• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஒளிக்குறுந்தகடு வெளியீடு: டிபிஐ முற்றுகைப் போராட்டம் – காட்சிப் பதிவுகள்!

ஜீன் 28 -2012 அன்று அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட தோழர்கள், மாணவர்கள் மீது ஜெயா அரசின் போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதில் 77 பேரை சிறையில் அடைத்தது. அந்த முற்றுகைப் போராட்டம், தனியார் பள்ளிக் கொள்ளைக்கு எதிராக  ஒரு அதிர்வலையினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தின் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக கொண்டு வந்துள்ளோம். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிரான பெற்றோர்களை, உழைக்கும் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக இக்குறுந்தகடு பயன்படும் என நம்புகிறோம். தோழர்கள், வாசகர்கள் இதனை வாங்கி மக்களிடம் பரப்ப வேண்டும் என கோருகிறோம்.

வெளியீடு:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை

விலை ரூ 30

குறுந்தகடு கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

தொடர்புடைய பதிவுகள்:

இது விபத்தல்ல – லாப வெறிக்காக ஜேப்பியார் செய்த படுகொலை !

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-3

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.

______________________________________

போராடினால்தான் உரிமைகள் நமக்கு கிடைக்கும், மனு போட்டால் கிடைக்காது’ என்று உணர்த்தியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டம். ஆனால் போராடினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தினர் காவல் துறையும் அதிகார வர்க்கமும்.

அப்படி என்ன கேட்டு விட்டோம்? ‘காசு வாங்காம ஆனா ஆவன்னா, ஏபிசிடி சொல்லித் தரக் கேட்டோம்’ அவ்வளவுதான்.  பெரிய பெரிய அரசியல் சட்ட அறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இருக்கும் நாட்டில்தான் உரிமைகளை கேட்டாலே அடி உதை, சிறை என்று நடக்கிறது. தமது உரிமைகளை அடைந்தே தீருவது என்று யாராவது போராடினால், அவர்களுக்கு அடி, உதை, சிறைவாசம்.

தனியார் மயத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் அனைவருக்கும் எப்படி போராட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக புமாஇமுவின் போராட்டம் திகழ்கிறது. போராடும் மக்கள் எல்லாம் ‘புமாஇமு போல போராட வேண்டும்’ என்று சொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டு 200 பேர் போய் டிபிஐயை முற்றுகை இட்டீர்கள். அடுத்தபடியாக 2000 பேர் சட்டசபையை முற்றுகை இட்டால் என்ன செய்வார்கள்? அப்படி ஒரு வீரமிக்க போராட்டம் நடக்கும் போது உங்களுக்கு துணையாக மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் ஆடு மாடு ஓட்டிக் கொண்டு வருவார்கள்.

இப்போது, தனியார் கல்வி முதலாளிகளின் நலனுக்காக பல துறைகளும் வளைந்து கொடுக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளில் ஆட்சேர்ப்பை அதிகரிக்க இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தாரளமாக மதிப்பெண் போடச் சொல்லியிருந்தார்களாம். ஏ சி சண்முகம், உடையார், ஜேபிஆர், போன்ற கொள்ளையர்கள் கல்வித் துறையில் தனிக்காட்டு ராஜாக்களாக செயல்படுகிறார்கள். நன்கொடை 5 லட்ச ரூபாய் என்று சொன்னதும், போய் சொத்துக்களை வித்து, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்தால், பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை கொடுக்கிறார்கள்.

அப்படி தனியார் முதலாளிக்கு கொண்டு கொடுக்க ப சிதம்பரம் வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது கடன் இல்லை, தனியார் கல்வி முதலாளிக்கு கொடுக்கும் மானியம். ஆனால், படித்து முடித்த பிறகு கடன் கட்டவில்லை என்றால் வாங்கிய மாணவனைத்தான் பிடிப்பான்.

எல்லோர்க்கும் ஒரே பாடத் திட்டம் என்றால் ஏன் இன்னமும் மெட்ரிக் என்று பெயர் வைத்திருப்பதை ஏன் தடை செய்யவில்லை? அப்படி சிறப்பான பெயர் வைத்திருந்தால்தான் மக்களிடம் சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் பணம் பிடுங்க முடியும். சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நட்டம் வந்து விடுமே என்று யோசிக்கிறார்கள்.

1950 அரசியல் அமைப்புச் சட்டம் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதாவது 8வது வரை கல்வி. அதற்குப் பிறகு, +2 வரை, கல்லூரி படிப்புக்கு உத்தரவாதம் வழங்கவில்லை. 2002-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தில் 6 வயதுக்கு மேல் 14 வயதுக்குள் கல்வி உத்தரவாதம் என்கிறார்கள். 6 வயதுக்கு முந்தைய கல்விக்கு யார் பொறுப்பு?

இருக்கிற சட்டங்களையும் தனியார் கல்வி முதலாளிகள் மதிப்பதில்லை. ‘தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று சொன்னீங்களே, வாங்கித் தா’ என்று காங்கிரஸ்காரர்களை என்று உலுப்ப வேண்டும். ‘உங்க அம்மா ஆட்சியிலதானே சிங்கார வேலர் கமிட்டி அறிக்கை வந்தது, அதை நடைமுறைப் படுத்து’ என்று அதிமுக காரர்களை இழுக்க வேண்டும்.

எல்கேஜி வகுப்புக்கு 25,000 கட்டணம் என்கிறார்கள். அதில் நீச்சல், குதிரையேற்றம் கற்றுக் கொடுப்பேன் என்கிறார்கள். ‘கட்டணத்தை ஒரே தவணையில் கட்டினால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் இலவசம்’ என்கிறார்கள். ‘கல்வியோடு செல்வமும் தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.  வீட்டுமனை போல பள்ளிக்கு விளம்பரம் செய்கிறார்கள். பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் போது நான்கு தூண்கள்தான் இருக்கின்றன, வேறு எந்த வசதியும் இல்லை. மாணவர்களிடம் வசூல் பண்ணித்தான் கட்டிடம் கட்டப் போகிறார்கள்.

பெற்றோர்களும் தனியார் கல்வி என்ற மாயையில் சிக்கியிருக்கிறார்கள். கடனை உடனை வாங்கி நர்சரி பள்ளியில் பையனை சேர்த்ததும், அவனை செட்டில் செய்து விட்டதாக பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவன் வளர்ந்து பெரிய படிப்பு படித்து நிறைய சம்பாதிப்பதற்கான அடிப்படையாக அதை கருதுகிறார்கள்.

ஒரு தனியார் பள்ளியில் வகுப்பும் தங்கும் இடமும் ஒன்றாக இருந்தது. ஏமாளி பெற்றோர்களிடமிருந்து இல்லாத ஹாஸ்டலுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்கள் . பகலில் தங்குமிடத்தில் வகுப்பு நடக்கும், மாலையில் வகுப்பறை தங்குமிடமாகி விடும். அழுத்தம் தாங்காமல் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். பெற்றோர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

தலைமை கல்வி அதிகாரி ‘தங்கும் விடுதி தொடர்பாக உத்தரவு போட தனக்கு அதிகாரம் இல்லை’ என்றார். பள்ளியைப் பற்றி உத்தரவு போடத்தான் அதிகாரம், தங்குமிடத்தைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. கடைசியில் போராடும் பெற்றோர்களை சமாதானப்படுத்த ’5.30க்கு மேல் மாணவர்கள் யாரும் பள்ளியில் யாரும் தங்கக் கூடாது’ என்று சொல்ல தமக்கு அதிகாரம் இருப்பதாக அப்படி உத்தரவு போட்டார். இப்போது மாணவர்களை  ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

சிதம்பரம் காமராசர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தான் சொல்வதுதான் சட்டம் என்கிறார். கூடுதல் கட்டணம் கட்டாத மாணவர்களை அரியர் மாணவர்கள் என்று தனியாக உட்கார வைத்தார்கள். அதை எதிர்த்து ஐஎம்எஸ், டிஎம்எஸ், டிஈஓ, சிஈஓ என்று எல்லாருக்கும் மனு போட்டோம். கடைசியில் கேட்டை மூடி உள்ளிருப்பு போராட்டம் ஆரம்பித்தோம்.

நாங்கள் வெளியில் உட்கார்ந்திருக்க மாவட்ட காவல் அதிகாரி ஒரு ஐபிஎஸ் அதிகாரி அந்த பள்ளிக் கூட தாளாளருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நள்ளிரவு வரை பேசுகிறார். ‘சட்டத்தை மீறிய தாளாளரை கைது செய்ய வேண்டியதுதானே’ என்று கேட்டால், ‘அடுத்த நாள் பிரித்து உட்கார வைப்பதில்லை என்று உறுதி சொல்லியிருக்கிறார். அதை செய்யா விட்டால் கைது செய்வோம்’ என்றார். அதன் பிறகுதான் பள்ளி நிர்வாகம் பணிந்தது.

தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவு போட முடியவில்லை, பள்ளிக் கல்வி இயக்குனராலேயே முடியவில்லை. பெற்றோர் சங்கத்தை இன்னும் வலுவாக்கி போராடச் சொல்கிறார்கள். ‘போய் கலெக்டரை பாருங்க அவருக்குத்தான் எல்லா அதிகாரமும்’ என்றார்கள். கலெக்டரை பார்க்கப் போனால் மாலை வரை காத்திருக்க வைத்து பேசினார். ‘பள்ளிக் கூடத்து ஆள் ஒருத்தன் இருந்தான் அவன் போன பிறகு பேசலாம் என்றுதான் மாலை வரை காத்திருக்க வைத்தேன்’ என்கிறார். அவனைக் கண்டு இவருக்கு அவ்வளவு பயம். ‘நீங்க போங்க நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்’ என்றார். அப்புறம் தொலைபேசி கேட்டால், நீங்க அதிகாரிகளை harass செய்றீங்க என்கிறான்.

ஒவ்வொரு தடவையும் போராட்டம் நடத்துறீங்க என்று அலுத்துக் கொள்கிறார்கள். எல்லா ஊரிலும் இது சாத்தியமா? டவுட்டனில் கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்தவங்களுக்கு டிசி கொடுத்தான். அப்படி கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பள்ளி இறுதித் தேர்வுகளில் டாப் 10ல், 50ல், இடம் பிடிக்க 100-150 பேருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள். மீதி 900 பேர் பாஸானால் போதும். அகர வரிசையை புறக்கணித்து அந்த 150 பேரையும் ஒரே ஹாலில் உட்கார வைக்கிறார்கள். திருவண்ணாமலை செயின்ட் பால் பள்ளியில் பிட்டு கொடுத்து மாட்டியது போல பல பள்ளிகளில் நடக்கிறது.

ரிசல்ட் வந்த அன்று விளம்பரம், பெப்சி கோக் போல படம் போட்டு பிராண்ட் அம்பாசடர்களாக மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். உழைக்கும் மக்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் வாங்கியதை எழுதி மேல் படிப்புக்கு நிதி உதவி செய்யும் படி பத்திரிகைகளில் கேட்கிறார்கள்.

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நாமக்கல் பள்ளிகள் பற்றிய விவாதம். அதில் ஒரு மாணவன் ‘நாங்கள் எந்திரங்களாக மாறி விட்டோம், ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதில்லை, அருகில் இருக்கும் இருபாலர் பள்ளி மாணவிகளைப் பார்த்து பேசக் கூட நினைத்ததில்லை’ என்கிறான் அதற்கு ஒரு எதிர் தரப்பிலிருந்து ஒருவர் ‘தம்பி நீ இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டுட்டா சீட் வாங்க தனியார் பொறியியல் கல்லூரிக்கு 20 லட்சம் கொடுக்க தேவையில்லாமல் அரசு கோட்டாவில் கிடைத்து விடும்’ என்கிறார்.  20 லட்சம் மிச்சப்படுத்த இங்கே 2 லட்சம் கொடுத்து விடுகிறார்கள். நடுவில் ஒரு மனிதப் பிறவி இருக்கிறது என்பதை யோசிப்பதே இல்லை.

என்ன நோக்கம், அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதுதான். +2 படிப்பவன் காலை முதல் மாலை வரை எழுதி எழுதி படிக்க வேண்டும் என்கிறார்கள். வாத்தியாரும் மனப்பாடம் செய்து பாடம் நடத்துகிறாராம். ஒரு ஆசிரியர் கணக்கு வகுப்பில் கணக்கை கடைசி வரை எழுதிப் போட்டு விட்டார், விடையும் வந்து விட்டது, ஆனால் நடுவில் இரண்டு ஸ்டெப் காணவில்லை.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலி வேலை செய்வதற்காக தயாரித்து விடுவதுதான் இன்றைய கல்வியாக இருக்கிறது. கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றுவதை தடுக்க வேண்டும். ஒரு மனிதனின் ஆளுமையை செதுக்குவது கல்வி.

தனியார் கல்வியால் அந்த நோக்கம் நிறைவேறப் போவதில்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் போட்டால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை போகிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள். கடைசியில் நீதிமன்றம் தீர்மானித்தது ‘தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டா இல்லையா’ என்பதை மட்டும்தான். யார் பெரியவன் என்பதைப் பற்றிதான். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைப் பற்றி நீதிமன்றம் எதுவும் பேசவில்லை.

காமராசர் காலத்தில் கல்விக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டது, அது இப்போது 14% ஆக குறைந்திருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப் படாத அரசையும், அரசியல் தலைவர்களையும் என்ன செய்வது? ஒரே உத்தரவில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுக்கச் ஏற்பாடு செய்கிறார்கள், கல்வி உரிமைக்கு 1950 முதல் இன்று வரை எதுவும் செய்யவில்லை. அப்படி செய்யாமல் தள்ளிப் போடுவது கிரிமினல் குற்றம்.

தனியார் மயத்தை அனைத்து துறைகளிலும் ஒழிக்க கல்வி தனியார் மய ஒழிப்பு முன்னோடியாக இருக்க வேண்டும்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்

முதல் பதிவு : வினவு

தொடர்புடைய பதிவுகள்:

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

சென்னை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

தனியார் பள்ளி கல்வி கொள்ளைக்கு எதிராக PUSER அமைப்புக் கூட்டம் – பத்திரிக்கை செய்தி!

 

தொடர்புடைய பதிவுகள்:

PUSER அமைப்புக் கூட்டம்-தனியார் பள்ளி கல்வி கொள்ளைக்கு எதிராக போராடுவோம் வாரீர்!

சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!

 கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

 

PUSER அமைப்புக் கூட்டம்-தனியார் பள்ளி கல்வி கொள்ளைக்கு எதிராக போராடுவோம் வாரீர்!

தொடர்புடைய பதிவுகள்:

சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!

 கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கல்வி என்பது முதலாளிகளின் லாபத்திற்கான ஒரு வியாபார பண்டமாக மாற்றி வரும் அரசின் கல்வி தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!   இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ..

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில் 2.8.12 அன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

தமிழகம் முழுவதும் புமாஇமு-வின் கல்வி தனியார்மய ஒழிப்பு தொடர் பிரச்சார இயக்கம்!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கு! தாம்பரத்தில் 2.8.12 அன்று மாலை தெருமுனைக்கூட்டம்!

புமாஇமு-வின் அறைகூவலாக ‘கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு’த் தீர்மானங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-2

கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பேரா லஷ்மி நாராயணன் பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளியின் தேவைஎன்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து சில குறிப்புகள்.

பேராசிரியர் லஷ்மி நாராயணன் அகில இந்திய கல்வி உரிமை அமைப்பின் கல்வி பாதுகாப்புக் குழுவின் ஆந்திர மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.  2010ம் ஆண்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அந்த நாளை கறுப்பு நாள் என்று பிரகடனம் செய்து அதை எதிர்த்து போராடிய முன்னோடிகளில் ஒருவர்.

___________________________________________

புரட்சிகர மாணவர்-இளைஞர் மாணவர் முன்னணி நடத்தும் கல்வியில் தனியார் மயமாக்க எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்பது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்.

இந்த மாநாட்டு நடக்கும் சென்னைக்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு. 1950களில் ஈவேரா பெரியார் அவர்கள் அரசு பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்து வீரமிக்க போராட்டம் நடத்திய மண் இது. அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி நிதி பற்றாக்குறையின் காரணமாக அரசு பள்ளிகளை மூடுவதாக அறிவித்தார். ‘மாணவர்கள் அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும், அரை நாள் வேலைக்கு போகட்டும், தம் பெற்றோரின் சாதித் தொழிலை செய்யட்டும்’ என்று சொன்னார். குலக்கல்வி என்று அழைக்கப்படும் அந்த பிற்போக்குக் கொள்கையை எதிர்த்து பெரியார் அன்றைய சட்டசபைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்படி அரசு பள்ளிக்காக அன்றே போராடிய மண்ணிது.

இப்போது மத்திய அரசும், மாநில அரசும், கல்விக்கும், மருத்துவத்துக்கும், குடிநீர் வழங்குவதற்கும் பணம் இல்லை என்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்குவதில் நடந்த ஊழலில் கல்மாடி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார். ஆந்திராவில் ராஜசேகரரெட்டியும் சந்திர பாபு நாயுடுவும் மாற்றி மாற்றி கொள்ளை அடித்தார்கள். ‘ராஜசேகர ரெட்டி எப்படி 1 லட்சம் கோடி சம்பாதித்தார்?’ என்று சந்திரபாபு நாயுடு கேட்கிறார். ‘ஏன் சம்பாதித்தாய்?’ என்று கேட்கவில்லை, ‘எப்படி சம்பாதித்தாய்?’ என்றுதான் கேட்கிறார். அந்த விபரங்கள் தெரிந்தால் தானும் வாய்ப்பு கிடைக்கும் போது அதே போல சம்பாதிக்க வசதியாக இருக்கும் என்றுதான் அப்படி கேட்கிறார்.

ஆ ராசா முதலியவர்கள் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தினார்கள். அந்தப் பணத்தை கல்வித் துறையில் செலவிட்டிருந்தால், நாட்டில் படிப்பறிவின்மையை இல்லாமல் ஒழித்திருக்க முடியும்.

அரசாங்கம் என்பது அதிகார வர்க்கத்துக்கான கருவியாக செயல்படுவதுதான். அவர்கள் பொதுமக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. இந்து பரம்பரையில் மனுவாதி தர்மத்தின் கீழ் சாதியின் பெயரால் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் வந்த பிறகு அவர்கள் நினைத்திருந்தால் வெகு விரைவில் நாட்டில் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படி ‘மக்கள் அனைவரும் கல்வி பெற்று விட்டால், தங்களது ஆட்சி 20 ஆண்டுகள் கூட நீடிக்க முடியாது, மக்களால் தூக்கி எறியப்பட்டிருப்போம்’ என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அதே உள்நோக்கத்துடன்தான் 1947க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் அரசு நடத்திய காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம், சிபிஐ பிரதிநிதித்துவப்படுத்திய அதிகார வர்க்கமும் செயல்படுகின்றன. சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்குப் பிறகு 66% மக்கள் மட்டுமே கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். ஏழைகளில் 5% பேர்தான் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். 95% ஏழை மாணவர்கள் போதுமான கல்வி அறிவு பெறாமலேயே இருந்து விடுகிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரமான கல்வி அளிப்பதை சாத்தியமாக்க பொதுப்பள்ளி முறை உருவாக்கப்பட வேண்டும். எல்லாக் குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு போக வேண்டும். பொதுப்பள்ளியை கொண்டு வர வேண்டுமானால் தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்.

1970கள் வரை அரசு பள்ளிகள்தான் செயல்பட்டன, கூடவே அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்தப்பட்டன. 1970களுக்குப் பிறகுதான் தனியார் மயம் ஆரம்பித்தது. 1971ல் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பால் எண்ணெய் விலை கடுமையாக ஏறி மேற்கத்திய முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியது. 400 முதலாளித்துவ வரலாற்றில் அது ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொன்றுக்கு தள்ளாடிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பொருளாதார அறிஞர் மில்டன் ்பிரீட்மேன், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் போன்றவர்கள் திட்டம் வகுத்து தனியார் மயத்தை பரவலாக அமல் படுத்தும் கொள்கைகளை செயல்படுத்தினார்கள். இந்த சீர்திருத்தங்கள் உலகின் பிற நாடுகளுக்கும் புகுத்தப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக கல்வியில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சாராய முதலைகள், மடம் நடத்தும் சாமியார்கள் எல்லாம் கல்வித் தந்தை ஆனார்கள். இப்போது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.

1990களில் தனியார் மயத்தை எதிர்த்து உலகமெங்கும் மக்கள் போராட ஆரம்பிக்க செயல் உத்தியை மாற்றி பொதுத்துறை-தனியார் துறை கூட்டமைப்பு என்று ஆரம்பித்தார்கள். அதன் உண்மையான பொருள் நட்டம் பொதுத் துறைக்கு, லாபம் தனியாருக்கு என்பதுதான். உதாரணமாக ஆந்திராவில் 700க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன, அவர்கள் அரசிடமிருந்து 4000 கோடி ரூபாய் மானியமாக பெறுகிறார்கள்.

பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்பது முழுக்க முழுக்க தனியார் மயத்தை கொண்டு வருவதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு மட்டுமின்றி உள்நாட்டு கட்டமைப்பு, குடிநீர், மருத்துவத் துறை என்று அனைத்து கொள்கை ஆவணங்களிலும் தனியார்-பொதுத் துறை கூட்டு முயற்சி என்பது இடம் பெறுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கொள்கையின் அடிப்படையில் தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர் இலவசமாக கொடுத்து, வரி கட்ட வேண்டியதில்லை என்று சலுகை கொடுக்கிறார்கள். அதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து வெளி வர முயற்சிக்கிறார்கள். அதே போன்றுதான் பொதுத்துறை-தனியார் துறை பங்களிப்பில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செலவில் நிலம் கொடுத்து, பணம் கொடுத்து தனியார் லாபம் சம்பாதிக்க வழி செய்யப் போகிறார்கள்.

நான் ஏன் பொதுப்பள்ளி மற்றும் அருகாமைப் பள்ளி வேண்டும் என்று சொல்கிறோம்? ஏனென்றால் அதுதான் சமத்துவத்தை உறுதிப் படுத்தி சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.

பொதுப்பள்ளி கோரிக்கையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

அ. கல்வியின் அளவு

– கல்வி பெறும் உரிமை சட்டம் கல்வியை கடைப்பொருளாக மாற்றுவதை அங்கீகரிக்கிறது.

– ஆறு வயதுக்கு முந்தைய இளம் பருவ கல்விக்கான பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கிறது.

பணக்காரர்களின் குழந்தைகள் இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் போது,  ஆறு வயதுக்கு மேல் பள்ளிக்கு வரும் உழைக்கும் மக்களின் குழந்தைகள் இடைவெளியை எப்படி சமன் செய்ய முடியும்?

– எட்டாம் வகுப்புக்குப் பிறகு கல்வி பெறும் உரிமையில் அரசுக்கு பொறுப்பு இல்லை.

ஆ. கல்வியின் தரம்

ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற உத்தரவாதத்தை கல்வி பெறும் உரிமை சட்டம் வழங்கவில்லை. ஆரம்பப் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் தர மாட்டார்கள். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் 90 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

மல்டிகிரேட் டீச்சிங் என்ற உலக வங்கி உருவாக்கிய உத்தியின் மூலம் ஒரே ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்துவது என்று திட்டமிடுகிறார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வுக் கூட வசதி வழங்குவதைப் பற்றிப் பேசவில்லை.

ஒரே ஆசிரியர் 3 மொழிகளை கற்பிக்க வேண்டும் என்கிறார்கள். தாய் மொழி, ஆங்கிலம், இந்தி மூன்றையும் ஒரே ஆசிரியர் கற்பிக்க வேண்டும்.

இ. கல்வியின் உள்ளடக்கம்:

– மக்களின் தேவைகளுக்கான கல்வியாக இருக்க வேண்டும்

– உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைகளை பேசும் கல்வியாக இருக்க வேண்டும்

– அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பேசுவதாக கல்வி இருக்க வேண்டும்.

இதுதான் சமூக மாற்றத்துக்கு தேவை. கல்வி தனியார் மயத்துக்கு எதிராக போராடுபவர்கள் சோசலிச புரட்சி வந்த பிறகுதான் மாற்றம் சாத்தியம் என்று சொன்னால் இப்போதைய அதிகார வர்க்கத்துக்கு மகிழ்ச்சிதான். புரட்சியை நோக்கிய போராட்டமாக பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறையை கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

1. தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

2. தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்

3. அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் வேண்டும்.

இதற்கு பிறகு பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை செயல்படுத்த முடியும்.

இறுதியாக, கல்வி உரிமைக்காக போராடிய சிறு குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தோழர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்த பணக்காரர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த சொத்தும் வைத்திராத பகத்சிங் மக்களின் நினைவில் நிற்கிறார். பகத் சிங் போல போராடுங்கள். நீங்கள் வீரமிக்க போராட்டங்களை நடத்தும் போது நாங்களும் எங்கள் கரங்களை உங்களுடன் இணைத்துக் கொள்வோம்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்.

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

சட்டக்கல்வியில் தனியார்மயத்தை நுழைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

புமாஇமு-வின் அறைகூவலாக ‘கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு’த் தீர்மானங்கள்!

உழைக்கும் மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள்,கல்வியாளார்கள் ஆகிய அனைவருக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விடுக்கும் அறை கூவலாக ‘கல்வி தனியார் மய ஒழிப்பு’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதோ…

1. பார்ப்பனீய சாதித் தீண்டாமை காரணமாக, நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதையும் மீறி கல்வி கற்றவர்களை ஒடுக்கியும் வந்துள்ளது. இன்றளவும் சாதித் தீண்டாமை கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. கல்வி வாசனை அறியாத பல கோடி பழங்குடி மக்களைக் கொண்ட நம் நாடு, பின் தங்கிய பிராந்தியங்களையும் பொருளாதார – சமூக ஏற்றத் தாழ்வுகளையும், ஏழை உழைக்கும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கிராமப் புற அடித்தளத்தையும், பிற்போக்கு பழக்கவழக்கங்கள்-கலாச்சாரங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே, உண்மையான ஜனநாயகமும்  நாகரீக வளர்ச்சியடைந்த சிறந்த குடிமகன்களை கொண்டதாகவும் உலக அரங்கில் கௌரவமான நாடாகவும் திகழ வேண்டுமானால், அனைவரும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை விருப்பப் பூர்வமான கல்வித் தகுதியை அனைவரும் இலவசமாகப் பெற அரசே தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். கல்வி கற்பிப்படை கட்டாய அவசியமாக்க வேண்டும். இப்படி செய்வதுதான் இயற்கை நியதியாகும், உண்மையான ஜனநாயகமாகும் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

2. தேர்ந்த வல்லுநர்களையும் சிறந்த அறிவாளிகளையும் உருவாக்குவது, பொது அறிவை ஊட்டுவது மட்டும் கல்வியின் நோக்கமல்ல, இவற்றுடன் சமநோக்கு சிந்தனையும், உன்னத கலாச்சாரத்தையும், நயத்தக்க நாகரீகத்தையும், சமூகப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்ட சிறந்த சமூக மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். பணியாகும், பாத்திரமும் ஆகும்.எனவே கல்வி என்பது ஒரு உன்னதமான பொதுச் சேவையாகும். வணிகப் பொருளாகவோ பிச்சைப் பொருளாகவோ கருதுவது கல்வியை கொச்சைப்படுத்துவதாகும். எனவே, இந்த பொதுச்சேவையை மக்கள் அனைவருக்கும் இலவசமாக கட்டாயமாக வழங்க வேண்டியது அனைத்து மக்களின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அரசின் கடமை மற்றும் கடப்பாடு ஆகும்.

3. கல்வி நிறுவனங்களை தனியார் முதலாளிகள் தொடங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 19-1(g) பிரிவு கூறுகிறது. மேலும் வர்த்தகம், வியாபாரம் என்ற பிரிவுகளுக்குள் கல்வி நிறுவனங்களும் அடங்கும் என்று பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் கல்வியை கடைச்சரக்காக்கி தனியார் முதலாளிகள்  லாபமீட்டலாம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டமே அனுமதியளித்துள்ளது என தெளிவாகத் தெரிகிறது. மேலும் கல்வி நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு குறிப்பிட்ட இந்த தகுதி தேவை என்று இந்தச் சட்டப்பிரிவு வரையறை செய்யவில்லை. இதனால் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள், கொள்ளை லாபம் அடிப்பதையே நோக்கமாகக் கொண்ட பெரும் முதலாளிகள், நமது நாட்டை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகள் என எவர் வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் தொடங்கி லாபம் ஈட்டி கொள்ளையடிக்கலாம் என்று அனுமதி வழங்கும் இந்தத் தீர்ப்பு தேசத் துரோகமானது, மக்கள் விரோதமானது. எனவே இது தூக்கியெறியப்பட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை – இவற்றை வழங்குவது அரசின் கடமை மற்றும் கடப்பாடு என்ற அடிப்படையில், இருக்கின்ற எல்லா தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை எல்லாவற்றையும் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இந்த அரசுக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்று முறை, ஒரே தேர்வு முறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளுடைய பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்டதாக கட்டமைக்கப்பட வேண்டும். பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். விஞ்ஞானப் பூர்வமான மனித மாண்புகளை வளர்க்கின்றதாக கல்வி இருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தனியார் கல்வி நிறுவனங்களில் ‘நியாயமான’ கட்டண நிர்ணயம், இலவசக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு, தனியார் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவது என்கின்ற பெயரில்  தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு லாப உத்தரவாதமளிப்பது, தனியார் துறை-பொதுத்துறை கூட்டு போன்றவையெல்லாம் கல்வியை தனியார் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட நயவஞ்சக நடவடிக்கைகளே. இவைகள் பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை மேலும் மேலும் பறிக்கப்பட்டு வருவதை மூடிமறைக்கும் தந்திரமே என இம்மாநாடு பகிரங்கமாக அறிவிக்கிறது.

6. தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக, கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக இருக்கின்ற அரசு பள்ளி, கல்லூரிகளை திட்டமிட்டு சீரழிய விட்டு பெற்றோர்களை தனியார் கல்விக் கொள்ளையர்களை நோக்கி நெட்டித் தள்ளுகிறது என இந்த மாநாடு குற்றம் சாட்டுகிறது.

7. குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டுவதையே தமது ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் ‘தரமான கல்வி’ கொடுக்கும் என்று நம்புவது தவறு. பல புகழ் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் செய்த மோசடிகள், ஊழல் முறைகேடுகள் அன்றாடம் வெளிவந்து நாறுகின்றன. எனவே தனியார் கல்வியின் மீதான மோகத்தை விட்டொழிக்குமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. இந்தியா கையெழுத்திட்ட அடிமை சாசனமான காட் (GATT) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமலுக்கு வந்த, சேவைத் துறைகளுக்கான பொது வர்த்தக ஒப்பந்தப்படிதான் (GATS) கல்வித் துறை வியாபாரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பின்பு இந்நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிப்பவர்கள், கல்வியாளர்கள் அல்ல, பிர்லா-அம்பானிகளும், பன்னாட்டு முதலாளிகள் சங்கமும், அவர்களின் கைக்கூலி அறிவாளிகளான அறிவார்ந்த குழுவினரும், ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வக் குழுக்களும்தான். இவர்களின் நலனுக்காக நாட்டின் மொத்த கல்வித் துறையையுமே கபளீகரம் செய்வதற்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மசோதா, உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறை மசோதா, கல்வித் தீர்ப்பாயங்கள் மசோதா உள்ளிட்டு 16 வகையான சட்டமசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப புதுப்புது பாடத் திட்டங்களை வகுப்பது, புதுப்புது ஆய்வுகளை செய்வது, கல்வியின் உள்ளடக்கத்தையே மாற்றியமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையெல்லாம், எல்லாத் துறைகளிலும் புகுத்தப்பட்டு வரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக, மத்திய-மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின்படி சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே ஒரு ஆக்டோபஸ் போல நம்மை வளைத்துப் பிடித்திருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்காமல் அனைவருக்கும் கல்வி எனும் உரிமை பெற முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கைகளை தூக்கியெறியாமல் சட்டப் பூர்வமாகவே நம்மைக் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்க முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கையை ஒழிக்க நக்சல்பாரி வழியில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைக்கும் போதுதான் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கட்டாயக் கல்விச் சேவையை அனைவரும் பெற முடியும். இதற்கான போராட்டத்திற்கு அணிதிரளுமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

தனியார்பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்கள் மீது நவீனத் தீண்டாமை அரங்கேற்றம்!இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது!

கடந்த ஜூலை.18-ந்தேதி ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தி, இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள பார்ப்பனீய சாதிக் கட்டுமானத்தின்  அருவறுக்கத்தக்க விசயமான தீண்டாமை புதிய வடிவத்தில் அரங்கேற்றப்பட்டு இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இதுதான் அந்த செய்தி;

’’ கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் உள்ள ஆக்ஸ்போர்டு என்னும்  ஒரு தனியார் பள்ளியில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்த ஏழை மாணவ – மாணவிகளை தனிமைப்படுத்தி இழிவுபடுத்தும் நோக்கில் அவர்களது தலைமுடியை வெட்டியுள்ளனர்.

மேலும், தலைமுடி வெட்டப்பட்ட இந்தக் குழந்தைகளது பெயரை வருகைப் பதிவேட்டில்  பதிவு செய்யவதில்லை.  அசெம்பிளியில் (காலை வணக்க நிகழ்ச்சியில்)  தனியாக பிரித்து நிற்க வைப்பது, வகுப்பறைக்குள் நுழையும் முன் டிபன் பாக்சைத் திறந்து சோதிப்பது, வகுப்பறையில் கடைசி வரிசையில் ஓரமாக உட்கார வைப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக ’தனியார்பள்ளிக் கல்வியின் சிறப்பம்சம் என்று இவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்’   மாணவர்களுக்கான வீட்டுப்பாடப் பயிற்சியைக்கூட கொடுக்காமல் இருப்பது என்று கடந்த இரண்டு மாதங்களாக ஏழை மாணவர்களை ஒதுக்கி வைத்து தீண்டத் தகாதவர்களாகவே நடத்தி வந்துள்ளது ஆக்ஸ்போர்டு தனியார்பள்ளி.’’

தனியார்மயக் கல்வி உருவாக்கி இருக்கும் இந்த நவீனத்  தீண்டாமையினால், புறக்கணிக்கப்பட்ட  மாணவர்களின் பெற்றோர்கள் கோபம் கொண்டு நியாயம் கேட்டப்போது எந்த பதிலும் சொல்லாமல் இந்த ஏழைப் பெற்றோர்களையும் திமிர்த்தனமாக புறக்கணித்துள்ளது பள்ளி நிர்வாகம். இந்த ஒரு  பள்ளி நிர்வாகம் மட்டுமல்ல, கர்நாடக மாநில தனியார்பள்ளி முதலாளிகளின் சங்கமும் இதே திமித்தனத்தோடுதான் ஏழை மாணவர்களின் மீதான இந்த நவீனத் தீண்டாமையை நியாயப்படுத்தியுள்ளது.  கர்நாடகத்தின் கல்வித்துறை செயலாளரான குமார் நாயக் “இலவசக் கல்வி உரிமை சட்டப்படி, 25% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது குற்றமாகும் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம்”என கூறியுள்ளார். இவர்களுடைய விசாரணை நாடகம் எல்லாம் சூட்கேசை சுருட்டுவதில்தான் (லஞ்சம் பெறுவதில்)  போய் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே.ஆனால் இப்படி பட்டவர்த்தனமாகத் தீண்டாமையை அரங்கேற்றுவதற்கான திமிர் தனியார்பள்ளிகளுக்கு எங்கிருந்து வந்ததுள்ளது, என்பதை இந்நாட்டின் ஆகப்பெரும்பான்மை உழைக்கும் மக்களான  ஏழைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்  மிகமுக்கியமான விசயம்.

அது புரிந்துகொள்ளமுடியாத புதிர் ஒன்றுமில்ல,மிக சுருக்கமாகச் சொன்னால்   இந்த அரசிடமிருத்துதான். இந்நாட்டில் புற்றீசல்போலப் பெருகி இருக்கும் தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம், கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டங்கள் என இவர்களின் பகற்கொள்ளையை சட்டபூர்வமாக்குவதற்காக அரசு ஒரு பெயரளவுக்குப் போடும் சட்டங்களைக்கூட  மலம் துடைக்கும்  காகிதங்களைப்போல தூக்கியெறிந்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன தனியார்பள்ளிகள். அரசால் இதை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகின்றது.

தனியார்பள்ளி முதலாளிகள் (இவர்களில் பலர் மத்திய – மாநில முன்னால், இன்னால் அமைச்சர்களாகவும், முன்னால் ஆசிரியர்களாகவும், கல்வித்துறை அதிகாரிகளாகவும் உள்ளனர்.)  கல்வித்துறை அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தும், அவர்களுடைய பலவீனங்களை தெரிந்து கொண்டும் வலைத்துப்போடுகிறார்கள். வலைந்துகொடுக்க மறுக்கும் அதிகாரிகளை தங்கள் அதிகார பலத்தை வைத்து மிரட்டுகிறார்கள், இட மாறுதல் செய்து பந்தாடுகிறார்கள். தங்களை எதிர்த்து வழக்கு விசாரணை என்று யாராவது (அது அரசாக இருந்தாலும்)  நீதிமன்றம் சென்றாலும் ’நீதீமான்களை’ அவர்களின் ’மாண்புக்கேற்றவாறு’ கவனித்து எப்பொழுதும் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பை வாங்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியில் தனியார் கடைவிரித்து கொள்ளையடிக்க அனுமதிப்பது அரசின் சட்டப்பூர்வ கொள்கையாகவே இருப்பதால் அரசியலமைப்புச் சட்டம் முதல் கல்வி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் தனியார்பள்ளிகளுக்கு சாதகமாகவே  உள்ளன. பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் அரசியலைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுதந்திரத்திற்கான உரிமையில் 19-1(g) பிரிவின்படி ஒரு தொழில் நிறுவனம் தொடங்கி நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இதன்படி யார் ஒருவரும் கல்வி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். தனியார்கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டங்களுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

கொள்ளைலாபம் அடிப்பதொன்றையே நோக்கமாகக் கொண்ட தனியார் பள்ளி முதலாளிகளிடம் அனைவருக்கும் பொதுவான கல்விச் சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும். ’தரமான பயிற்சி, ஆங்கிலவழிக் கல்வி’ என்று சொன்னாலே இதை நம்பி லட்சக்கணக்கில்  பணத்தைக் கொட்டும் பணக்காரன் அல்லது பணக்காரனாக காட்டிக்கொள்பவன் வீட்டுப் பிள்ளைகளையும், ’எதுவும் தேராத கேஸ்’ என்று இவர்களால் ஏளனமாகப் பார்த்து ஒதுக்கப்பட்ட  ஏழைகள் வீட்டுப் பிள்ளைகளையும் எப்படி சமமாக நடத்துவார்கள். இதனால்தான் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்களை  ’ஓசி கிராக்கிகள்’ எனப்பட்டம் கட்டி கேள்வி கேட்பாரின்றி நவீனத் தீண்டாமையை அரங்கேற்றியுள்ளனர்.

பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியால் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட இந்நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் ’கல்வி வாசனையை’க்கூட  நுகரக்கூடாது, காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று, படித்தால் நாக்கை வெட்டு எனறது பார்ப்பனீய மனுநீதி. வில் வித்தையில் (கல்வியில்) அரசப் பரம்பரையைச் சார்ந்த அர்ச்சுனனை விஞ்சிய ’சூத்திர’ ஏகலைவனிடம் கட்டை விரலைக் கேட்ட அந்த பார்ப்பனக் கொழுப்பு இன்றும் நிலவுகிறது – ஆனால் வேறு வடிவத்தில்.காசு உள்ளவனுக்கே கல்வி எனும் உலக வங்கியின் புதிய பார்ப்பனீய மனுநீதியாக,தனியார்மயக் கல்விக் கொள்கையாக. ஆம், அது கல்வி என்று தனியார்பள்ளி வாசலை மிதிக்கும் ஏழை மாணவர்களின்  காதில் பீசைக்( கட்டணத்தை) காய்ச்சி ஊற்றி விரட்டுகிறது. அதையும் தாண்டி 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்தால் தலைமுடியை வெட்டி சிதைக்கிறது

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி –  ஒரு மோசடி!

மத்திய அரசின் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 25% சதவீத ஏழை மாணவர்களை தனியார்பள்ளிகளில் சேர்க்கலாம் என்கிறது. இது ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என பத்திரிக்கைத் தொலைக்காட்சிகள் ஊதிப்பெருக்கின. மெத்தப்படித்த மேதாவிகளும், முதலாளித்துவ கைக்கூலி எழுத்தாளர்களும்  ’சுதந்திர இந்தியாவின்’ 65 ஆண்டுகால கனவு நிறைவேறிவிட்டது, அதை நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று பைத்தியக்காரர்களைப் போல பிதற்றுகிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு இது தொடர்பான ஒரு வழக்கின் போது இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகள் பற்றி மத்திய அரசை கேள்விகள் மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துவிட்டார் என்று ’சட்டத்தின் மீதான , கல்வியின் மீதான அவருடைய அக்கறையை’ப் பற்றி (சட்டத்தை தவறு என்று சொல்லவில்லை, இது ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று கண்டிக்கவில்லை. தனியார்மயக் கல்விக்கு சாதகமாகவே பேசியுள்ளார்)  சட்டத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதனை ஆகா ஓகோ என்று பேசி புலங்காகிதம் அடைந்து அவருக்கு மணிமகுடம் சூட்டுகிறார்கள். பல தனியார் கல்லூரிகளை நடத்தி பகற்கொள்ளையடித்து பல தலைமுறைகளை அழிக்கத் துடிக்கும் எஸ்.ஆர்.எம் பச்சைமுத்துவின் புதியதலைமுறை வாரஇதழ் நாங்கள் இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பற்றி அப்பொழுதே (சட்டம் இயற்றும் போதே) சொன்னோம் ’சந்துருவை விஞ்சிய நீதிமான் நாங்கள்’ என்று மார்தட்டி எழுதுகிறது. இப்படியெல்லாம் பலவாறு பேசிமக்களை ஏமாற்றி வந்தார்களே அந்த இலவசக்கல்வி உரிமைச் சட்டத்தின் யோக்கியதை என்ன?

மத்திய அரசின் இலவசக் கல்வி     உரிமைச் சட்டத்தின்படி ( பெயரில் தான் இலவசக் கல்வி)    தனியார்பள்ளிகளில் சேரும் 25% இட ஒதுக்கீட்டு ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே கட்டும். தான் வாங்குவதுதான் கட்டணம் என்கின்றன தனியார்பள்ளிகள். இந்த சதவீத எண்ணிக்கையைக் கூட்டும் பட்சத்தில் அரசுப் பள்ளியில் சேர வேண்டிய மாணவர்கள் தனியார்பள்ளியை நோக்கிச் சென்று கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் தனியார்பள்ளிகளின் லாபத்திற்கு அரசால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆக, இது ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கும் நோக்கம் கொண்டதல்ல, கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ள தனியார்மயக் கல்வியை நோக்கி பெற்றோர்களை நெட்டித்தள்ளும் நயவஞ்சக நடவடிக்கையே.

இலவசக்கல்வி உரிமைச் சட்டம் என்பது தனியார்மயக்கல்வியை ஊக்குவிக்கவே செய்யும் என்கிற போது, இதை ஏன் தனியார் பள்ளிகள் எதிர்க்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதுதான் அதற்கான சுருக்கமான பதில் “ இச்சட்டத்தின்படி சேரும் மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும். இதன் மூலம் தனியார்பள்ளிகளுக்கு லாப உத்தரவாதம் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான மாணவர்களை அரசுப்பள்ளியில் இருந்து பெயர்த்தெடுத்து தனியார்பள்ளிகளுக்கு அரசே அனுப்பிவைத்து தனியார்கல்விக்கொள்ளையர்களை வாழ வைத்துக்கொண்டே இருக்கும் என்பதெல்லாம் தனியாருக்கு சாதகமாக இருந்தாலும், இலவசக்கல்வி உரிமை என்ற இத்திட்டத்தின்படி தங்களுக்கு சிறிய பாதிப்புக்கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்ச உணர்வு ஒருபுறம், மறுபுறம் நம்நாட்டில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய ஆதிக்கசாதி மனோபாவம் குடிமக்கள் அனைவரையும் சம்மாகப் பார்ப்பதில்லை. அதுதான் இன்று தனியார்பள்ளி முதலாளிகளின் மனோபாவமும்.

தனியார்பள்ளியில் ஆயிரம் ஆயிரமாக பணம் கொடுத்து படிக்கும் வசதிபடைத்தவர்கள் பிள்ளைகளோடு ஏழைப்பிள்ளைகளை எப்படி சேர்த்து வைப்பது, தரத்தை எதிர்பார்த்து பணம் கட்டியவனுக்கும் பணம் கட்டாத ஏழை மாணவனுக்கும் எப்படி ஒரே கல்வி கொடுப்பது என்று பார்ப்பனீயத் திமிரோடு துக்ளக் வாரப்பத்திரிக்கையில் சீறுகிறான் மொட்டத்தலையன் ’சோ’. இப்படி இவன் சொன்னதைத்தான் கர்நாடகத்தில் தனியார்பள்ளி நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் புற்றீசல் போல பெருகி இருக்கும் தனியார்கல்வி நிறுவனங்கள் இந்த நவீனத் தீண்டாமையை அரங்கேற்ற தக்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தனியார்பள்ளிகள் விரித்த மோகவலையில் விழுந்து தரமானக்கல்வி, ஆங்கிலவழிப் பயிற்சி, டாக்டர், இன்ஞ்சினியர் கனவுகளில் மிதந்துகொண்டிருக்கும் நடுத்தரவர்க்கப் பிரிவினர் இதனைக் இச்செய்தியைக் கண்டும் காணாமல் செல்கின்றனர். மேற்கண்ட வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டுவரும், இந்த இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை வராது வந்த மாமனியைப் போல் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப்போவது தனியார்பள்ளிகளில் இலவசமாக தரமானக் கல்வியல்ல, மேலும் மேலும் ஆழப்பட்டு வரும் பார்ப்பனீய ஆதிக்கசாதி மனோபாவத்தால் நவீனத் தீண்டாமையும்,தனியார்மயக் கல்விக் கொள்கையின் விளைவால் தற்குறியாக்கப்படுவதும்தான். அனைவரும் தரமானக் கல்வியை இலவசமாகப் பெறவேண்டுமானால் தனியார்மயக் கல்வியை ஒழித்துக் கட்டவேண்டும். அரசுக் கல்வியை நிலைநாட்ட வேண்டும்.இதை சீர்திருத்தத்தின் மூலமாக சாதிக்க முடியாது. ஒரு சமூக மாற்றமான புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாதிக்கமுடியும். இதற்கான களத்தை அமைத்து வருகிறது பு.மா.இ.மு வாருங்கள்…….கரம் சேருங்கள்! தனியார்பள்ளியில் 25%  இடஒதுக்கீடு  என்பது  வரப்பிரசாதம் அல்ல! தனியார்மயக்கல்வியை  ஊக்கப்படுத்தும்  மற்றும் ’ஓசிகிராக்கிகள்’ எனப்பட்டம் கட்டி தீண்டாமையை அரங்கேற்றுவதற்கான சூழ்ச்சியே என்பதை உணர்ந்திடுவோம்! உழைக்கும் மக்களுக்கு கல்வியை மறுக்கும் புதிய மனுநீதியான தனியார்மயக் கல்விக் கொள்கைக்கு கொள்ளிவைப்போம்!

 

தொடர்புடைய பதிவுகள்:

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-1

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அ. கருணானந்தம் ஆற்றிய உரையின் சுருக்கம். பேரா கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.

றிவாளிகள், மேதாவிகள் என்று ஊடகங்களால் முன் வைக்கப்படுபவர்களிடம்  உண்மையில் அறிவு நேர்மை இருப்பதில்லை.  ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகம் அப்துல் கலாம் சொன்னதாக பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், அதை முதலில் சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங். ‘I have a dream  நான் கனவு காண்கிறேன்’ என்று கருப்பு இன மக்களுக்கு சம வாழ்வு கிடைப்பது பற்றிய ஏக்கத்தை அவர் குறிப்பிட்டார்.

கனவு காண்பது என்பது ஏக்கத்தை குறிப்பிடுவது. ஏ சி சண்முகம் போன்ற கல்வி வியாபாரிகள் கோடிக் கணக்கில் பணம் குவிக்க ஆசைப் படுகிறார்கள். அவர்கள் கனவு காணலாம்.  கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது தேவை. ஆசைக்கு கனவு காணலாம், ஆனால் தேவைக்கு போராட வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது சமூகத்தை பாழாக்கி விடும். ‘கனவு காணுங்கள்’ என்று சொல்லும் அப்துல் கலாம் தேவைகளுக்காக ஏன் போராட சொல்லவில்லை!

கல்வி அனைவருக்கும் வேண்டும் எனும் போது ‘கல்வி என்பது என்ன?’ என்ற ஒரு கேள்வியும், ‘யாருக்கு கல்வி?’ என்ற ஒரு கேள்வியும் எழுகின்றன.

கல்வி ஆதிக்க வர்க்கத்தின் கருவியாக இருந்தது என்று மார்க்ஸ் சொன்னார். பல ஆயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் படி தாழ்த்தப்பட்ட சூத்திர, வைசிய, மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குரு குலத்தில் குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என்று மக்களை ஒடுக்குவதற்கான பயிற்சி பெற்றார்கள். கல்வி யார் பெற வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தீர்மானித்தார்கள். உழைக்கும் மக்களுக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு தொண்டூழியம் செய்வதற்காக விதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ‘கல்வி யார் பெற வேண்டும்’ என்பதை தரும சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர் தவறிப் போய் அறிவு தரும் விஷயங்களை கேட்டு விட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று’ என்று சொல்கின்றன தரும சாஸ்திரங்கள்.

நாம் விரும்பும் கல்வி என்பது உழைக்கும் மக்களுக்கான கல்வி. இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்க வர்க்க மாணவர்களை எடுத்து தேச விரோதிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் போய் கிரீன் கார்டு வாங்கிக் கொள்கிறார்கள், ‘குழந்தையை அமெரிக்க மண்ணிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் குடியுரிமை கிடைக்கும்’ என்று திட்டமிடுகிறார்கள். இது தேச விரோத கிரிமினல்களை உருவாக்கும் கல்வி.

நாம் விரும்பும் கல்வி மக்களிடமிருந்து மாணவர்களை அன்னியப்படுத்தாத கல்வி. நாட்டில் கல்வி பற்றிய திட்டமிடும் குழுக்களில் சாம் பிட்ரோடா போன்ற மக்களோடு தொடர்பில்லாத நபர்கள் இடம் பெறுகிறார்கள். வேலை வாய்ப்புக்கான கல்வி, அறிவை பெறுவதற்கான கல்வி என்று பேசுகிறார்கள். சமூக நலனுக்கான கல்வி, நாட்டு நலனுக்கான கல்வி என்பது பேசப்படுவதில்லை.

நாம் விரும்புவது மக்கள் பற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி.  ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை எந்தத் திசையில் செயல்படுகிறது?

இந்தியாவிற்கு அடுத்த சீர்திருத்த அலை தேவை என்று ஒபாமா சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லும் சீர்திருத்தம் வேறு, இந்திய மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம் வேறு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றியும் மோசமாகி வரும் முதலீடு சூழலைப் பற்றியும் அமெரிக்க நிறுவனங்களின் கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் சொல்லாமல் விட்டது கல்வித் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை பற்றிதான். கல்வி நடத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் வேண்டும் என்பது அவர்களது முக்கிய குறிக்கோள்.

ஒபாமாவின் கருத்துக்கு இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், அவை வந்த விதத்தைப் பார்க்க வேண்டும். ‘அன்னிய சக்திகள் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றன, சில தனி நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒபாமா இப்படி பேசுகிறார். அடிப்படை பொருளாதார காரணிகள் அவர் கவனிக்கவில்லை.  ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிறோம். இன்னும் தொடர்ந்து அமெரிக்க தேவைகளை நிறைவேற்றுவோம்’ என்று அவர்கள் நீளமான விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதனால்தான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் அக்கறையுடன் பேசுகிறார்.

கல்வியை அதன் சமூக பொருளாதார சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மற்ற துறைகளிலெல்லாம் தனியார் மயமாக இருக்கும் போது கல்வித் துறையில் தனியார் தாராள உலக மயத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும்!

1946-ம் ஆண்டு சுதந்திரம் எத்தகையது? பாகிஸ்தானை பிரிக்க வேண்டுமா வேண்டாமா என்று கலவரங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சி 1946-ம் ஆண்டு தேர்தலுக்கான தனது அறிக்கையில் ஒன்று பட்ட இந்தியாவை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கும் போது அதை நீக்கி விட்டு எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையை மறுக்கப் போவதில்லை என்றார்கள். அதாவது முஸ்லீம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுப்பதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். எதை செய்தாவது தாம் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி  விட வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தார்கள்.

அப்படி அதிகாரத்தைப் பிடித்தவர்கள்தான் இப்போது அமெரிக்காவை தமது எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் பொறுத்திருக்குமாறு மன்றாடுகிறார்கள்.

2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்த திருத்தத்தை பலர் வெற்றியாக கொண்டாடினார்கள்.  மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள்.

உண்மையில் மாற்றியது என்ன?

1. அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது

2. வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது

3. அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.

21A ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசை காட்டுகிறது, மாநில அரசு உள்ளாட்சி அரசை காட்டுகிறது. பொறுப்பை தள்ளி விடுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வியை தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.

மூன்றாவதாக, கடமைகளில் ஒன்றாக பெற்றோர் 6 முதல் 14 வயது வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறார்கள்.

மழலையர் பராமரிப்பு உரிமையாகவோ கட்டாயமாகவோ சொல்லப்படவில்லை, இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை அரசு கல்வி தரும்.  ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது. 6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த உதவியும் பேசப்படவில்லை.

2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி  நான்கு வகையான பள்ளிகள் இயங்குவதை அனுமதித்தார்கள் – சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். இப்படி இருந்தால் சமத்துவம் எப்படி தர முடியும்?

அருகாமைப் பள்ளி என்பதன் வரையறையில் தனியார் சிறப்புப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. உதாரணமாக சென்னை தரமணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு பள்ளியில் போய் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படியான ஒதுக்கீடு கோர முடியாது. அந்த விதி குட்டி முதலாளிகள் நடத்தும் பள்ளிகளுக்குத்தான் பொருந்தும். கார்பொரேட் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தப் போவதில்லை.

தனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.

‘ஆசிரியர் சம்பளம், மற்ற தினசரி செலவுகளோடு எதிர்காலத்தில் விரிவாக்கத்துக்கான நிதியையும் கட்டணமாக வாங்கலாம்’ என்கிறார்கள். விரிவாக்கம் தனியார் முதலாளிக்கு எதிர்காலத்தில் லாபத்தை தரப் போகிறது, அதற்கு மாணவர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?

கல்வியாளர்களாக மாறிய தனியார் முதலாளிகள் அதில் குவிக்கும் பணத்தை எடுத்து தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இந்த மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ சி சண்முகம் புதிய நீதிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

இந்த அடிப்படையிலான தனியார் கட்டண வசூலுக்கு நீதிமன்றமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையான கட்டிடங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்துகிறார்கள். கும்பகோணம் தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆண்டு தோறும் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்றம் இன்று வரை எந்த கட்டளையும் தரவில்லை. பள்ளியில் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அனைவருக்கும்  தரமான கல்வி பெற வேண்டுமானால் தனியார், தாராள, உலக மய திட்டங்களை  எதிர்க்க வேண்டும். அரசாங்கம் சட்டங்களை மட்டும் போட்டு விட்டு அவற்றை நிறைவேற்றத் தேவையான திட்டங்களை போடுவதில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஒரு பகுதியில் தேவையான அரசு பள்ளிகளை உருவாக்கும் பொறுப்பை  அரசுக்கு தரவில்லை. இத்தகைய புதிய சமூக அநீதிக் கொள்கையின் விளைவுகளுடன் நாம் மோதிக்  கொண்டிருக்க முடியாது. நாம் போய் தனியார் முதலாளிகளுடன் கல்வி பெறும் உரிமைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

காமராசர் காலத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளி, அருகாமைப் பள்ளி இருந்தன, மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தன. 1970களுக்குப் பிறகுதான் மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன. பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்க அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 1300 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி அதை மருத்துவமனையாக மாற்றுவதாக சொல்கிறார்கள். அண்ணா நூல் நிலையத்தை மாற்றுகிறேன் என்கிறார்கள் அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் கட்ட வேண்டுமென்றால் பணம் இல்லை என்கிறார்கள்.

அடிப்படையில் மக்கள் கல்விக்கு கல்விக் கூடங்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்கு கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்பட வேண்டும். அதை சாதிக்க தனியார், தாராள, உலக மய கொள்கைகளை அவை எந்த உருவத்தில் வந்தாலும் மக்கள் எதிர்த்து போராட வேண்டும்.

கல்வி என்பது வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல, வறுமையுடன் போராடுவதற்காக!

__________________________________

– வினவு செய்தியாளர்.

முதல் பதிவு: வினவு

கரூர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-பத்திரிக்கை செய்தி!

***************************

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!

சென்னை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

விழுப்புரம் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-காட்சி பதிவுகள்!