ளமோ கோர்சுக்கு இவ்வளவு பெரிய தொகையா… அதுவும் அரசு பல்கலைக்கழகத்திலா என்று யோசித்து மூளைக்கு வேலை தராமல் இருக்கின்றனர். இந்த மயக்கம்தான் எனது உப பாதுகாவலர், அரசுக்கு செலுத்தும் மாணவர் கட்டணம் வேறு… மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணம் வேறு… என்பதை அறிந்துக் கொள்ளாமலேயே இருக்கச் செய்கிறது.

உண்மை தெரிந்ததும் வயிறு எரிகிறதல்லவா..? இன்னும் விஷயங்கள் இருக்கின்றன. தலா 2 இலட்சம் ரூபாயை பயிற்சி வகுப்புக்காக எனது உப பாதுகாவலர் வசூலிக்கிறார் என்று முன்பே சொன்னேன். ஆனால், அதற்குறிய உள்கட்டமைப்பு வளாகத்தில் இல்லவே இல்லை. சுனாமிக்கு பிறகு, சில விதிமுறைகளை அரசாகிய எனது பெற்றோர் வகுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விதிமுறைகள் அனைத்தும் எனது விஷயத்தில் மீறப்பட்டுள்ளன.

விடுதிக் கட்டணமாக ரூபாய் ஒரு இலட்சம் வசூலிக்கப்படுவதும் இதில் சேர்த்தி. அந்தப் பணம், எங்கு செல்கிறது என்பது அந்த பாலுவுக்கே வெளிச்சம். சினிமாவுக்காக செட்டிங்ஸ் போடுவார்கள் இல்லையா? அதுபோல்தான் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் மரத் தடுப்புகள்தான். ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்தான் கூரைகள். முன்பு லைலா புயல் வீசியபோது, கூரைகள் எங்கோ பறந்துவிட்டன. அலட்டிக் கொள்ளாமல் பறந்த கூரையை பொறிக்கி வந்து மீண்டும் பொருத்தினார்கள். முகாம்களில் அகதிகள் எப்படி அடைபட்டுக் கிடப்பார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்பினால், என்னைப் பார்க்க வாருங்கள். மாணவர்களை, விடுதிகளில் அப்படித்தான் எனது உப பாதுகாவலர் அடைத்து வைத்திருக்கிறார்.

நான்கு பேர் தங்கக் கூடிய அறையில் 10 பேரும், 2 பேர் தங்கக் கூடிய அறையில் 5 பேரும் தங்குகிறார்கள். உணவை வாயில் வைக்க முடியாது. தண்ணீரை ஒரு சொட்டுக் கூட குடிக்க முடியாது. தாகம் எடுத்தால், கோக்/பெப்சி எடு… கொண்டாடு…

இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அங்கு மாணவர்கள் வசிக்கிறார்கள்; படிக்கிறார்கள். காரணம், கப்பல் வேலை… கை நிறைய சம்பளம் என்ற கனவு.

இதையெல்லாம் மீறி, யாரோ எனது உப பாதுகாவலர் குறித்து புகார் அளித்துவிட்டார். கடமையை சரிவர செய்யும் சிபிஐ அதிகாரிகளும் டக் டக் என பூட்ஸ் ஒலிக்க, டையை தளர்த்தியபடி வந்து சேர்ந்தார்கள். இண்டு, இடுக்கு விடாமல் விஜயனின் இருப்பிடத்தை ஆராய்ந்தார்கள். இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு காட்டாத சொத்துக்களை கண்டுபிடித்தார்கள்.

அப்புறம்?

விழுப்புரம்தான். வேறென்ன? இந்த வழக்கு, அதுபாட்டுக்கு ‘பெண்டிங்கில்’ இருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எனது உப பாதுகாவலரை சஸ்பென்ஷனில் வைத்திருக்க வேண்டும். ஆனால், மனிதர் இன்னும் வைஸ் சான்சிலர் ஆக நீடிக்கிறார். சட்டமும் தன் கடமையை செய்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மோப்பம் பிடித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், விஜயனை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கிறார். வைஸ் சான்சிலராக இருக்கவே தகுதியில்லாத ஒரு நபர், அதுவும் சிபிஐ குற்றம்சாட்டியிருக்கும் ஆள், எப்படி விசி ஆக நீடிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

இதற்குள் எனது உப பாதுகாவலரின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதை நீட்டிக்கச் சொல்லி விஜயன் வைத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசாகிய எனது பெற்றோர், வேறொருவரை எனது உப பாதுகாவலராக நியமித்திருக்கிறார்கள். அதற்காக ஏதோ ’நீதி’ கிடைத்து விட்டதாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். எனது மாஜி உப பாதுகாவலரான விஜயனை, சென்னை கேம்பசின் இயக்குநராக புதிய பொறுப்பில் அமர வைத்திருக்கிறார்கள்! இதுதான் ’நீதி’யின் இலட்சணம்!!

சிம்கார்ட் ஒன்று போட்டால் சிக்னல் வேறொன்றா கிடைக்கும்? அதுபோல் இந்த சமூக அமைப்பில், என்னைப் போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களும் இப்படித்தான் பல்லிளிக்கும். தனியார் நிறுவனங்கள் கொழிக்க அரசுத்துறை நிறுவனங்கள் சவலப் பிள்ளைகளாகத்தான் மாற்றப்படுவார்கள்.

‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கழுதையின் படத்தை மாட்டினால் இலாபம் கிடைக்குமோ இல்லையோ, எனது படத்தை மாட்டி ‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்று  எழுதி வைத்தால்,

இலாபம் கிடைக்கிறதோ இல்லையோ மக்களாகிய நீங்கள் மத்திய அரசாலும், தனியார் கல்வி முதலாளிகளாலும் மொட்டையடிக்கப்படுவது புரியும்.

___________________________________________________________________

–       வினவு செய்தியாளர்

தகவல் உதவி: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), சென்னை.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்: