
முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்று அச்சத்தை ஏற்படுத்தி , அந்த அணையை உடைத்து புதிய அணையைக்கட்டுவதன் மூலம் தமிழகம் தண்ணீர் பெற வேண்டிய பாரம்பரிய உரிமையை அழிக்க நினைக்கின்றன கேரள காங்கிரசு, பிஜேபி, சிபிஎம், சிபிஐ கும்பல். கேரளாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்காக இக்கட்சிகள் முல்லைப்பெரியார் அணை உடைந்துவிடும் என்றும் அதனால் 30 லட்சம் கேரள மக்கள் இறந்துபோவார்கள் என்ற கட்டுக்கதையை திட்டமிட்டு பரப்பி வருகின்றன. அணையை உடனே உடை என்றும் நாங்களே மக்களிடம் பணம் பெற்று அணையைக்கட்டுவோம் என்று சீபிஎம் இன் அச்சுதானந்தனும், அதற்கு ஒருபடி மேலே சென்று பேபி அணையை இடிக்க கடப்பாரையோடு களத்தில் நிற்கும் கேரள பிஜேபியும் காங்கிரசும் தமிழர்களின் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றன.
“தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க சபரி மலை நோக்கி வந்தோமுங்க” என்று சென்ற அய்யப்ப சாமிகள் அய்யப்பனின் வாரிசுகளிடம் ஆசிபெற்று அய்யோ அப்பா என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும், பெரியாறு அணைக்கு தண்ணீர் தரமறுப்பதை பற்றியும் வாயை திறப்பதில்லை மத்திய அரசு. பாகிஸ்தான் தீவிரவாதம், சீன ஊடுருவல் முக்கியமாயிருக்கும் பட்சத்தில் தமிழனின் உயிர் பெரியதா என்ன? தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகளோ தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. தங்கள் தலைமை கேரளாவிற்கு ஆதரவாக நடப்பதை கண்டிக்காத இவர்கள் தமிழகத்தில் ஓட்டு பொறுக்குவதற்காக நாடகமாடிக்கொண்டு இருக்கின்றனர். மற்ற தமிழின அமைப்புக்களோ தமிழக மக்களின் உரிமையை மறுக்கும் தேசியக்கட்சிகளை எதிர்க்காமல் சாதாரண கேரள தொழிலாளியை எதிரியாக காட்டிக்கொண்டு இருக்கின்றன. அதன் விளைவாக தமிழகத்தில் சில இடங்களில் கேரள மாநிலத்தவர்களின் கடைகள் நொறுக்கப்பட்டு உள்ளன.
காங், பிஜேபி, சிபிஎம் சிபிஐ ஆகிய தேசியக்கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் விதமாகவும், தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கேரள உழைக்கும் மக்கள் தமிழர்களுக்கு எதிரி அல்ல மாறாக தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள காங் பிஜேபி சிபிஐ சிபிஎம் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்பதை பறை சாற்றும் விதமாகவும் மக்கள் கலை இலக்கியக்கழகம் , புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடை பெற்றது.
அதன் ஒரு பகுதியாக சென்னை பனகல் மாளிகை அருகில் மக்கள் கலை இலக்கியக்கழகம் , புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முறியடிப்போம் ! முறியடிப்போம் !
முல்லைப்பெரியாறு அணையை இடித்து
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் அராஜகத்தை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !
பெரியார் அணையின் நீரை உயர்த்த
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சொல்லுது!
பெரியார் அணை பலம் இல்லையென்று
கேரள அரசு புழுகித்தள்ளுது !
தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டால்
ஏய்க்குது கேரள கவர்மெண்ட்டு
எதற்கெடுத்தாலும் கண்டெம்ட்டு !
எங்கே போச்சு சுப்ரீம் கோர்ட்டு !
என்ற முழக்கங்களோடு தொடங்கியது ஆர்ப்பாட்டம். முல்லைப்பெரியாறு அணையை இடிக்கத்துடிக்கும் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பிஜேபி கும்பல் ஒருபுறமும் மறுபுறம் காங் ஞானதேசிகன், பிஜேபி ராதாகிருஷ்ணன், சீபீஎம் ராமகிருஷ்ணன் தமிழக ஓட்டுப்பொறுக்கிகள் வரிசையாக நின்று ஒரு தமிழக விவசாயியை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். சென்னை புமாஇமுவின் இந்த காட்சி விளக்கம் அனைவரையும் ஈர்த்தது. உளவுத்துறை போலீசு கூட காட்சி விளக்கத்தைப்பாத்தவுடன் அருகில் ஓடிச்சென்று தங்களுக்குக்குள் சிரித்தபடியே பேசிக்கொண்டார்கள்” இவங்க தாம்ப்பா திருச்சியில ஜெயலலிதாவை செருப்பால அடிச்சவங்க”
சாலையில் சென்ற பேருந்துகளில் இருந்த பயணிகளும் ஆவலுடன் எட்டிப்பார்த்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்தை புரிந்து கொண்டார்கள். சாலையில் எந்தப்பக்கம் ஆர்ப்பாட்டம் என்று தெரியாத அளவிற்கு ஒரு புறம் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் என்றால் மறுபுறம் ஆட்டோ தொழிலாளர்கள், பொது மக்கள் என குவிந்து இருந்தனர். அந்த சாலையில் சென்ற மக்கள் அனைவருமே நின்று காட்சி விளக்கத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கவனித்தனர். “அது யார் ” என்று ஒருவர் கேள்வி கேட்டால் அருகில் இருந்த மற்றவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை உரை ஆற்றிய ம க இ க வின் சென்னைக்கிளைச்செயலாளர் தோழர்.வெங்கடேசன் “தமிழகத்தில் உள்ள தேசியக்கட்சிகள் தங்கள் தலைமையை எதிர்க்காமல் நடிக்கின்றன, போலிகம்யூனிஸ்டுகளான சிபிஎம் சிபிஐ போன்றவை சமாதானமாக தமிழகத்தை போகச்சொல்கின்றன.” என்று தேசியக்கட்சிகளை தோலுரித்தார்.
தொடருது பார் ! தொடருது பார் !
காவிரி, பாலாறு, முல்லைப்பெரியார்
தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும்
துரோகம் இன்னும் தொடருது பார் !
எதிரியல்ல ! எதிரியல்ல !
கேரள நாட்டு உழைக்கும் மக்கள்
தமிழர்களுக்கு எதிரி அல்ல
அப்பாவி டீக்கடைத் தொழிலாளி
தள்ளுவண்டி வியாபாரி
தமிழர்களுக்கு எதிரியல்ல
முல்லைப்பெரியார் தண்ணீர் கிடைக்க
இனவெறிச்சண்டை தீர்வு இல்லை !
இனவெறியைத் தூண்டி விட்டு
குளிர்காயும் தேசியக் கட்சிகளை
அடையாளம் காண்போம் ! அடித்து விரட்டுவோம் !
ரெட்டை வேடம் போடுகின்ற
சிபிஎம் , பிஜேபி, காங்கிரஸ் கும்பலை
சிறைபிடிப்போம் ! முகத்திரை கிழிப்போம் !
மீண்டும் முழங்கிய முழக்கங்களுக்குப்பின் புஜதொமுவின் மாநிலத்தலைவர் தோழர்.முகுந்தன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் “தமிழகம் முழுவதும் பற்றிப்படரும் முல்லைப்பெரியாறு அணைக்கான போராட்டங்களையும், அந்த அணையில் தமிழகத்திற்கு உள்ள நியாயமான பாரம்பரிய உரிமையை ஒழிக்கவே பீதியைக்கிளப்பி புதிய அணையைக்கட்ட கேரள அரசு துடிப்பதையும், கேரளாவில் உள்ள காங் சிபிஎம் பிஜேபி ஆகியக்கட்சிகள் ஓட்டு பொறுக்குவதற்காக தமிழர்களின் மீதான வன்மத்தை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதையும்” குறிப்பிட்டார்.
மேலும் “பல வல்லுனர் குழுக்கள் பெரியார் அணையை ஆராய்ந்து அது உறுதியாக இருப்பதையும் பலமில்லை என்ற வாதத்திற்கு வலு சேர்க்க வந்ததுதான் டேம் 999. தமிழகத்தின் தென்மாவட்டங்களின் உயிர் ஆதாரமான முல்லைப்பெரியார் நீரைப்பெறுவதற்கு கேரள உழைக்கும் மக்களின் கொளுத்துவதோ சிதைப்பதோ தீர்வு அல்ல. கேரளாவில் இனவெறியைத்தூண்டிவிட்டு அதில் குளிர் காயும் காங்கிரஸ் பீஜேபி, சிபிஎம் கட்சிகளின் தலைமைகள் தான் தகர்க்கப்படவேண்டியவை” உரையாற்றினார்.
நேற்று தமிழகத்தில் திமுக உண்ணாவிரதம், பாமக ஆர்ப்பாட்டம், பிஜேபி ஆர்ப்பாட்டம் என்று களைகட்டிய ஓட்டுக்கட்சிகளின் நாடகங்களுக்கு நடுவே முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை பறை சாற்றும் விதமாகவும், முல்லைப்பெரியாறின் உரிமையை நிலை நாட்ட தமிழகமக்கள் அணிதிரண்டு காங்,பிஜேபி,சிபிஎம் கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தையும் இந்த ஆர்ப்பாட்டம் உணர்த்துவதாக இருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு மணி நேரம் முன்னிருந்தே இசைக்கப்பட்டு கொண்டிருந்தன ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்கள். அருகில் இருந்த பாடல்களோடு சேர்ந்து ஆட்டோ தொழிலாளி ஒருவர் முணுமுணுத்துக்கொண்டிருந்தர்.”எப்படிங்க இந்தப்பாட்டு தெரியும்? என்றதற்கு அடிக்கடி இங்க இவங்க மீட்டிங் போடுவாங்க இந்தப் பாட்டு எனக்கு புடிக்கும், அதனால எனக்கு பதிஞ்சு போச்சுப்பா”
இந்த ஆர்ப்பாட்டத்தை கடந்து சென்ற இரு மாணவிகள் “ஏய் என்ன இது? “ஏதோ கட்சிகாரங்களா இருக்கும்., இல்லப்பா RSYFன்னு போட்டு இருக்கு பார், அவன் தண்ணி தரமாட்டேங்குறான் இவன் பிஜெபிகாரன் இவன் காங் காரன் இவன் யாருப்ப்பா தெரியலையே ஏதோ செவப்பு துண்டு போட்டுருக்கான் , கையில வெள்ளக்கொடியவேற வச்சிருக்கான் என்ன கட்சின்னு தெரியலையே ” என்றபடியே சிறிது நேரம் காட்சி விளக்கத்தை கவனித்து விட்டு சென்றார்கள். ஒருவேளை ஆர்ப்பாட்டம் அவர்கள் முடியும் வரை இருந்திருந்தால் செவப்பு துண்டு, வெள்ளைக்கொடிகாரன்’ யார் என்றும் நம்முடைய எதிரியார் என்றும் கண்டிப்பாய் மனதில் பதிந்து இருக்கும் அந்த ஆட்டோ தொழிலாளிக்கு புரட்சிகர பாடல் பதிந்ததைப்போல.
மாணவர்கள் இளைஞர்கள், தொழிலாளார்கள், தமிழார்வலர்கள்,பெண்கள் மற்றும் உழைக்கும் மக்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் யார் எதிரி என்பதை ஆழமாக பதிய வைத்தது என்றால் அது மிகை அல்ல.
-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்
Filed under: ஆர்ப்பாட்டம், முல்லைப் பெரியாறு | Tagged: அச்சுதானந்தன், அரசியல், உச்சநீதிமன்றம், உம்மன் சாண்டி, கண்டன ஆர்ப்பாட்டம், காங்கிரசு, கேரள அரசு, சி.பி.எம்., தமிழக கேரள எல்லையில் பதட்டம், தமிழினவாதிகள், நிகழ்வுகள், பா.ஜ.க, பாரதிய ஜனதா, பு.ஜா.தொ.மு, பெ.வி.மு, பேபி அணை, போலிக் கம்யூனிஸ்டுகள், ம.க.இ.க, மத்திய அரசு, மார்க்சிஸ்டுகள், முல்லைப் பெரியாறு, முல்லைப் பெரியாறு அணை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை | Leave a comment »