கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி
அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!
டிச-18 ந்தேதி மாலை 3 மணியளவில் சென்னை பச்சயப்பன் கல்லூரி வாயில் அருகே கூடிய பு.மா.இ.மு தோழர்களை காக்கிச்சட்டை ரவுடிகள் கொலைவெறியுடன் தாக்கி கைது செய்தனர்.மேலும், உளவுத்துறை போலீசார் கைகாட்டிய பக்கம் எல்லாம் செஞ்சட்டைத் தோழர்களைத் தேடி வெறிநாய் கூட்டம் போல் அலைந்துகொண்டிருந்த காக்கிச் சட்டை ரவுடிகள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில்thut வந்திறங்கிய போதே அத்தோழர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். ஏன் இந்த கொலைவெறி?, எதற்காக? பு.மா.இ.மு தோழர்களை இப்படி பலவந்தமாக பொய்வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர்,இன்றுவரை பினையில் விடாமலும் அடக்குமுறையை ஏவுகின்றனர்.
அமெரிக்க அதிபர் இந்தியா வருகை என்று அறிவித்தாலே நாடு முழுக்க 144 தடையை போட்டு பீதியை உருவாக்கிவதன் மூலம் அமெரிக்க அடிவருடிகள் தங்கள் ’எஜமான’ விசுவாசம் காட்டுவார்களே, அப்படி யாராவது வந்தார்கள் என்று நினைக்கிறீர்களா? பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்காக கூடங்குளம் பகுதி மக்களைக் கொல்லத் துடிக்கும் கள்ளுலிமங்கன் மன்மோகன் வரும் டிச-25 ந்தாம் தேதி தமிழகம் வருவதாக சொல்கிறார்களே அதற்கான முன்னெச்சரிக்கை என்று கருதுகிறீர்களா? அல்லது தமிழக மக்கள், முன்பு ஒரு முறை ஓட்டுப் போட்டு முதல்வராக ஆட்சியில் அமர்த்தியற்கு தண்டனையாக அம்மக்களை கொள்ளையடித்து சொத்து சேர்த்த கிரிமினல் குற்றவாளி ’ஜெயா’ அந்த கல்லூரி சாலை வழியே வருவார் என்றா? இல்லை ,இவை எதுவுமே இல்லை ! பிறகு எதற்காக இத்தனை களேபரங்கள்.
‘கருத்து சுதந்திரம்’ வேண்டுமென்றும், சி.பி.ஐ அதிகாரிகள், பிரதமர் உள்ளிட்டு எல்லா அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் ஜன லோக்பால் வரம்புக்குள் கொண்டு வந்தாலே ‘ஊழலை ஒழித்துவிட’ முடியும் என்றும் கூறி ’உண்ணாவிரத சாமி’யாடி தன்னை காந்தியின் மறுஅவதாரமாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக மாற்றுக் கருத்து சொன்னதற்காகத்தான் பு.மா.இ.மு தோழர்கள் மீது காக்கிச் சட்டைகளின் கொலைவெறித் தாக்குதலும்,கைது படலமும். காரணம், இந்த அன்னா ஹசாரே கார்ப்பரேட் ஊடகங்கள் , ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்களின் ஆதரவோடு வலம்வருகிறான் என்பதால் மட்டுமல்ல கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி என்பதாலும் தான்.
அன்றைய காந்தி பிர்லா எனும் தரகு முதலாளியின் மாளிகையில் அமர்ந்துகொண்டு இந்நாட்டின் ’விடுதலையைப் பற்றி பேசினார்’. இன்று காந்தியின் மறு அவதாரமெடுத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி ஹசாரே ஊழலை ஒழிக்க “ஜன லோக்பால்” சட்டம் கொண்டு வருவதே தீர்வு, அதற்கு உண்ணாவிரதம் ஒன்றே வழிமுறை என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையை மூடி மறைப்பதற்காக ஊழல் எதிர்ப்பு நாடகமாடி வருகிறார். எது ஊழல் எதிர்ப்பு? அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதா? ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான், மிகப்பெரிய ஊழல்பேர்வழிகளே முதலாளிகள்தான். இந்த உண்மையை மறைக்கும் ’காந்தி’யவாதி எனும் ஹசாரேவின் நோக்கம் முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனம் அல்லவா?
ஆம், இந்த அயோக்கியத்தனத்திற்காகத்தான் மீண்டும் ஒரு முறை ஏ.சி மேடையில் ஊட்டச்சத்து மாத்தரைகளை சாப்பிட்டுக் கொண்டு, வந்தே மாதரம் ,பாரத் மாதாக்கி ஜெய்ய்ய்ய்…, என்று அய்.டி பார்க் அம்பிகளும் ,மாமிகளும் களிவெறியாட்டம் போடும் காட்சிகளை பார்த்து ரசித்துக் கொண்டே முதலாளிகளுக்கான சட்டத்தை இயற்ற வலியுறுத்தி டிச,27-ஆம் தேதி டெல்லி-யில் ’உண்ணாவிரதம்’ தான் நடத்தப் போகிறார்.இதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு திரட்ட, சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் இந்த ஹசாரே.
இப்படி இந்த அயோக்கிய கும்பல் பொதுக்கூட்டம் போட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பச்சையாக சேவை செய்யலாம். அதற்கு போலீசு பாதுகாப்பும் உண்டு. ஆனால், அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது. அப்படி திறந்தால் அவர்களுக்கு காக்கிச் சட்டைகளின் லத்தி கம்புதான் பதில் சொல்லும். இதுதான் இவர்கள் சொல்லும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ யோக்கியதை.
இதை நன்கு தெரிந்தவர்கள்தான் நக்சல்பாரிகளின் வாரிசுகள்! போலீசு ரவுடிகளின் லத்திக்கம்பை எதிர்பார்த்துத்தான் பு.மா.இ.மு போராளிகளும் களமிறங்கினார்கள். உழைக்கும் மக்கள் விரோதியான ஹசாரேவை அம்பலப்படுத்தியும், தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாகவும் ஹசாரே கூட்டம் நடத்திய டிச,18- ஆம் தேதி மாலை 3 மணியளவில், பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நின்று கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பு.மா.இ.மு சென்னைக் கிளை இணைச்செயலாளர் தோழர். நெடுஞ்செழியன் தலைமையில் பச்சையப்பன் கல்லூரி வாயிலருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இத்தோழர்கள் கூடினர். காலையிலேயே, “கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவை விரட்டியடிப்போம்“ என்ற முழக்கத்துடனான சுவரொட்டிகள் சென்னை முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டிருந்ததால், அரண்டுபோன போலீசு, எமது தோழர்களை அடையாளங்கண்டு,போராட்டத்தை சீர்குலைக்க முதலில் ஒருவரை மட்டும் அடித்து இழுத்து வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்ற முயன்றது, தான் கைது செய்யப்படுவதை உணர்ந்த
அந்தத் தோழர்,
அனுமதியோம், அனுமதியோம்!
முதலாளிகளின் கைக்கூலி
ஹசாரேவை தமிழகத்தில் அனுமதியோம்!
என்று கம்பீரமாக முழக்கமிட, ஆங்காங்கே நின்றிருந்த மற்ற தோழர்களும் கருப்புக்கொடியை உயர்த்திப் பிடித்து ஒரே குரலாக ஓங்கி ஒலித்தனர். அவர்களைச் சுற்றிவளைத்த போலீசு, கொடியைப் பிடுங்கியதோடு முழக்கம் போடும் தோழர்களின் வாயைப்பொத்தி, தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்ற முயல, அதையும் மீறி முழக்கம் சாலையை கிழித்துக் கொண்டு அப்பகுதி மக்களின் காதுகளை சென்றடைய இனியும் தாமதிப்பது ஆபத்து என்பதை தெரிந்து கொண்ட காக்கிச்சட்டை ரவுடிகள் முழக்கமிட்டவர்களை லத்திக்கம்பால் கொலைவெறியுடன் தாக்கி கைது செய்து கொண்டு சென்றனர்.
மின்னல் வேகத்தில் இதெல்லாம் நடந்து முடிந்த பின்னர் ’’முதல்வர் மகாத்மா’’ என்ற பேய் படமான காந்தியின் மறு பிறப்பு சினிமா படத்தை பரவசம் பொங்க பார்த்துவிட்டு ‘காங்கிரஸ்’ கொடிகள் பறந்த ‘ஆர்.எஸ்.எஸ்’ கூட்டத்தில் பேசிய ஹசாரே, நாட்டு நலனுக்காக சிறை செல்வதுதான் இளைஞர்களுக்கு உண்மையான அணிகலன் என்றும் நாட்டுக்காக தியாகம் செய்ய யாரும் தயங்கக் கூடாது என்றும் அதற்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை உதாரணமாக காட்டியும் பேசினார். இந்த ஹசாரே தன்னுடைய முன்னோடி என்று சொல்லிக்கொள்ளும் காந்தி தான் அன்று ஏகாதிபத்திய எதிப்புப் போராளிகளான இம்மூவரையும் தீவிரவாதிகள் என்று தனிமைப்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்து தூக்கிலேற்றவும் துணை நின்றார். அந்த காந்தியின் இன்னொரு அவதாரம் எனும் ஹசாரே-வின் நாற வாயால் இப்போராளிகளின் தியாகம் பற்றி பேசி எதிர்ப்பை உள்வாங்குவது மற்றொறுவகையான அயோக்கியத்தனமே.
வந்த கூட்டத்தில் பாதி வட்டிக்குவிட்டு உழைக்கும் மக்களை சுரண்டும் மார்வாடி சேட்டுகள், மீதி பார்ப்பனக்கூட்டமும்,அய்.டி பார்க் இளைஞர்களும். அவர்கள் யாரும் நாட்டைப் பற்றியோ, சிறை செல்வது பற்றியோ யோசிக்கப் போவதில்லை. கிரிக்கெட் ரசிகர்களைப் போன்று இரண்டாவது காந்தியை நேரில் பார்த்த திருப்தியோடு காரில் ஏறி வீடு சென்றிருப்பார்கள். ஆனால், பகத்சிங்கின் வாரிசுகளான எமது தோழர்கள் 13 பேர் புழல் சிறை சென்றிருக்கிறார்கள், இன்றுமட்டுமல்ல,என்றுமே சிறை ,சித்திரவதைக் கொடுமைகளை வாழ்க்கையாகவே ஏற்றுக் கொண்டுள்ள உண்மையான கம்யூனிஸ்டு போராளிகள் எமது தோழர்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளையும், இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலியான அன்னா ஹசாரே போன்ற கொடிய விசக்கிருமிகளையும் விரட்டும் எக்குறுதிமிக்க மாணவர்- இளைஞர் படையாக எமது தோழர்கள் சிறையிலிருந்து திரும்புவார்கள், ஊழலை ஒழிக்க நினைக்கும் உழைக்கும் மக்களே, நாட்டை நேசிக்கும் இளைஞர்களே இந்தப் புரட்சிப் படையோடு கலந்திடுங்கள்!
-இளஞ்செழியன்
Filed under: கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி | Tagged: அன்னா ஹசாரே, அரசியல், இந்தியா, ஊழல் எதிர்ப்பு, ஓட்டுப்பொறுக்கி அரசியல், கட்டுரை, காங்கிரஸ், கார்ப்பரேட் கம்பெனிகள், கிரன் பேடி, ஜன லோக்பால், தமிழகம், நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், போராட்டம், மறுகாலனியாக்கம், மாணவர்கள், லோக்பால் | Leave a comment »