• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,595 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ்.

_

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே,  மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.

அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.  லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.

இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன.  யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து  ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.

அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி  வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?

ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதற்கெல்லாம்  டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.

போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.

போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!

______________________________________________________

–    ஜான்சி

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

தொடர்புடைய பதிவுகள்

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ் அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்

அரசு பேருந்துகளின் நஷ்டத்திற்கு காரணம் என்ன?

ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?

 னியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.

இன்று எல்லா முக்கிய நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள், ஏசி, ஸ்லீப்பர் போன்ற வசதிகள், இணையத்தில் பதிவு செய்துக்கொளளும் வசதி, குடிநீர் பாட்டில், முகந்துடைத்துக் கொள்ள கைக்குட்டைகள் என்று வாடிக்கையாளர்களை பலவகைகளில் ஈர்க்கின்றன. அதோடு, எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பயண நேரத்தை மிகக்குறுகிய நேரத்தில்  சென்னையிலிருந்து மதுரையையோ ஏன் கன்னியாகுமரியைக்கூட எட்டிவிடுகின்றன இப்பேருந்துகள்.

சான்றாக, சென்னையிலிருந்து மதுரைக்கான சராசரி தூரம் 592 கிமீ என்றால், தனியார் பேருந்துகள் 7.30 மணிநேரத்துகுள்ளேயே  சென்றடைகின்றன. மாறாக அரசுப்பேருந்துகள் பத்து மணிநேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன.

எனில், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்? இந்தியாவில், சட்டப்படி நகர்ப்புறத்தில் சராசரி மணிக்கு 50 கிமீ வேகமாகமும்,புறநகரில் சராசரியாக 80கிமீ வேகமும் செல்லலாம். ஆனால், இந்த ஆம்னி பேருந்துகள் இவ்விதிகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. இதற்கு அவ்வப்போது நிகழும் விபத்துகளே சாட்சி.

இப்பேருந்துகள் சராசரியாக, மணிக்கு 110 கிமீ மேல் அல்லது திடீரென்று கட்டுக்குள் கொண்டுவரமுடியாத அளவு வேகத்தில்தான் தான் செல்கின்றன. அதோடு, அரசுப் பேருந்துகளைவிட இதில் கட்டணமும் பலமடங்கு அதிகம். சராசரியாக, 900ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் இக்கட்டணங்கள், பஸ்சைப் பொறுத்து 2000ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுவதுண்டு.

நேரம், வசதி போன்ற காரணங்களால் தனியார் பேருந்துகளை மக்கள் பெருமளவு விரும்புவதாகச் சொல்லப்பட்டாலும் தனியார் பேருந்துகளின் வருமானம் அதில் பயணம் செய்பவர்களனால் மட்டுமல்ல பொருட்கள் ஏற்றிச்செல்லப்படுவதாலும் வருகின்றது. சீட்டுக்குக் கீழாக இருக்கும் தளம் பொருட்களை வைக்கத்தான் என்றாலும் முறைகேடாக பல்வேறு பொருட்களை வைத்து ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில், வேதிப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் அடங்கும்.

இப்படி அளவுக்கதிகமான பாரத்துடன், கட்டுக்கடங்காத வேகத்தில் பேருந்துகள் ஓட்டிச் செல்லப்படும்போது விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதோடு, ஒரு பேருந்துக்கு ஒரே டிரைவர் மற்றும் கிளீனர்தான் இருக்கின்றனர். தனியார் பேருந்துகள் வந்த புதிதில் இரண்டு டிரைவர்கள் மாறி,மாறி ஓட்டுவதை கண்டிருக்கலாம். தற்போது நிலைமை மாறிவிட்டது. எவ்வளவு  நீண்ட தூர பயணமென்றாலும்,ஒரு வண்டிக்கு ஒரே டிரைவர் மற்றும் ஒரு கிளீனர்தான்.

பெரும்பாலான தனியார் பேருந்து டிரைவர்களுக்கு போதுமான ஓய்வு இல்லாத நிலையில்தான், தொடர்ந்து வண்டியோட்டிக்கொண்டு வருகிறார்கள். எப்படியும் சொன்ன நேரத்திற்குள்ளாக இலக்கை அடைந்துவிட விரட்டிப்பிடித்து ஓட்டுகிறார்கள். இதில் கொஞ்சம் அசந்தாலும் அது அடுத்தநாள் செய்தியாகிவிடுகிறது. சமீபத்தில், வேலூருக்கு அருகில் நிகழ்ந்த பொள்ளாச்சி பேருந்து விபத்து கூட இந்த காரணங்களை உள்ளடக்கியதுதான். கட்டணமும்  விபத்துக்கான சாத்தியங்களும் அதிகமென்றாலும்  ஏன் தனியார் பேருந்துகளையே நாடுகிறார்கள்?

முதலாவதாக, அரசுப்பேருந்துகள் இன்றைய தேவைக்கேற்றபடி எண்ணிக்கையில் இல்லை என்பது ஒரு காரணம். சமயங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை மாற்றுப்பேருந்துகளே. அதன் இயக்கமும் சரியாக இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குவதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுவதும் நாம் அறிவோம்.

எனில் தனியார் பேருந்துகள் மட்டும் நாளுக்குநாள் வளர்ந்து வருவது எங்ஙனம்?  தமிழக அரசுப் போக்குவரத்துறை பயணித்த தனியார்மய பாதையை சற்றுப் பார்ப்போம்.

2000-க்கு முன்புவரை தமிழகத்தில்  மட்டும் 21 போக்குவரத்து கழகங்கள் இருந்தன. இன்று அவற்றில் பல கழகங்கள் நாடு பயணித்த ‘முன்னேற்ற’ப்பாதையில் காணாமல் போய்விட்டன. 2002-இல், சென்னையிலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருந்த 12,905 பேருந்துகளில் 7,742 பேருந்துகளை அன்றைய அம்மா அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.

28 மாவட்டங்களில் பாதிக்குப்பாதியாக அரசுப் பேருந்துகளை குறைக்கப் போவதாகவும், ட்ரிப்புகளையும் குறைக்கப் போவதாகவும் அவற்றை தனியாருக்கு விடப்போவதாகவும் அறிவித்தது. இறுதியில் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு விடப்போவதில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூட்களை மட்டும் தனியாருக்கு விடப் போவதாகவும் இதனால் ஊரகப் பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

அக்டோபர் 2001த்தில் போனஸ் கேட்டு வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்களிடம் தனது உண்மையான முகத்தை காட்டியது ஜெயலலிதா அரசு. தீவிர பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் சென்ற ஆண்டைப் போல் போனசை தரமுடியாதென்றும் கூறி ஊழியர்களின் வயிற்றில் அடித்தது. அதோடு, பயிற்சி பெறாத டிரைவர்களையும்  தனியார் பேருந்துகள், வேன்களையும் களமிறக்கியது. வேறுவழியில்லாமல், போக்குவரத்துத் துறையினர் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இந்த தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பல எதிர்ப்புகள் கிளம்பியது நினைவிருக்கலாம்.  உண்மையில், இதில் எந்த பொருளாதார சிக்கலும் இல்லை.

போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்குதல் என்பது உலகவங்கி, மத்திய அரசு மற்றும் அதன்  தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமே. அதனை செயல்படுத்த ஜெயலலிதா போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்டார். இன்றும் அதில் பெரிய மாற்றமில்லை. பல ஆண்டுகளாக புதிய ஊழியர்களை நியமனம் செய்வதில்லை. பெரும்பாலோனார் ஒப்பந்த தொழிலாளர்களாகவே நீடிக்கின்றனர். அதோடு, போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் கிடையாது. இது, அரசே திட்டமிட்டு பொதுத்துறையை ஒழிக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்த தனியார்மயமாக்கம் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் குடும்பங்களையும், பொதுபோக்குவரத்தை நாடும் அன்றாடங்காய்ச்சிகளையும்தான் பெருமளவு பாதிக்கிறது. பலருக்கு விஆர்எஸ் திட்டங்கள் கொடுத்தாலும் அது நிரந்தர வேலை மற்றும் ஊதியம் ஆகாது. அது ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கை மட்டுமே. அதோடு, இது பொதுமக்களை பாரதூரமாக பாதிக்கும் ஒரு நடவடிக்கை.

தோராயமாக, 25 லட்சம் பள்ளி/கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்துகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் , உடல்நலக்குறைபாடு உள்ளோர், வயதானவர்கள் என்று பலருக்கும் பேருந்தில் சலுகைகள் உண்டு. தனியார் மயமாக்கல் இதனை பாதிப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் தொழில் முறை போட்டியால் சாலை விபத்துகளையும் அதிகரிக்க காரணமாகிறது. தனியார் பேருந்து முதலாளிகளுக்கு லாபம்தான் முக்கியமேயொழிய லாபமற்ற ரூட்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்வது நோக்கமல்ல. அதோடு பேருந்து கட்டணங்களும் அவ்வப்போது அதிகரிக்கும். போக்குவரத்துத்துறையை முற்றிலும் அரசே எடுத்து நடத்தினால் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை.

தனியார்பேருந்து முதலாளிகள் வருடா வருடம் புதிய புதிய பேருந்துகளை சொகுசான பேருந்துகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். எப்படி?

எ.கா-ஆக, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஒரு பேருந்தின் விவரம் கீழ்வருமாறு:

வரவு:

சராசரி இருக்கைகள்                 34

சராசரி கட்டணம் ஒரு நபருக்கு      ரூ.600

ஒரு நாள் சராசரி வருமானம்      ரூ.20,400

சுமை ஏற்றுவதால் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.10,000

சாராசரி நாள் வருமானம்             ரூ. 30,400

சராசரி மாத வருமானம்               ரூ.9,12,000

சராசரி ஆண்டு வருமானம்       ரூ.1,09,44,000

செலவு:

ஓட்டுநர் ஊதியம் ஒரு நாளைக்கு      ரூ.300

உதவியாளர் ஊதியம் ஒரு நாளைக்கு  ரூ.200

டீசல் செலவு                ரூ.5,100

பழுதுபார்க்கும் செலவு              ரூ.1,500

ஒரு நாள் சராசரி செலவு               ரூ.7,100

ஒரு மாத சராசரி செலவு              ரூ.2,13,000

ஒரு ஆண்டு சராசரி செலவு            ரூ.25,56,000

சராசரி பேருந்தின் மதிப்பு        ரூ.45,00,000

சராசரி பேருந்து பயண வரிச் செலவு   ரூ.20,00,000

சராசரி மொத்த செலவு           ரூ.90,56,000

சராசரி ஆண்டு லாபம் ரூ.18,88,000

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து இதே போல்  தனியாரிடம் விடப்பட்டது. அந்த மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை எம்.கே தாமஸின் Urban Bus Transport in India: Half a Century’s Stride புத்தகத்தில் அறியலாம்.  அரசாங்கத்தைவிட நல்ல சேவையை மக்களுக்கு அளிப்பதாக கூறி தனியாரிடம் ஒப்படைத்தாலும் இம்முடிவு எவ்வளவு தவறானது என்பதை அவர்கள் ஒரு கட்டத்தில் உணர்ந்தார்கள்.

தனியார்முதலாளிகள் லாபநோக்கோடு செயல்பட்டதில் பொதுமக்களின் பாதுகாப்பை கண்டு கொள்ளவில்லை. இந்த மாநிலங்களில் மக்கள் போக்குவரத்துத் துறையை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியதாக கூறுகிறார் அவர்.

எனில், தமிழ்நாட்டிலும் அது சாத்தியமே. போக்குவரத்து ஊழியர்களும், மக்களும் கரம் கோர்த்து போராடவேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அரசியலற்ற தொழிற்சங்கங்களாக பிரிந்து அடித்துக்கொள்ளாமல் ஊழியர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும், அதோடு, மக்களும் தங்களது பொதுச்சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தை தட்டிக் கேட்க வேண்டும். தனியார் பேருந்து முதலாளிகள் தங்களது லாபத்துக்காக பொதுமக்களின் உயிரை பணயம் வைப்பதை உணர்ந்து ஒன்றாக திரள வேண்டும்.

இந்த கோர விபத்துகளை, சுரண்டலை தடுக்க இது ஒன்றுதான் வழி.

______________________________________________________

– வினவு செய்தியாளர்கள்

– முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்:

தனியாரிடம் கல்வியை ஒப்படைத்த பின் தேசிய கல்வி நாள் கொண்டாடும் அரசின் வக்கிரம்!

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் கல்வியை அளிக்க வக்கற்ற அரசு, கல்வி அளிக்கும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்து கொள்ளையடிக்க ஏற்பாடு செய்த அரசு, தேசிய கல்வி நாள் கொண்டாடுவது வக்கிரமாக உள்ளது.  இவர்களுடைய கல்வி தனியார்மயத்தால் குழந்தை தொழிலாளியாக மாறி கொண்டு வரும் மாணவர்களின் எண்ணிக்கை, தினந்தோறும் செத்து கொண்டு இருக்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை என்பது பன்மடங்கு அதிகம்.

அவ்வாறு குழந்தையின் பள்ளி கட்டணத்தை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒரு தாயின் துயர முடிவு பற்றி வினவில் வந்த கட்டுரை இதோ:

******************************

கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்  சங்கீதா. பட்டதாரியான‌ சங்கீதா தன்னை விட படிப்பில் குறைந்த, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மராஜை சாதி கட்டுப்பாடுகளை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பணி புரியும் இடத்தில் இயல்பாக ஏற்பட்ட இக்காதலை திருமணம் வரை கொண்டு செல்வதற்கு அவர் கடுமையாகப் போராடினார்.

சமூகத்தில் அரதப் பழசாகிப் போன சாதி நம்பிக்கையைத் தூக்கி எறிந்தவருக்கு, தனியார்மயம் தாராளமயம் உருவாக்கிய புதிய சமூகச் சீர்குலைவுகளைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு எளிதாகக் கைவரவில்லை. தன்னுடைய கணவரைப் போல் தன்னுடைய மகன் படிப்பில் சோடை போய் விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய சக்தியை மீறி செலவு செய்து, அந்தப் பகுதியிலேயே சிறந்த பள்ளி என்று கூறப்படும் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில்   சேர்த்துள்ளார் .

அவரது மகன் U K G செல்லும் போது ரூ.12,000 /- கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொண்டு ரூ.5000 /- செலுத்தியுள்ளார். மீதிப் பணத்திற்கு பல இடங்களில் கடன் கேட்டு பார்த்துள்ளார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த சங்கீதா கடைசியாக‌ மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேல் தீ வைத்துக் கொண்டார்.  தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார் சங்கீதா.

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அடைந்த தீக்காயங்களுடன் தர்மராஜ்

ஒரு புறம் தனியார்மயம், தாராளமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் சாதாரண மக்களது மனதை ஊடுருவிச் சீரழிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்கள் பிரதிபலிக்கும் மேட்டுக்குடி வாழ்க்கையைத்தான் உண்மையான வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு, தானும் அதுபோல வாழத் தலைப்படும் முயற்சி பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களிடமும் ஊடுருவி  செல்வாக்கு செலுத்துகிறது. ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம், மறுபுறம் தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளை லாபவெறி.

பிரச்சனைக்குட்பட்ட பள்ளியில் நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் என்னவோ ரூ.3558 தான். ஆனால் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் தொகையோ ரூ.12000. கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் சுமார் 3  மடங்கு அதிகம். குழந்தைகளை கடத்திப் பணம் பறிக்க அவர்களைத் தேடிப்போய், கடத்திப் பணம் பறிக்க வேண்டும். ஆனால்  இந்தக் கல்விக் கொள்ளையர்களிடம் பெற்றோர்களே தமது குழந்தைகளை ஒப்படைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் இந்தக் கல்விக் கொள்ளையர்களின் கையில்தான் உள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர். இந்தக் கொள்ளையர்களின் உத்திரவுக்கு குரங்குகள் போல் ஆடுகின்றனர்.

இந்த நாட்டு மக்களின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ, புதிதாக அரசுப் பள்ளிகள் எதையும் கடந்த 20 ஆண்டுகளாகத்  திறக்கவில்லை. அப்படியே திறந்திருந்தாலும் அது இந்த நாட்டின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும் போது ஒன்றுமேயில்லை.

அரசியலமைப்புச்  சட்டம் 21-4 பிரிவின்படி இலவசக் கல்வி அளிக்க வேண்டிய அரசே உலக வங்கி , உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் உத்திரவின் பேரில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் வேலையையே கந்து வட்டி, லேவா தேவிக்காரர்களிடமும், கருப்புப் பண முதலைகளிடமும், பகற்கொள்ளையர்களிடமும் ஒப்படைத்து விட்டது.

இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ள சில சில்லறை உரிமைகள் கூட  உலகம் முழுவதும் அதற்கு முன் நடந்த‌ மக்கள் போராட்டத்தின் விளைவே ஆகும். மக்களின் போராட்ட குணம் இன்று நீர்த்துப் போய்விட்ட படியால் மக்களின் எதிரிகள், பகற் கொள்ளையர்களின் கை மேலோங்கியுள்ளது.

மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள, மக்களை ஒன்று திரட்டிப் போராடும் முயற்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கல்விக் கட்டணத்திற்கு  எதிராகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டிய பெர்க்ஸ் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளனர்.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடத்தும் கல்விக் கட்டணக் கொள்ளைக்கெதிராகவும், கோவிந்தராசன் கமிட்டியின் கட்டணத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் கடந்த 20.05.2011  அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!ஆர்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்

ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுவான‌ ஜனநாயக ஆர்வல‌ர்களும் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் அபு தாகிர் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார் .

சங்கீதாவின் கொலைக்கு காரணமான பள்ளிக் கொள்ளையர்களின் இலாப வெறியை கோவை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களிடம் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தத்தமது பகுதி தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்து புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சங்கீதாவின் மரணம் அந்த வகையில் ஒரு தீப்பொறியாக பயன்பட்டிருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்:

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 கல்வி உரிமையை நிலைநாட்டுகிறதா? – வே. வசந்தி தேவி

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா? 

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!