• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,819 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

விடுதலைப் போரின் வீர மரபு உங்களுக்கு தெரியுமா?

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

நன்றி: புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006

முதல் பதிவு: வினவு

 

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

********************************

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

காந்திக்கு தேசத் தந்தை’ பட்டம் தந்ததே போலி கம்யூனிஸ்டுகள்தான் – ஏ.பி.பரதன்

இந்தியப்புரட்சிக்கு துரோகம் செய்து காந்தி என்ற துரோகபதருக்கு ஒளிவட்டம் காட்டியது நீங்கள் தான் என்று அனைவருக்கும் தெரிந்ததை இன்று ஏ.பி.பரதன் வெளிப்படையாக அறிவித்து விட்டார். காந்தியை புரட்சியாளராக மாற்ற நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களை’ மறக்க முடியுமா என்ன?. மொத்தத்தில் நாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் தான் என்று ஒப்பு கொண்டு விட்டீர்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..

காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை!

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு

1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை
3.கருவாகி உருவான கதை

4.விசுவாச நாய்கள்

5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

6.சாத்வீகச் சதிச் செயல்

7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

8.நிலப்பிரபுக்களின் தாசன்

9.­மூக்கில் நாறிய சுயராச்சியம்!

10.அகிம்சையின் நோக்கம்

11.மகான் அல்ல; மக்கள் விரோதி!

12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை

14.மக்கள் முதுகில் குத்திய காந்தி

15.“சுதந்திரம்’ ஒரு கபட நாடகமே!

16.குழப்பவாதிகள்

17.படுபிற்போக்காளர்கள்

18.இந்து சநாதனி

19.சர்வாதிகாரிகள்

20.ரௌடிக் கும்பல்

21.“வெள்ளையனே வெளியேறு’ நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

22.மேலும் சில ஆதாரங்கள்

காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை!

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார்.

 அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். “பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.

ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற “அற்புதமான’ கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் “சின்ன சின்ன ஆசைகளை’க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட “பர்சானியா’ திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் “மகிமையை’, “உலகப் பொருளாதார மன்ற’த்தில் வியந்தோதுகிறார்.

காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான “ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.

காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.

****

காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில், “”எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன” என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் “பொறுப்பை’ ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.

அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.

 

“காந்தியும் அவரது காலங்களும்’ என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார். “”புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.”

தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி “வன்முறை’ என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.

இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம், “”இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்” என விளக்கமளித்தார்.

முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு, “”போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது” என நியாயம் கற்பித்தார்.

பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் “யங் இந்தியா’வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு, “”போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.

“”சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்” என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.

இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.

1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் “தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல’ என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.

காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது “இளம் அரசியல் தொண்டர்களுக்கு’ எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.

1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக “முழுச் சுதந்திரமே இலட்சியம்’ என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில், “”என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். “”நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது” எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு “தர்மசங்கடத்தை’ ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் “தண்டி யாத்திரை’.

ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? “தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது’ என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, “பறிமுதல்’ என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், “”உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்” என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, “தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்’ என்றார் காந்தி.

சட்ட மறுப்பு இயக்கத்தை “இரகசியம்’ சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது, “”ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது” என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் “முகமூடி’ தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான “எதிரி’ கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய “அரசியல் பரிசோதனை’களுக்கு “சோதனைப் பிராணி’களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம், “”போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை” என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1942இல் யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி “வெள்ளையனே வெளியேறு’ முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

“காங்கிரசு சோசலிஸ்டுகள்’தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.

தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு “மக்கள்திரள் அரசியல் போராட்டம்’ என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.

பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார். “”அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.” பின்னர், “”பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?” எனக் கேட்டபொழுது “”அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது” என்றார் காந்தி.

காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி “”நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்” என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே, “”மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்” என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, “காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை’ என அவருக்கே கடிதம் எழுதினார். “”காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்” எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.

இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.

அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், “காந்தி’ எனும் ஊதிப் பெருக்கப்படும் “சோளக்காட்டுப் பொம்மை’யின் சுருக்கமான அரசியல் வரலாறு.

“”என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?” என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், “வாடிக்கையாளரே நமது எசமானர்’ என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.

 நன்றி: புதிய கலாச்சாரம்