• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 218,814 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

கூடங்குளம் அணு உலையினால் மின்சாரம் கிடைத்து அதனால் மின்வெட்டு போய் விடும் என்ற அரசு மற்றும் தினமலர்(ம்) போன்ற ஊடகங்களின் நச்சுப் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்ட பாடல்.

*******************************

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கூடங்குளம் இயங்கினாக்க மறைந்திடுமா பவரு கட்டு…!

இதுக்குமுன்னே ஏண்டா இல்ல இத்தன நேரம் பவரு கட்டு…!

அந்த அணு உலையை இயக்குறதுக்கு அரசு போடும் சாட்டுக்கட்டு!

அந்த ஆய்வு குழு நாலுபேரும் அம்மாவோட நாடக செட்டு!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

சிறுதொழில் விவசாயம் பாதி நாலு மின்வெட்டு

பென்சருக்கும் ஹுண்டாய்க்கும் பல்லாயிரம் மெகாவாட்டு

அந்த அணு உலையை இயைக்கி புட்டா நிக்காதாம் பம்புசெட்டு

சொல்லுற ஆர்-எஸ்-எஸ்ஸும் காங்கிரசும் பன்னாட்டுக்கு மைக்கு செட்டு….

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

 

உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…!

சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு

அட மாப்பிள்ளைகு எய்ட்ஸ்ன்னு மனவரையில தெரிஞ்சுட்டு

நீ மாலபோட சொல்லுவியா… நீ பெத்த மகளுக்கு….!

 

பவரு கட்டு; பவரு கட்டு; பவரு கட்டு – அந்த

பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

கோரஸ்:  அந்த பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு..!

****************

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

கனவு காண சொன்னாரு.. கலாம் சொன்னாரு…!

குடிக்க கஞ்சி கூட இல்லாத நம் நாட்டில் அப்துல் கலாம் என்ற கோமாளி தினந்தோறும் ‘இளைஞர்களே!.. கனவு கானுங்க… கனவு கானுங்க…’ என கூவிக்கொண்டும், 123 அணுசக்தி ஒப்பந்தம் முதல் கூடங்குளம் வரை இந்த மக்கள் விரோத அரசின் ஊதுகுழலாக நின்று ஆதரித்து பேசிவருவதையும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் சென்னை கிளை புமாஇமு தோழர்கள் அம்பலப்படுத்தி பாடிய பாடல் இதோ:

தொடர்புடைய பதிவுகள்:

அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

 

எது தீவிரவாதம் ? யார் தீவிரவாதிகள்?

த்திரிகை – சினிமா – ஓட்டுக்கட்சிகள் என்ற சிமெண்ட் – மணல் – ஜல்லிக் கலவை இடையறாது உருண்டு கொண்டே இருக்கிறது. எது தீவிரவாதம், யார் தீவிரவாதிகள் என்பவை குறித்த பாசிசத்தன்மை கொண்ட தேசவெறிக் கருத்தை, கான்கிரீட்டுக்குரிய உறுதியுடன் மக்கள் மனதில் உருவாக்கிருக்கிறது. இந்தப் பொய்மையை அம்பலப்படுத்தும் விதமாக  புதிய கலாச்சாரம் இதழில் வந்த “எது  தீவரவாதம்?” என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
.
கட்டுரையை கிழே க்ளிக் செய்து படிக்கவும்
******************************************************************
.
.
.
.
.
.
நன்றி ஜீலை 2000 புதிய கலாச்சாரம்
நன்றி: போர்முரசு

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

 

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும்

உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

விலை: ரூ. 5

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
பேச : 044-28412367

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ்.

_

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே,  மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.

அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.  லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.

இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன.  யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து  ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.

அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி  வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?

ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதற்கெல்லாம்  டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.

போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.

போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!

______________________________________________________

–    ஜான்சி

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

தொடர்புடைய பதிவுகள்

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.

62ஆவது சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வழி சிந்திக்கப் பழகியிருக்கும் மக்களும் பெட்டிக்கடையில் துளிர்விடும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்கின்றனர். பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் அது கண்டிப்பாக அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்கு. குழந்தைகளுக்கோ அது மிட்டாய் கிடைக்கும் தினம். ஊடகங்களில் சுதந்திர தினத்திற்காக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தேசியப் பெருமிதத்தின் முகமூடியை வைத்து முத்திரைப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர தினத்தின் அருமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வானொலியிலும், வானொளியிலும் ரஹ்மானின் வந்தேமாதரம் கீறல் விழாமல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர். எல்.சி.டி தொலைக்காட்சி துல்லியமாகத் தெரியும் சந்தையில்தான் வானொலிப் பெட்டி கூட வாங்க வழியில்லாத மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதிகரித்துவரும் ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பில் சைக்கிள்களின் விற்பனை குறையவில்லை. கணினிப் புழக்கம் கூடிவரும் நாளில் கால்குலேட்டர் கூட இல்லாமல் கைக்கணக்கு போடுபவர்கள்தான் அதிகம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களை அரசின் உதவியுடன் வளைத்துப்போடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கோ குண்டடிபட்டுச் சாவதற்கு சுதந்திரம். கச்சா எண்ணெயின் விலை உயர்வை வைத்து உள்நாட்டில் கொள்ளையடிப்பதற்கு அம்பானிக்கு சுதந்திரம். வாங்கிய கந்துவட்டிக் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வது விவசாயிகளுக்கு இருக்கும் சுதந்திரம். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறுவது உரத்தொழிற்சாலைகளின் சுதந்திரம். அதிக விலையில்கூட உரங்கள் கிடைக்காமல் அல்லாடுவது விவசாயிகளின் சுதந்திரம். கல்வியை வணிகமாக மாற்றி சுயநிதிக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் எழுத்தறிவிலிகளாக இருப்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம்.

அப்பல்லோ முதலான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு மேட்டுக்குடியினருக்கு சுதந்திரம். அரசு மருத்துவமனைகளில் எந்த வசதியுமில்லாமல் சித்திரவதைப் படுவது சாதாரண மக்களின் சுதந்திரம். அரசிடமிருந்து எல்லாச் சலுகைகளையும் பெற்று தொழில் துவங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுதந்திரம். அதே நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளி என்ற பெயரில் அடிமையாக வேலைசெய்வது தொழிலாளர்களின் சுதந்திரம். பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடைவதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகர்களுக்கும் சுதந்திரம். தமது ஓய்வூதியத்தை சிட்பண்ட்டில் போட்டு ஏமாறுவதில் நடுத்தர வர்க்கத்திற்கு சுதந்திரம். விண்ணைத் தொடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வினால் கொள்ளை இலாபம் பார்ப்பதில் முதலாளிகளுக்கு சுதந்திரம். ஒண்டுக் குடித்தனத்தில் கூட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படுவது பெரும்பான்மை மக்களின் சுதந்திரம். உயிர்காக்கும் மருந்துகளை பலமடங்கு விலையில் விற்பதற்கு மருந்து நிறுவனங்களுக்கு சுதந்திரம். மருந்து வாங்க முடியாமல் உயிரைத் துறப்பது ஏழை மக்களின் சுதந்திரம்.

இந்த முரண்பாடுகளின் அளவுகோலே உண்மையான சுதந்திரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் போது நாட்டு மக்களின் வாழ்நிலையோ சுதந்திரத்தின் பொருளை விளக்குகிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவின் ஆட்சியதிகாரம் தரகு முதலாளிகளிடம் மாற்றித் தரப்பட்டது. இந்த அதிகார மாற்றத்தையே சுதந்திரம் என்று கொண்டாடுவது ஏமாளித்தனமில்லையா?

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தேசபக்தி பெருமிதம் கொஞ்சம் சுருதி கூடியிருப்பதற்கு காரணம் அபினவ் பிந்த்ரா வாங்கிய தங்கப்பதக்கம். துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அபினவ் தங்கம் வென்ற அன்று தேசபக்தி தனது உச்சத்தைத் தொட்டது. செல்பேசியின் குறுஞ்செய்திகள் இலட்சக்கணக்கில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களில் அபினவ் கதாநாயகனாக வலம் வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம், 112 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்று புள்ளிவிவரங்களின் படியும் அபினவ் வியந்தோதப்பட்டார். அரசாங்கங்கள் கோடிகளிலும் இலட்சங்களிலும் பரிசுப் பணத்தை அள்ளி வழங்கின. முத்தாய்ப்பாக அபினவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா 200 கோடி ரூபாய் மதிப்பில் டேராடூனில் கட்டிவரும் அபினவ் இன் எனும் நட்சத்திர ஓட்டலை மகனுக்கு பரிசாக வழங்கினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற எவருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை காஸ்ட்லியான பரிசு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அபினவோடு போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்ற சீனவீரரையும், வெண்கலம் வென்ற பின்லாந்து வீரரையும் எவரும் சீண்டியிருக்க மாட்டார்கள். அல்லது இந்தப் போட்டிக்காக அபினவ் செலவழித்த தொகையினை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அபினவ் பயிற்சி எடுப்பதற்காக தனது மாளிகை வீட்டிலேயே குளிர்பதன வசதியோடு ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கூடத்தை தந்தை பிந்த்ரா கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்திய அரசு அளித்த பயிற்சியாளர் போதாது என்று வெளிநாட்டு பயிற்சியாளரை தனது சொந்தச் செலவில் அபினவ் அமர்த்திக்கொண்டார். இதுபோக மாதக்கணக்கில் வெளிநாடு சென்றும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஆக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கே அபினவுக்கு சில கோடிகள் தேவைப்பட்டதும், அந்தக் கோடிகளைப் பெறும் வசதி அவரது பின்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இறைச்சியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, ஓட்டல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு, என்று பல தொழில்களை தந்தை பிந்த்ரா நடத்தி வருகிறார். பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் இருக்கும் அபினவின் மாளிகையில் மட்டும் 100 பணியாட்கள் வேலை செய்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து வீடியோ கேம்ஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அபினவுக்கு திறமையின் காரணமாக மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. அவரது முதலாளியப் பின்னணிதான் தங்கம் வாங்கித் தந்திருக்கிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பணக்காரர்களின் பிள்ளைகள்தான் விளையாட்டிலும், அரசியலிலும், தொழில் நடத்துவதிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் துணைக் காப்டனான யுவாராஜ் சிங்கும் இதைப்பொன்றதொரு பின்னணியைச் சேர்ந்தவர்தான். இவரது தந்தை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இம்மாநிலங்களைச் சேர்ந்த இம்மேட்டுக்குடியினர் சாதி ஆதிக்கத்திற்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். எந்த அரசியல் கட்சியானாலும் இவர்களைச் சுற்றியே செல்வாக்கைத் திரட்ட முடியும். இவர்களது பண்ணைவீடுகளின் வரவேற்பறைகளில் இன்றும் துப்பாக்கிகள் கௌரவச் சின்னமாய் அலங்கரிக்கும். அந்தக்காலத்து ஜமீன்தார்களின் இளவல்கள் வேட்டையாடி தமது வீரத்தையும், புகழையும் வெளிப்படுத்தினார்கள். இப்போது கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டு தமது குடும்பங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர். பார்க்க சாது போல இருக்கும் அபினவ் தனது சிறிய வயதில் வேலைக்காரரின் தலையில் பாட்டிலை வைத்து தந்தையின் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவாராம். குறி தவறி அந்த தொழிலாளி இறந்திருந்தாலும் அபினவ் ஒரு கொலையாளியாக தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். பணக்காரர்களின் வீட்டில் இவையெல்லாம் சகஜம்தானே!

வேலையாளின் உயிரைப் பணயம் வைத்த அபினவைக் கண்டிக்காத பெற்றோர் அவனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அறிந்து கொண்டு ஊக்குவித்தனராம். இதுதான் ஒரு மேட்டுக்குடி குலக்கொழுந்து தங்கம் வென்ற கதை. இதை இந்தியாவின் பெருமிதம், நூறுகோடி மக்களின் சாதனை என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடுவதில் பயனில்லை. அபினவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பும், வசதிகளும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? உலகமயமாக்கத்தின் விளைவால் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதும் அதிகரித்து வரும் வேளையில் விளையாட்டு மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அபினவின் வெற்றி இந்தியாவில் விளையாட்டு ஆர்வத்தை உற்சாகப்படுத்தும் என்று கூறுகிறார்களே, அதன்படி ஒரு சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் துப்பாக்கி சுடும் விளையாட்டில் விரும்பினாலும் ஈடுபட முடியுமா?

இந்தியாவில் விளையாட்டு உணர்வு கிரிக்கெட்டினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் வேகமாகக் கொல்லப்பட்டு வருகிறது. கால்பந்து முதலான விளையாட்டுகளில் உள்ளூர் போட்டியானாலும், உலகப் போட்டியானாலும் விதிமுறைகள் மாறுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் கிளப் கலாச்சாரம் விளையாட்டை வர்த்தகமாக மாற்றியிருந்தாலும் ஆட்டத்திறன் வளர்வதில் குறைவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் என்று வைத்துக்கொண்டு ஆட்டத்திற்கொரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள். இது ஆட்டத்தை வளர்ப்பதற்கல்ல, ரசிகரின் மேலோட்டமான வெறியை வளர்ப்பதற்கே பயன்படுகிறது. நொறுக்குத் தீனியைச் சுவைப்பது போல கிரிக்கெட்டை ரசிப்பதும் மாறிவிட்டது. வர்த்தகத்தினால் ஒரு விளையாட்டு அழிக்கப்பட்டது என்றால் அது கிரிக்கெட்டிற்கு மட்டும் முதன்மையாய்ப் பொருந்தும். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜொலித்தால் மட்டுமே தங்களது வருமானம் அதிகரிக்கும் என்பதால் வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். விளம்பரங்களில் நடித்த நேரம் போக ஆட்டத்தில் கண்டபடி அடித்து ஆடவேண்டிய நிர்ப்பந்தத்தில் வீரர்கள் இருக்கும்போது யார் திறமை குறித்து கவலைப்படப் போகிறார்கள்?

70களில் கிளைவ் லாய்டு தலைமையில் ஆடிய உலகின் கனவு அணி ஆட்டத்திறமையெல்லாம் இனி காண்பதற்கில்லை. பழம்பெருசுகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மாகமித்யங்களைக் கதைக்கும்போது நுகர்வு கலாச்சார இளைய தலைமுறையோ 20 ஓவர் கிரிக்கெட்டின் பின்னால் அலறியவாறு ஓடுகிறது. முதலாளிகளால் கிரிக்கெட் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிரிக்கெட்டின் வெறிக் காய்ச்சலால் மற்ற விளையாட்டுக்களும் இந்தியாவில் அழிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்திய ஹாக்கி அணி இடம்பெறவில்லை என்பது சிலரின் கவலையாக இருக்கிறது. இருபது வருடங்களாக அதிகார வர்க்கத்தின் ஊழல் கலந்த அலட்சியத்தாலும், கிரிக்கெட்டுக்கு கொட்டி கொடுக்கும் முதலாளிகள் ஹாக்கியை கண்டு கொள்ளாததாலும் இந்த விளையாட்டு தேசிய விளையாட்டு என்ற பெருமையை என்றோ இழந்துவிட்டது. திறமை அடிப்படையில் டெண்டுல்கரை விட ஹாக்கி வீர்ர் தன்ராஜ் பிள்ளை பல மடங்கு உயர்ந்தவர். முன்கள ஆட்டத்தில் சிறுத்தைபோல சீறுவதாக இருக்கட்டும், நூறு மீட்டர் தூரத்திலும் கழுகுப் பார்வையுடன் பந்தை சகவீரருக்கு கைமாற்றிக் கொடுப்பதிலும், பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், மின்னல் வேகத்தில் குடைந்து செல்வதிலும் மொத்தத்தில் அவர் ஹாக்கியின் ஒரு கவிதை. ஆட்டத்தில் அவர் முன்னணியில் இருந்தபோது பல வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். இந்த வீரரை இந்தியா எப்படி நடத்தியது?

டெண்டுல்கர் மேன்ஆப்திமேட்ச் விருதுக்காக உலகின் விலையுர்ந்த காரைப் பரிசாகப் பெறும்போது, தன்ராஜுக்கு ஒரு சைக்கிள் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது. டெண்டுல்கருக்கு விளம்பரங்களின் வழி கோடிகளில் வருமானம் கொட்டிய போது தன்ராஜை முதலாளிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதில் ஹாக்கி என்பதால் மட்டும் பிரச்சினையில்லை. தோற்றத்திலும், பேச்சிலும் தன்ராஜ் சாதரண மனிதராகவே காட்சியளிப்பார். விளம்பரங்களில் நட்சத்திர வீரர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் மேட்டுக்குடி அழகியல் டென்டுல்கரிடமும், சானியா மிர்சாவிடமும் இருக்கிறது என்றால் தன்ராஜுக்கும், பி.டி உஷாவுக்கும் அது இல்லை. ஆக ஒரு விளையாட்டு வீரர் நட்சத்திரமாக மாறுவதற்கு அவரது திறமை மட்டுமல்ல, விளம்பரங்களில் அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதும் சேர்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.

இவையெல்லாம் கூட பிரச்சினையல்ல, தன்ராஜ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவர் முன்வைத்த ஆலோசனைகளுக்காக போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாபில் அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொன்று குவித்த கொலைகார போலீசுப் படைக்கு தலைமை வகித்த கே.பி.எஸ் கில் என்பவர்தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். வீரர்களை அடிமைகளாக நடத்தியதிலும், ஊழலின் மூலம் சில வீர்ர்களைச் சேர்த்ததிலும் இந்த சம்மேளனம் புகழ்பெற்றது. தற்போது இவர்களின் ஊழல் அம்பலமாகி சம்மேளனம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நட்டம்? தன்ராஜின் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டியது நடக்காமல் போனதுதான். இப்படியெல்லாம் அவமானப்பட்டபோதும் தன்ராஜ் இன்னமும் விளையாட்டை நேசிக்கிறார். தன்னைப் போலச் சிறந்த வீரர்களை உருவாக்கும் முகமாக ஒரு அகாடமியை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய விளையாட்டின் தலை சிறந்த வீரருக்கே இதுதான் கதி எனும்போது மற்ற விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

விளையாட்டின் உணர்ச்சியை வர்த்தகம் உறிஞ்சிக்கொண்ட பின் என்ன மிஞ்சும்? காரியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் நடுத்தர வர்க்கம் தனது வாரிசுகளை டென்னீசிலும், கிரிக்கெட்டிலும், நீச்சலிலும், சதுரங்க ஆட்டத்திலும் வளர்ப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மாயையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தாண்டி இதனால் விளையாட்டு ஒன்றும் வளரப் போவதில்லை. இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டுமென்றால் அது இன்றைய விளையாட்டை ஆக்கிரமித்திருக்கும் மேட்டுக்குடியினரால் நடக்கப் போவதில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் உழைக்கும் சிறார்களிடமிருந்தே அந்த வீரர்கள் தோன்ற முடியும். கடற்கரை மீனவக் கிராமங்களிலிருந்து நீச்சல் வீரர்களும், மலையில் வசிக்கும் மக்களிடமிருந்து தொலைதூர ஓட்டப் பந்தய வீரர்களும், சுமைதூக்கும் தொழிலாளிகளிடமிருந்து பளுதூக்கும் வீரர்களும், கால்பந்தை நேசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறந்த கால்பந்து வீரர்களும், அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்குப் பெண்களை அளிக்கும் கேரளத்திலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளும் தோன்ற முடியாதா என்ன?

ஆயினும் இன்றைய சமூக அமைப்பு அதை சாத்தியப்படுத்தப் போவதில்லை. கல்வியிலும், விவசாயத்திலும், தொழிலிலும், சுகாதாரத்திலும் அப்புறப் படுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடமிருந்து வாழ்வதற்கே வழியில்லாத போது வீரர்கள் மட்டும் எப்படித் தோன்ற முடியும்? ஆம் விளையாட்டில் ஒரு புரட்சி வரவேண்டுமென்றால் அது முதலில் அரசியலில் இருந்துதான் தொடங்கமுடியும். இந்தப் பார்வை இந்தியாவுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலகைச் சேர்ந்த எல்லா ஏழை நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக மக்களை விளையாட்டின் பெயரால் ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக், உண்மையில் விளையாட்டு உணர்ச்சியையும், சர்வதேச உணர்வையும் வளர்க்கிறதா என்ன? நாளொரு வண்ணம் ஈராக்கில் குண்டு போட்டு அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் கொல்லும் நேரத்தில் அதிபர் புஷ் பெய்ஜிங்கில் அமெரிக்க விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார். ஒரு வீரர் மக்களைக் கொல்வதற்காக துப்பாக்கியைச் சுடுகிறார். மற்றொரு வீர்ர் தங்கப்பதக்கத்திற்காகச் சுடுகிறார். இதில் சர்வதேச உணர்வு எப்படி வளர முடியும்? நாடுகளை புவியியலின் எல்லைக் கோடு மட்டும் பிரிக்கவில்லை, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு அரசியல்தான் உண்மையில் நாடுகளைப் பல பிரிவினைகளாக வேறுபடுத்துகின்றது. வல்லரசு நாடுகளின் இராணுவ வலிமையை அவற்றின் ஆக்கிரமிப்பு வெளிப்படுத்தும்போது சமூக வலிமையை ஒலிம்பிக் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் கௌரவத்தை நிலைநாட்டுவதுதான் ஒலிம்பிக்கின் நோக்கம் என்றால் அது மிகையல்ல. ஹிட்லர் காலத்திலிருந்து இன்றைய புஷ் காலம் வரையிலும் ஒலிம்பிக் வரலாறு அதைத்தான் வழிமொழிகிறது.

ஒலிம்பிக்கின் சர்வதேச உணர்வு இதுவாக இருக்கும்போது விளையாட்டு உணர்வு மட்டும் தனியாக வளராது. பெரும் நிறுவனங்களின் வர்த்தக வலிமையில்தான் ஒலிம்பிக் ஜோதி பிரகாசிக்கிறது. வெற்றி பெறும் வீரர்கள் மனித உடலின் எல்லையற்ற ஆற்றலை வரும் சந்ததியினருக்கு கைமாற்றித் தருவதில் உவகை கொள்வதில்லை. கையெழுத்திடும் விளம்பர ஒப்பந்தங்கள்தான் அவர்களின் இலக்கு. இதன் மூலம் வீரர்கள் விளம்பர மாடல்களாகப் பரிணமிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அறிமுகமாகும் புதிய தலைமுறை வீரர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படும் போது விளையாட்டின் நோக்கம் நமத்துப் போகிறது. ஆகவே மேற்கத்திய நாடுகளில்கூட விளையாட்டு உணர்வினால் வீரர்கள் தோன்றுவதில்லை. வீரர்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே கண்டு கொள்வதும் பயிற்சி கொடுப்பதும் அங்கே தனியொரு தொழிலாக வளர்ந்திருக்கிறது.

இது சாதாரண மக்கள் விளையாட்டில் ஈடுபடுவதை அச்சுறுத்தும் அளவுக்கு விசுவரூபமெடுத்திருக்கிறது. இங்கே அபினவ் பிந்த்ரா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் அங்கே சாதாரணம். பந்தயக் குதிரைகளை வளர்ப்பது போல மேற்குலகின் வீரர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஒரு வீரனின் பலம், பலவீனங்கள், தசையின் சக்தி, குறிப்பிட்ட விளையாட்டுக்கு தேவைப்படும் சதையாற்றல், உடம்பின் நெளிவு சுளிவுகள், விளையாடும் போது அதில் ஏற்படும் மாற்றம், எடுக்கவேண்டிய உணவு, கலோரியின் அளவு, சிந்தனையின் கவனத் திறன், அத்தனையும் கணினி, உளவியல், உடலியல், நரம்பியல் முதலான நிபுணர்களின் உதவி கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகளின் வீரர்களை மனிதர்கள் என்று அழைப்பதை விட வார்க்கப்பட்ட இயந்திரங்கள் என்று சொல்லலாம். இதனால் ஒரு வீரன் வெற்றி பெறுவான் என்பதைக் களத்தில் நடக்கும் போட்டி தீர்மானிப்பதை விட முன்கூட்டியே அறிவியில் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது எனலாம். இத்தகைய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்காது எனும்போது விளையாட்டு உணர்வு மட்டும் எல்லோரிடமும் எப்படி வளரும்?

ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றியே ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்து வருகிறார்கள். சின்னஞ்சிறு நாடான கியுபா இதை ஒரு சமூகச் சாதனையாகவே சாதித்திருக்கிறது. அங்கே சமூகமயமாக்கப்பட்ட விளையாட்டிலிருந்து வீரர்கள் தோன்றுகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமை இல்லாமலேயே குத்துச் சண்டை, வாலிபால், தடகளம் முதலியவற்றில் கியூபா வீரர்கள் சாதித்திருக்கின்றனர். அமெரிக்காவின் வர்த்தக மல்யுத்த நிறுவனங்கள் கியூபாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களை விலைக்கு வாங்க முயன்ற போது அவ்வீரர்கள் அதை மறுத்திருக்கின்றனர். இத்தகைய முயற்சிகள்தான் மனித உடலின் ஆற்றலை விளையாட்டில் காண்பிக்க முடியும் என்பதோடு மனித குலம் முழுவதையும் விளையாட்டு உணர்வோடு சமூக உணர்வையும் ஒன்று கலப்பதைச் சாத்தியப்படுத்தும். உலகின் நிகழ்ச்சி நிரல் வல்லரசு நாடுகளின் கையிலிருக்கும்போது இந்த உண்மையான விளையாட்டு உணர்ச்சி தோன்றப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியிலிருந்துதான் புரட்சி தோன்ற முடியும் என்ற அரசியல் உண்மை விளையாட்டிற்கும் பொருந்தும்.

அதுவரை ஒலிம்பிக்கை நாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. இந்தியா பதக்கம் பெறாதது குறித்து வருத்தப்படவும் தேவையில்லை.

_______________________________

முதல் பதிவு: வினவு

தொடர்புடைய பதிவுகள்

கல்விப் பிச்சை வள்ளல் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!

ழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” என்றெல்லாம் வாழையடி வாழையாக ஊட்டப்பட்டிருக்கும் “உன்னால் முடியும் தம்பி” டைப்பில் கேட்பார்கள். ஆனாலும் அப்படி கேட்பவர்கள் கொஞ்சம் அருள் கூர்ந்து இதை படித்து விட்டு அந்தக் கேள்விகள் சரியா என்று சொல்லட்டும்.

தமிழகத்தை மொக்கை தேசமாக்கி வரும் சினிமா, தொலைக்காட்சி, சீரியல்கள் போக நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு அயிட்டம் அப்துல் கலாம் டைப் தன்னம்பிக்கை போதை கலாச்சாரம். இதை அன்று அமெரிக்க ரிடர்ன் உதயமூர்த்தி துவங்கி வைத்தார். பின்னர் அப்துல்கலாம் அதை நவீன ஊடக வசதி, ஜனாதிபதி அதிகார வசதி மூலம் தமிழகமெங்கும் விஷமரம் போல வளர்த்தெடுத்தார்.

பள்ளி நிர்வாகிகளது கட்டளைக்காக திரட்டப்பட்ட அந்த அப்பாவிக் குழந்தைகளிடம் “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது” என தேசிய கீத மொக்கையாக்கினார். இன்றைக்கு இருவரும் மார்க்கெட்டில் இல்லையென்றாலும் இந்த சரக்குதான் பத்திரிகை, ஊடகங்கள், புத்தகக் கண்காட்சி எல்லாவற்றிலும் விலை போகிற சரக்கு. அதுதான் இது “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சாதிப்பீர்கள்!”.

உழைத்தால் வெற்றியெனும் இந்த தாராக மந்திரம் மேற்கத்திய நாடுகளின் நடுத்தர வர்க்கத்தை, அரசியல் ரீதியாக மொன்னையாக்குவதற்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு போராடாமல் இருப்பதற்கும், வாழ்க்கை தோல்விகளுக்கு தன்னையே காரணமெனக் கற்பித்துக் கொள்ளவும், நுகர்வு கலாச்சாரத்தின் மறுபக்கமாக, சுயநலத்தை ஒரு ஒழுக்கம் போல பின்பற்றுவதற்காகவும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு மோசடிச் சரக்காகும். அப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கு போதனைகள் கடந்த பத்திருபது ஆண்டுகளாக தமிழ் வாரப் பத்திரிகைகளில் போதையூட்டும் பல தொடர்களாக வந்திருக்கின்றன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏழைகள் அதிகரிப்பது போல நடுத்தர வர்க்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்கேற்ப இந்த சரக்கும் சந்தையில் மிகுந்த கிராக்கியைக் கொண்டிருக்கிறது. இந்த ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகளின் வாழ்க்கையை ஜிகினா வார்த்தையில் செட்டப்போடு தயாரித்துதான் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் படையெடுக்கின்றன.

இக்காலச் சூழலில்தான் எஸ்.ஆர்.எம் எனும் பிரம்மாண்டமான கார்ப்பரேட் உயர்கல்வி தொழிலை நடத்தி வரும் பச்சமுத்து, “புதிய தலைமுறை” பத்திரிகையை ஆரம்பித்தார். தனது தொழிலை இடையூறின்றி ஒரு சேஃப்டியோடு நடத்துவதற்காக இந்த தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வைத்தார். அதற்காக மண்வெட்டி விவசாயி தோற்றத்தில், கமாண்டோ படத்தில் ஆர்னால்டு துப்பாக்கியுடன் வருவது போல போஸ் கொடுத்து வெளியிடப்பட்ட சுவரொட்டியை நீங்களும் பார்த்து நகைத்திருப்பீர்கள். தொழில், ஊடகம், கட்சி என்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தமது சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பது இப்போதைய முதலாளிகளின் பாணியாகும். பச்சமுத்துவும் அப்படித்தான்.

புதிய தலைமுறை பத்திரிகையின் முழுமுதல் கொள்கையே இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ மேட்டர்தான். ஆரம்பத்தில் அட்டை டூ அட்டை இந்த அப்துல் கலாம் டைப் மொக்கையையே போட்டு வதைத்தார்கள். அதனாலேயே ஓரிரண்டு இதழ் வாங்கிவிட்டு நிறுத்தி விட்டேன். அச்சமயம் ஒரு நண்பர் கூட ” இந்த இதழில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ச நாளுல மொக்கைச் சக்கரவர்த்தியாகி விடுவாங்க” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

தற்போது இந்த தன்னம்பிக்கை சரக்கோடு, அரசியல், பரபரப்பு நிகழ்வுகள் என்று கொஞ்சம் காக்டெயில் போல கலந்து “புதிய தலைமுறை”யில் தருகிறார்கள். ஆனாலும் சுய முன்னேறத்தின் மூலம் சாதிக்கப் போகும் அந்த இந்திய வல்லரசுக் கனவுதான் இவர்கள் சட்டியில் இருக்கும் ஒரே பதார்த்தம்.

புதிய தலைமுறை இதழின் செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா இருவரும் நடிகர் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகரைப் பற்றியதென்பதால்  இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது சூர்யா மாபெரும் சாதனையாளராகவும், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரவசப்படுகிறார்கள். இதை எழுதியவர்களுக்கும் நிறைய பாராட்டுக்கள்! இப்படி ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்காக நாமும் பாராட்டினை தெரிவித்துக் கொள்வோம்.

சூர்யாவின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன? திறமையா? பின்னணியா?

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா? முடிந்தால் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதில் சரவணன் எனும் சராசரி நடுத்தர வர்க்க இளைஞன் இன்று வெற்றியடைந்த திரை நட்சத்திரமாக உயர்ந்திருப்பதை சிலாகித்து சொல்கிறார்கள். கல்லூரி முடித்த சரவணன் வேலைக்கு மிகவும் மெனக்கெடவில்லை. அவரது உறவினர்கள் கார்மெண்ட் தொழிலில் இருந்தபடியால் ஒரு வேலையை தேடிக்கொள்கிறார். இதில் தனிப்பட்ட சாதனை எங்கே உள்ளது? அதே போல பட்டப்படிப்பு முடித்ததே சாதனையென்றால் தமிழகத்தில் வருடா வருடம் சில இலட்சம் சாதனையாளர்களை நாம் வாழ்த்த வேண்டும்.

மேலும் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளமும், அதற்குரிய சமூக அங்கீகாரமும், இறுதியாக சுயசாதி உறவினர்களது ஆதரவும்தான் அய்யாவின் துணித் தொழில் இரகசியம். இதில் அவர் கடுமையாக உழைத்து எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியை அடைகிறாராம். எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?

அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள்.  இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?

இடையில் வீட்டிற்கு வரும் இயக்குநர்கள் சரவணனை நடிக்க வரும்படி அழைக்கிறார்களாம். அவரோ விருப்பமில்லாமல் தட்டிக் கழிக்கிறாராம். இதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். தமிழகத்தில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் யாராவது ஒரு இயக்குநர் நடிக்க வரும்படி அழைத்தால் என்ன செய்வான்? காலில் விழுந்து அதை ஏற்றுக் கொள்வான். இங்கே சிவக்குமார் பையன் என்ற காரணத்திற்காக வாரிசு அடிப்படையில் மட்டுமே பலர் கூப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் போண்டா இயக்குநர்கள் என்று கருதிய சரவணன் இறுதியில் அறிவாளி இயக்குநர் மணிரத்தினம் சொந்தப் படம் என்று அழைத்ததும் தட்டமுடியாமல் சம்மதிக்கிறாராம். இப்படியாக “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகிறார்.

இந்தக் காலத்தில்தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளே நுழைய முடியும் என்ற நிலை உருவாகிறது. விஜய், சிம்பு, சூர்யா, அருண் விஜயகுமார், தனுஷ், ஜெயம்ரவி, அதர்வா, விஷால், சிபிராஜ், பிரஷாந்த், கார்த்தி என்று ஏராளம்பேர் வாரிசு தகுதியில்தான் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதன்படி சரவணன் சூர்யாவாக மாறியதற்கு சொந்த தனிப்பட்ட தகுதி ஏதும் காரணமில்லை. சொல்லப் போனால் சூர்யாவை விட பல தகுதி கொண்ட இளைஞர்களெல்லாம் இந்த சமூகப்பின்னணி இல்லாமல்தான் சினிமாவில் நுழைய முடியவில்லை.

ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும்  கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆக அரசியல், சினிமா, ஊடகம் எல்லாம் பணக்கார குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த நாட்டில் மக்களெல்லாம் அடிமைகள் என்றே பொருள். சூர்யா சினிமாவில் நுழைந்தது என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்.

அடுத்து ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்கள் அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தோல்வியாம். இதற்குப் பிறகுதான் அவர் டான்ஸ், சண்டை என்ற வித்தைகளையெல்லாம் கற்கிறாராம். ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவராகி அதன் பிறகு ஆயிரத்தெட்டு வசதிகளோடு அரசியல் ‘கற்பது’ போல நம்ம சூர்யாவும் கற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவரது படங்கள் தோல்வியடைந்தன என்றாலும் சினிமா உலகில் இருந்து அவர் தூக்கியெறியப்படவில்லை.

பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்ற கிராமத்து இளைஞர்களெல்லாம் கனவுடன் சென்னை வந்து தமிழக சினிமாவை ஆட்டுவித்ததெல்லாம் இன்று கனவில் கூட சாத்தியமில்லை. ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர சாதாரண இளைஞர்கள் எவரும் சினிமாவில் நுழைய முடியாதபடி அங்கே பெரும் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. வசதி, சிபாரிசு, அரசியல் பின்னணி என்று இருந்தால்தான் முடியும்.

இப்படித்தான் உண்மையான திறமைகள் தமிழ் சினிமாவில் நுழைய முடியாமலும், அப்படி நுழைந்தாலும் சில ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆக சூர்யா தனது மேலான பின்னணி காரணமாக பெரிய போட்டிகள் எதுவுமின்றி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நீடித்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரும் சூர்யாவை வைத்து நந்தாவை எடுத்தாராம். அதன் பிறகு ஏறுமுகமாம்.  இதில் என்ன முன்மாதிரி உள்ளது? இயக்குனர் சொன்னபடி கேட்டு ஒருவர் நடித்திருக்கிறாரே அது அவரது ஆற்றலில்லையா என பலர் கேட்கலாம்.  மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி.  சில நல்ல இயக்குநர்கள, விறுவிறுப்பான கதைகள், வெற்றியடைந்த இசை என்று காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் சூர்யாவின் வெற்றிப் பின்னணி. இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.

மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  சான்றாக நடிகர் விஜயை எடுத்துக் கொள்வோம். சூர்யா போல இல்லாமல் அப்பா சந்திரசேகரால் திட்டமிட்டு வளர்த்து நுழைக்கப்பட்டவர் விஜய். நடிக்க வரும்போதே அவருக்கு நடனம், சண்டை, ஃபார்முலா நடிப்பு எல்லாம் தெரியும். ஆனால் ஆரம்ப காலத்தில் வரும் விஜயின் முகத்தை நீங்கள் கூட சகித்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் எஸ்.ஏ சந்திரசேகர் மகனுக்கு ஜோடியாக சங்கவி போன்ற நடிகைகளை கவர்ச்சி காட்டி நடிக்க வைத்தார். காதல் காட்சிகளையெல்லாம் நீலப்படங்கள் போல எடுத்தார். அதனால் அன்று ரசிகர்கள் விஜயைப் பார்க்க சென்றார்கள் என்பது கூட உண்மையில்லை. ஆனால் அசராத தந்தையின் முயற்சியால் விஜய் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க அந்த முகம் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள தகவல் ஊடக தொழில் நுட்பத்தில் ஒரு வீட்டுப் பூனையைக்கூட ஒருசிலபடங்களில் நடிக்க வைத்து ஸ்டாராக மாற்ற முடியும். தேவர் பிலிம்சின் ஆடு,மாடு, யானைகளெல்லாம் உழைத்து முன்னேறிய கதையாக ஒத்துக் கொண்டால் நாம் சூர்யாவையும் ஒத்துக் கொள்ளலாம்.

கல்வி கற்பது மக்களது உரிமையா? வள்ளல்களது தர்மமா?

சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?

கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிவிடுவது மக்களை பிச்சைக்காரர்களாக்கும் உத்தி என்று நோகாமல் எக்காளம் பேசுபவர்கள் சூர்யாவின் இந்த கல்விப் பிச்சை பற்றி என்ன சொல்வார்கள்? உடனே இது கல்வி என்பதால் டி.வியோடு ஒப்பிட முடியாது, படிப்பைக் கொடுத்தால் அந்த பையன் தனது எதிர்காலத்தை தானே அடைவான், இது அடிப்படையான சமூக மாற்றத்திற்கான உதவி என்று வாதாடுவார்கள்.

ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.

நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?

சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா?  எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.

ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.

நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. அயன் படத்தின் டிக்கெட் சிலநூறுகள் என்றால் அது பல ஆயிரங்களில் தியேட்டர் முதலாளிக்கும், இலட்சங்களில் வினியோகஸ்தருக்கும், கோடிகளில் தயாரிப்பாளருக்கும் போகிறது. அந்த கோடிகளில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும் கோடீஸ்வரன்தான் சூர்யா. இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.

உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும். ஆளும் வர்க்கமும் அதைத்தான் விரும்புகிறது. மக்களைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது “கார்ப்பரேட் சமூக பொறுப்பு” என்று சீன்போடுவது அதிகரித்திருக்கிறது.

நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.

முதல் பதிவு: வினவு

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!

தொடர்புடைய பதிவுகள்:

2020ல் நம்ம நாடு வல்லரசாக மாணவர்களே கனவு காணுங்கள்… O.K அங்கிள்!

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ரூபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல்

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

 பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை.

அணு உலை பாதுகாப்பானதுனா அதை உங்க பாராளுமன்றத்துல போய் வைங்கடா!

பிப் 25, 2012 அன்று “ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! ” என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் புமாஇமு சென்னை கிளை தோழர்கள் நிகழ்த்திய நாடகம்….

தொடர்புடைய பதிவுகள்:

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!