ஜுலை/1/2009 அன்று, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கேள்வி நேரத்தில் பன்னீர் செல்வம் – அதிமுகவின் அரசுப் பள்ளி பற்றிய கேள்விக்கு அளித்த பதில் பின்வருமாறு:
பன்னீர் செல்வம் – அதிமுக: தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் சேரும் நிலை உள்ளது. எனவே, தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துமா?
தங்கம் தென்னரசு: அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர் என எதிர்கட்சி துணைத் தலைவர் கூறியதே அரசுப் பள்ளிகள் தரமாக செயல்படுகின்றன என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்.
ஒரு கி. மீ., க்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி. மீ., க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 7 கி. மீ., க்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளை துவக்கி அரசு நிர்வகித்து வருகிறது.
முதலில், பன்னீர் செல்வத்தின் கேள்வியை பார்ப்போம். ஏன், 2003-ல் 92 பச்சிளம் குழந்தைகள் கும்பகோணத்தில் கதற. கதற தீயில் இறந்த பின்பும், அன்றே அனைத்து தனியார் பள்ளிகளை ஏன் அரசு ஏற்று நடத்தவில்லை? அதுவும், அன்று ஆட்சியில் இருந்தது அதிமுக தானே?
சரி, இப்பொழுதாவது “இனி அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து தனியார் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் அரசுடைமை ஆக்கப்படும்” என்று ‘வெற்று’ வாக்குறுதியை குடுக்கமுடியுமா?
இப்போது பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலான, “அரசுப் பள்ளிகள் தரமாக செயல்படுகின்றன மற்றும் ஒரு கி. மீ., க்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி. மீ., க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 7 கி. மீ., க்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளை துவக்கி அரசு நிர்வகித்து வருகிறது” என்பதற்கு வருவோம். இந்த கூற்று எவ்வளவு பெரிய அண்ட பொய் என்பது எந்தவொரு பாமர மனிதனுக்கும் தெரியும். இந்த பொய்களை, கீழ்கண்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களே அம்பலப்படுத்துகின்றன.
மாணவர்கள், பள்ளியின் தரத்தை உயர்த்த கோரி வகுப்பை புறக்கணித்து போராட்டம்:
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆறு கிராமங்களை சேர்ந்த 431 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணவர்கள், 9ம் வகுப்புக்கு மேல் படிக்க சோழவரம் செல்ல சென்னை-கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் ஆபத்தான் சூழலில் பள்ளி செல்ல வேண்டியுள்ளது.
பள்ளி மூலமாக கடந்த ஆண்டு (2008) மார்ச் மாதம் தரம் உயர்த்துவதற்கான விண்ணப்ப மனுவுடன் அதற்குண்டான் பணமும் கிராம மக்கள் செலுத்தினர். ஒரு வருடத்திற்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொறுமையிழந்த கிராம மக்கள், தங்கள் பிள்ளைகள் மூலம் பள்ளியை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன்படி 29/06/2009 அன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளி தொடங்கும் முன் அனைவரும் வெளியேறி பள்ளியை புறக்கணித்தனர் (தினமலர், 30/06/2009).
இதுதான், பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லும் 7 கி. மீ., க்கு ஒரு மேல்நிலைப் பள்ளியோ? ஆறு கிராமங்கள் ஒரே கி. மீ., க்குள் வந்து அடங்கி விடுகிறதோ?
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து சூணாம்பேடில் அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்:
சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,450க்கும் மேற்பட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தரம் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வாயால் சொன்னால், பின்வருமாறு இருக்கும்.
அ) அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்கள் 35. ஆனால், தற்போது 12 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆ) கடந்த ஏழு ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
இ) ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ், சமூக அறிவியல், கணிதம் அறிவியல் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் கூட இல்லை.
இதனால் வெறுப்படைந்த மாணவர்கள், ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து 2/07/09 அன்று போராட்டதில் குதித்தனர் (தினமலர், 2/07/09).
இதுதான், பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லும் அரசுப் பள்ளியின் தரமோ?
இதுமாதிரி, பெற்றோர்கள், மாணவர்களின் போராட்டம் நாளொரு வண்ணமும் வந்துகொண்டே இருப்பது அனைவரும் அறிந்த சேதி. இப்போது சொல்லுங்கள், கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து அரசுக்கல்வியை எதிர்பார்க்க முடியுமா?
தீர்வுதான் என்ன?
விடை வேறெதும் இல்லை! தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை!
அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!
இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!
Filed under: கல்வி கட்டணக்கொள்ளை








